முன்னோக்கு

உள்நாட்டு போர் தேர்தல்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இப்போதிருந்து இன்னும் எட்டு வாரங்களே உள்ளது. ட்ரம்ப் மற்றும் பைடெனுக்கு இடையிலான பிரச்சாரமானது, எப்போதும் போல எதேச்சதிகாரம் மற்றும் போரை நோக்கிய முனைவுக்கு எந்த உண்மையான மாற்றீடும் வழங்காத ஜனநாயகக் கட்சி பிரச்சாரத்திற்கு எதிராக அதிகரித்தளவில் பகிரங்கமாக வன்முறை மற்றும் பொலிஸ் அரசு ஒடுக்குமுறைக்கு முறையீடு செய்து வரும் ஒரு நிர்வாகத்தை எதிர்நிறுத்தி உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் வெறித்தனமாக சோசலிச-விரோத அடித்தளத்தில் ஒரு வலதுசாரி பாசிசவாத இயக்கத்தைக் கட்டமைப்பதற்கான முயற்சியில் இந்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி வருகிறது. கடந்த மாதம் விஸ்கான்சின் கெனோசாவில் இரண்டு போராட்டக்காரர்களைப் படுகொலை செய்து மூன்றாவதாக ஒருவரைக் காயப்படுத்திய கெய்ல் ரிட்டன்ஹவுஸைப் புகழ்ந்துரைத்ததைப் பின்தொடர்ந்து, ட்ரம்ப், பொலிஸ் வன்முறையை எதிர்க்கும் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பழிவாங்கும் வெறி செயல்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

திங்கட்கிழமை அவரின் பத்திரிகையாளர் சந்திப்பில், ஜனாதிபதி கடந்த வாரம் அமெரிக்க தளபதிகளால் போராட்டக்காரர் Michael Reinoehl கொல்லப்பட்டதைப் பாராட்டினார். “யாரேனும் சட்டத்தை மீறினால், அங்கே ஒருவித பதிலடி கொடுக்கும் வடிவம் இருக்க வேண்டும்,” என்று அறிவித்த ட்ரம்ப், அவர் ஆதரவாளர்கள் நடத்தும் நீதி விசாரணையற்ற பதிலடி நடவடிக்கைகளை மன்னித்து வருகிறார். அதே நாளில், அவர் வலதுசாரி கருத்துரையாளர் தினேஷ் டி'சோஸாவின் ஓர் அறிக்கையை மறுட்வீட் செய்தார். அரசியல் அமைதியின்மை "நாடெங்கிலும் குடிமக்களின் போராளிகள் குழுக்களை அதிகரிக்க" வழிவகுக்கும் என்றவர் ட்வீட் செய்திருந்தார் —அதாவது, இது ஒரேகன் போர்ட்லாந்தில் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவதற்கு பொறுப்பான Patriot Prayer போன்ற பாசிசவாத "விழிப்புணர்வு" அமைப்புகளைக் குறிப்பதாகும்.

உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டுள்ளதைப் போல, ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடவில்லை; அவர் பாசிச தலைவர் (Führer) ஆவதற்குப் போட்டியிட்டு வருகிறார். அவர் பிரச்சாரம் 1932 இல் ஜேர்மன் சான்சிலர் பதவிக்கு ஹிட்லர் போட்டியிட்ட மாதிரியில் இருப்பதாக தெரிகிறது. ட்ரம்ப், அமெரிக்க வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத மொழிகளைப் பயன்படுத்தி, நவம்பர் 3 தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும், அவர் அரசியலமைப்பை மீறிய வலதுசாரி இயக்கத்தின் தலைவராக மேலெழக்கூடிய நிலைமைகளை உருவாக்க முயன்று வருகிறார்.

ட்ரம்ப் ஜெயித்தால், அவர் உடனடியாக ஜனநாயக உரிமைகளை நசுக்குவதைத் தீவிரப்படுத்தி, பொலிஸ் அரசு ஆட்சி வடிவத்தை நடைமுறைப்படுத்துவார்.

இத்தகைய நிலைமைகளின் கீழ், ட்ரம்புக்கு எதிரான எல்லா எதிர்ப்பும் பைடென் தேர்ந்தெடுக்கப்படுவதற்குப் பின்னால் திருப்பி விடப்பட வேண்டும் என்பதே ஜனநாயகக் கட்சியின் வாதமாக உள்ளது. ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் அவர்களின் போராட்டங்களை ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பரிசீலனைகளுக்கு அடிபணிய வைப்பது ஒரு பேராபத்தான அரசியல் தவறாக இருக்கும்.

ட்ரம்ப் எங்கிருந்தோ வந்தவரில்லை. அவர் முக்கியமாக பாசிசவாத, ஜனநாயக விரோதமான ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் வர்க்கத்தினது வேட்கையின் மிகவும் தூய்மையான வடிவத்தை வெளிப்படுத்துகிறார். ட்ரம்ப் நரகத்திலிருந்து கட்டவிழ்ந்து வந்த ஏதோவொரு வித கொடூர அரக்கர் அல்லர். எதேச்சதிகாரம் மற்றும் பாசிசவாதத்தின் வளர்ச்சியானது, பிரேசில் மற்றும் இந்தியாவில் இருந்து பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வரையில் ஓர் உலகளாவிய நிகழ்வுப்போக்காக உள்ளது என்ற உண்மையில் இது எடுத்துக்காட்டப்படுகிறது.

ட்ரம்ப் ஒரு வெளிப்பாடாக இருக்கும் அந்த நோயின் அடியிலுள்ள விடயத்தை நோக்கி தொழிலாள வர்க்கம் அதன் எதிர்ப்பை வழிநடத்த வேண்டும். இந்த நெருக்கடிக்கு என்னென்ன நிலைமைகள் எரியூட்டி வருகின்றன?

முதலாவதாக, இந்த கொரொனா வைரஸ், சமூகத்தை முதலாளித்துவம் எந்த பேரழிவுகரமான நிலைமைக்குக் கொண்டு வந்துள்ளது என்பதை அம்பலப்படுத்தி உள்ளது. இதுவொரு அதீத வெளிப்பாடு என்பதுடன், பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் இலாபகர நலன்களுக்கு ஒவ்வொன்றும் அடிபணிய செய்யப்பட்டதன் விளைவாகும்.

இந்த வைரஸ் கட்டுப்பாடின்றி பரவுவதற்கு அனுமதித்து, ஆளும் வர்க்கம் நடைமுறையளவில் "சமூக நோய் எதிர்ப்புச் சக்தி பெருக்கும்" (herd immunity) கொள்கையை ஏற்றுள்ளது. ட்ரம்பால் முன்னெடுக்கப்பட்டு ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினரால் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரம் ஏற்கனவே மிகப் அதிகளவில் மரண எண்ணிக்கை அதிகரிப்பதற்கு இட்டுச் சென்றுள்ளதுடன், இப்போது அது 200,000 ஐ எட்டி வருகிறது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை இந்தாண்டு இறுதிக்குள் 400,000 க்கும் அதிகமான அதிகரிக்கக்கூடும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகம் இப்போது மதிப்பிடுகிறது.

இரண்டாவதாக, இந்த தொற்றுநோயின் உடல்நல பாதிப்புகளுடன் சேர்ந்து அது மில்லியன் கணக்கானவர்களுக்கு சமூக மற்றும் பொருளாதார நெருக்கடியை ஆழப்படுத்தி வருகிறது. மீண்டும் வேலைக்குத் திரும்புவதற்கான பிரச்சாரத்திற்கு மத்தியில், இந்த தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் இருந்ததை விட இப்போது 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைகள் குறைந்து போயுள்ளன. மத்திய அரசின் வேலைவாய்ப்பின்மை சலுகைகளைக் காங்கிரஸ் சபை காலாவதியாக அனுமதித்து, மில்லியன் கணக்கானவர்களை வறுமையில் தள்ளி ஆறு வாரங்கள் ஆகியுள்ளது. இந்தாண்டு பட்டினியை முகங்கொடுக்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 50 மில்லியனுக்கும் அதிகமாக, 45 சதவீதம் அதிகரிக்குமென எதிர்நோக்கப்படுகிறது.

மார்ச் இறுதியில் அண்மித்து ஒருமனதான ஆதரவுடன் காங்கிரஸ் சபையில் நிறைவேற்றப்பட்ட வோல் ஸ்ட்ரீட்டுக்கான பல ட்ரில்லியன் டாலர் பிணையெடுப்பு, செல்வந்த தட்டுக்களின் செல்வவளத்தைப் பாரியளவில் அதிகரித்தது. செவ்வாய்கிழமை, போர்ஃப்ஸ் பத்திரிகை அமெரிக்க பில்லியனர்களின் செல்வவளம் மீது அதன் சமீபத்திய விபரங்களைப் பிரசுரித்து, ஓராண்டுக்கு முன்னர் 240 பில்லியன் டாலரில் இருந்த மிகப்பெரும் 400 பணக்காரர்களின் செல்வவளம் சாதனையளவிற்கு 3.2 ட்ரில்லியன் டாலர்களை எட்டியிருப்பதாக அறிவித்தது.

மூன்றாவதாக, ஆழமடைந்து வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியானது ஆளும் வர்க்கம் உள்நாட்டில் அதன் பிரச்சினைகளைத் தீர்க்க வெளிநாடுகளில் போரை ஒரு வழிவகையாக பார்க்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. ட்ரம்ப் நிர்வாகம் சீனாவுக்கு எதிரான அதன் அத்துமீறலின் பாகமாக தென் சீனக் கடலில் ஆக்ரோஷமான நகர்வுகளைச் செய்து வருகிறது, அதேவேளையில் ஜனநாயகக் கட்சியினரோ, அவர்கள் அதிகாரத்திற்கு வந்தால், ரஷ்யாவுடனான மோதலையும் மத்திய கிழக்கில் போரையும் தீவிரப்படுத்த பொறுப்பேற்றுள்ளனர்.

இத்தகைய நிலைமைகளில் தான் ட்ரம்ப் நிர்வாகம் விடையிறுத்து வருகிறது. அமெரிக்காவில் பாசிசம் வேண்டாம்! ட்ரம்பைப் பதவியிலிருந்து வெளியேற்ற ஒரு வெகுஜன இயக்கத்தைக் கட்டமைப்போம்! என்ற அதன் அக்டோபர் 19, 2019 அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு அறிவித்தது:

ட்ரம்பின் தலைமை, முற்றிலும் பாசிச குணாம்சங்களுடன் ஒரு வலதுசாரி சர்வாதிகார ஆட்சியை நோக்கி விரைவாக மாற்றமடைந்து கொண்டிருக்கிறது என்ற உண்மையை குறைத்து மதிப்பிடுவதும், மறுப்பதும், அரசியல் யதார்த்தத்தினை நோக்கி கண்ணை மூடிக்கொள்வது போன்றதாகும். “இது இங்கே நடக்காது” என்ற பழைய பல்லவி – அதாவது, அமெரிக்க ஜனநாயகம், பாசிச புற்றுநோய்க்கு நிரந்தரமாக தடுப்பாற்றலைக் கொண்டது என்பது நம்பிக்கையற்ற முறையில் காலாவதியாகிவிட்டது. ட்ரம்பைப் போன்ற ஒரு போக்கிரி வெள்ளை மாளிகைக்கு உயர்ந்திருப்பது தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையின் மரண நெருக்கடிக்கு சாட்சியமளிக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள் கடந்தாண்டு தீவிரமடைந்து மட்டுமே உள்ளன என்பதுடன், கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பரந்தளவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ட்ரம்பின் பாசிசவாத வாய்சவடால் பெருநிறுவன மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் அதிகரித்து வரும் சமூக இயக்கத்திற்குப் பதிலடி கொடுப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

ஆனால் ஜனநாயகக் கட்சியோ, அதே செல்வந்த தட்டுக்களின் மற்றொரு கன்னையைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. அது அரசியல் அதிகாரத்திற்கு மத்தியஸ்தம் செய்பவர்களாக இராணுவம் மற்றும் உளவுத்துறை முகமைகளில் உள்ள செல்வாக்கான அணிகளுக்கு முறையிடுவதுடன், ட்ரம்ப் பதவியிலிருந்து விலக மறுத்தால் அது அவர்களை நோக்கித் தான் திரும்பும். ஆளும் உயரடுக்கின் நலன்களை அச்சுறுத்தும் எந்தவொரு சமூக எதிர்ப்பு வடிவத்தையும் நசுக்குவதே அதன் பிரதான நோக்கமாக உள்ளது.

கடந்த வாரம் முழுவதும், பைடென் பொலிஸ் வன்முறை மீதான போராட்டங்களை கண்டித்ததுடன், சோசலிசத்தைத் தாக்கியிருந்தார். சாத்தியமானளவுக்கு அவர் மிகவும் வலதுசாரி அடித்தளத்தில் தனது பிரச்சாரத்தை நடத்தவிருப்பதை தெளிவுபடுத்தினார். தேர்தலின் இறுதிக் கட்டங்களில், ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்காவுக்குள் இடதுசாரி எதிர்ப்பை "வெளிநாட்டு விரோதிகளின்" வேலை என்று முன்பினும் அதிக வெளிப்படையாக இலக்கு வைக்க அவர்களின் ரஷ்ய-விரோத பிரச்சாரத்திற்குப் புத்துயிரூட்ட முயன்று வருகின்றனர்.

அபிவிருத்தி அடைந்து வரும் உள்நாட்டு போர் நிலைமைகளின் கீழ் பைடென் அவரை "நடுநிலையாக உள்ள மனிதராக" காட்டிக் கொள்கிறார். அவரது பிரச்சாரம் பெருந்திரளான மக்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக பேரழிவுக்கு எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை. ஜனநாயகக் கட்சியினர் —ஈராக் போரின் முன்னணி கட்டமைப்பாளர்கள் உடனான அவர்களின் "கூட்டணி" இன் பாகமாக வரவேற்று— பகிரங்கமாகவே இராணுவவாத வன்முறையைத் தழுவுவதுடன், பாசிசவாத ட்ரம்ப் "இராணுவ-தொழில்துறை கூட்டின்" எதிர்ப்பாளராக சித்தரித்துக் கொள்வதற்கும் கூட அனுமதிக்கின்றனர்.

அனைத்திற்கும் மேலாக ஆளும் உயரடுக்கின் பொருளாதார மற்றும் நிதியியல் நலன்களுக்குக் குழிபறிக்கும் எந்தவொரு பிரச்சினை எழுவதையும் ஜனநாயகக் கட்சியினர் முற்றிலும் எதிர்க்கின்றனர். பதவிக்கு வந்தால் பைடென் பிரச்சாரம் பின்பற்றக்கூடிய சமூக கொள்கைகளைக் குறித்த ஓர் அறிகுறி, திங்கட்கிழமை வாஷிங்டன் போஸ்டில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையில் வழங்கப்பட்டது. கட்சியின் "சாண்டர்ஸ்-வாரென்" அணியுடனான விவாதங்களின் விளைவாக உள்ள கோழைத்தனமான சீர்திருத்தங்களை உள்ளடக்கிய பைடென் பிரச்சாரக் குழு வெளியிட்ட பொருளாதார முன்மொழிவுகளைக் குறிப்பிட்டு, போஸ்ட் பின்வருமாறு எழுதியது:

ஆனால் பைடென் பிரச்சாரக் குழு வோல் ஸ்ட்ரீட் தலைவர்களைப் பிரத்யேகமாக அழைத்து, அந்த முன்மொழிவுகள் பைடென் திட்டநிரலின் மையத்தில் இருக்காது என்பதை அது தெளிவுபடுத்தியது. “அவர்கள் அடிப்படையில் கூறினர், 'கவனியுங்கள், இது வெறுமனே வாரென் ஆட்களைச் சந்தோஷப்படுத்துவதற்கான ஒரு நடைமுறை தான், அதைக் குறித்து நிறைய வாசிக்க வேண்டாம்,'” என்று செனட்டர் எலிசபெத் வாரெனின் (District of Massachusetts) தாராளவாத ஆதரவாளர்களைக் குறிப்பிட்டு ஒரு முதலீட்டு வங்கியாளர் கூறினார். பிரத்யேக உரையாடல்களை விவரித்த பெயர் வெளியிடாமல் பேசிய அந்த வங்கியாளர், அந்த சேதி பல அழைப்புகளில் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

ட்ரம்ப் மீதான அதன் அனைத்து கண்டனங்களைப் பொறுத்த வரையில், ஜனநாயகக் கட்சி அவர் பின்பற்றி வரும் கொள்கைகளின் இன்றியமையா பாசிசவாத தன்மையைக் குறித்து எதுவும் குறிப்பிடுவதில்லை. கடந்த தேர்தலில் மூன்று மில்லியன் வாக்குகளில் ட்ரம்ப் தோல்வியடைந்த போதும் கூட, ஜனநாயகக் கட்சி அதன் உடனடி விடையிறுப்பாக ஒத்துழைப்பை வழங்க முன்வந்தது என்பதை நினைவுக்கூர வேண்டும். ஒபாமா கூறுகையில், அந்த தேர்தல் ஒரே அணியின் இரண்டு தரப்புகளுக்கு இடையிலான "உட்கட்சி பூசல்" என்றார்.

நவம்பர் 3 தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் தோற்றாலும், அல்லது அவர்கள் ஜெயித்தாலும் கூட, விடையிறுப்பு வித்தியாசமாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. அவர்கள் உடனடியாக ட்ரம்ப் மற்றும் குடியரசு கட்சிக்குச் சமாதானத்தை வழங்குவார்கள்.

பின்தொடர்பவர்களை ஈர்த்து ட்ரம்பால் அவர்களைத் தக்க வைக்க முடிகிறது என்றால், அது பெரிதும் சமூக நெருக்கடியைத் தீர்க்க எதுவும் செய்யவியலாத ஜனநாயகக் கட்சியினரின் திராணியின்மையின் விளைபொருளாகும். முடிவாக, நிஜமான வித்தியாசம் பெரியளவில் ஒன்றுமில்லை, அனைத்திற்கும் மேலாக இது வெளியுறவு கொள்கை மீது குவிந்துள்ளது. பாரிய உயிரிழப்புகள் மற்றும் சமூக சீரழிவு நிலைமைகளின் கீழ், போட்டியே கூட நெருக்கமாக உள்ளது என்ற உண்மை ஜனநாயகக் கட்சி மீதான ஒரு குற்றப்பத்திரிகையாக உள்ளது. அது பிரதிநிதித்துவப்படுத்தும் வர்க்க நலன்களின் காரணமாக முக்கியமாக அது மக்களுக்கு முறையீடு செய்ய தகுதியிழந்துள்ளது.

தொழிலாள வர்க்கத்தின் மூலோபாயம் தேர்தல் கணக்குகளால் அல்ல, மாறாக வர்க்க போராட்ட தர்க்கத்தால் வழி நடத்தப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் நமது தேர்தல் பிரச்சாரக் குழுவும் —ஜனாதிபதி வேட்பாளராக ஜோசப் கிஷோரும் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளராக நோரிஸ்சா சாந்தா குரூஸூம்— நமது கவனம் முழுவதையும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியை நோக்கி திருப்பி உள்ளனர். இந்த தேர்தலை ஓர் இறுதி முடிவாக பார்க்கக் கூடாது, மாறாக ஒரு பரந்த நிகழ்ச்சிப்போக்கின் பாகமாக பார்க்கப்பட வேண்டும். இதன் முடிவு என்னவாக இருந்தாலும் —வெள்ளை மாளிகைக்கு ட்ரம்ப் வந்தாலும் சரி அல்லது பைடென் வந்தாலும் சரி அல்லது நேரடியாக இராணுவ தலையீடு இருந்தாலும் கூட— இது தொழிலாள வர்க்கத்தைத் தயாரிப்பு செய்யும்.

ஏற்கனவே அங்கே தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது. தொற்றுநோய் அதிகரித்து வருவதற்கு மத்தியில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளுக்கு எதிராக ஆசிரியர்களும் பெற்றோர்களும் அணிவகுத்து வருகிறார்கள். கல்வியாளர்களும் மாணவர்களும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை அபாயகரமாக மீண்டும் திறப்பதற்கு எதிராக போராட தொடங்கியுள்ளனர், 1,000 விரிவுரையாளர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களால் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கிய ஒரே வேலைநிறுத்தம் இதில் உள்ளடங்கும்.

வேலைக்கு திரும்ப செய்யும் பிரச்சாரத்திற்கும் மற்றும் இந்த தொற்றுநோயை பயன்படுத்தி சுரண்டலை அதிகரிப்பதற்கான பெருநிறுவனங்களின் முயற்சிகளுக்கும் அங்கே வாகனத்துறை தொழிலாளர்கள், அமசன் தொழிலாளர்கள், போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள், சேவைத்துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவுகளிடையே கோபம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டு வறுமை மற்றும் வீட்டைவிட்டு வெளியேற்றப்படும் நடவடிக்கைகளை முகங்கொடுத்து வருகின்ற மில்லியன் கணக்கானவர்களிடையே "அதிருப்தியின் குளிர்" உள்ளூர உருவெடுத்து வருகிறது.

இத்துடன் சேர்ந்து மே மாத இறுதியில் ஜோர்ஜ் ஃபுளோய்ட் படுகொலையால் தூண்டிவிடப்பட்ட பொலிஸ் வன்முறை மற்றும் இனவாதம் மீது போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முடிவில்லா பொலிஸ் வன்முறை தொற்றுநோயால் எரியூட்டப்பட்டிருந்தாலும், அந்த போராட்டங்கள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடை நிலவும் ஆழ்ந்த சமூக கோபத்திற்கும் திருப்பி போராட வேண்டுமென்ற விருப்பத்திற்கும் வெளிப்பாட்டை வழங்கி உள்ளன.

தொழிலாள வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளின் இந்த போராட்டங்கள், ஆலைகளிலும், வேலையிடங்கள் மற்றும் அண்டை பகுதிகளிலும் சுயாதீனமான பாதுகாப்பு குழுக்களை உருவாக்குவதன் மூலமாக ஒருங்கிணைக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். பள்ளிக்குத் திரும்ப செய்வதற்கான பிரச்சாரத்திற்கு எதிரான ஆசிரியர்களின் போராட்டம் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு எதிரான மாணவர்களின் போராட்டம், ஆலைகளில் நிலவும் கடுமையான நிலைமைகளுக்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம், சமூக சீரழிவுக்கு எதிராக வேலைவாய்ப்பற்றோரின் போராட்டம், பொலிஸ் வன்முறைக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.

ஒவ்வொரு போராட்டத்திலும் அரசியல் அதிகாரம் சம்பந்தப்பட்ட கேள்வியே பிரச்சினையில் உள்ளது: அதாவது, எந்த வர்க்கத்தின் ஆட்சி, யாருடைய நலன்களுக்காக ஆள்கிறது! முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக இயக்கப்படும் ஒரு தீர்வுதான் இந்த நெருக்கடிக்கான ஒரே தீர்வாகும். பணக்காரர்களுக்குப் பிணையெடுப்பு வழங்கவும் இராணுவவாதம் மற்றும் போருக்கு நிதி வழங்கவும் ஒதுக்கப்பட்ட பாரியளவிலான சமூக ஆதாரவளங்களைத் திருப்பி விடுவது அவசியமாகும். செல்வந்த தட்டுக்களின் செல்வ வளங்கள் கையகப்படுத்தப்பட்டு, உயிர்களைக் காப்பாற்றுவதற்காக உலகளாவிய ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்திற்கான நிலைமைகளை உருவாக்க மிகப் பிரமாண்டமான பெருநிறுவனங்களும் வங்கிகளும் பொதுத்துறை அமைப்புகளாக மாற்றப்பட வேண்டும்.

இந்த தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் பிரதானமாக மருத்துவத்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினை இல்லை. சமூக சமத்துவமின்மை, வறுமை, போர், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் சர்வாதிகாரம் என தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு மிகப்பெரும் பிரச்சினையும் போலவே, இதுவும் ஓர் அரசியல் மற்றும் புரட்சிகரக் கேள்வியாகும், இது தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து அதிகாரத்தை அதன் சொந்த கரங்களில் எடுத்து, சமூக தேவையின் அடிப்படையில் சமூகம் முழுவதையும் மறுகட்டமைக்க வேண்டிய கேள்வியை உயர்த்துகிறது.

இந்த வேலைத்திட்டம் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் போராட்டங்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான அடித்தளமாகவும், அனைத்திற்கும் மேலாக உலகெங்கிலும் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமையாகவும் மாற வேண்டும்.

அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் முக்கியமானது. சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள நமது சகோதர கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச தலைமையைக் கட்டமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இது மிகவும் அவசர அரசியல் பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதைக் கட்டமைக்கும் இன்றியமையா தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்.

Loading