நிறுவனம் மருத்துவ காப்பீட்டை வெட்டுவதுடன், வேலைநிறுத்த உடைப்பாளர்களை உள்ளே கொண்டு வருவதால், வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு தயாராகின்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செவ்வாய்க்கிழமை, அண்ணளவாக 3,000 வொல்வோ கனரக வாகனத் தொழிலாளர்கள் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக வெளிநடப்பு செய்த அடுத்த நாளே, மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான மருத்துவ காப்பீட்டை வெட்டியதுடன், வேர்ஜீனியாவின் டப்ளினில் உள்ள நியூ ரிவர் வலி (NRV) ஆலைக்குள் வேலைநிறுத்த உடைப்பாளர்களை கொண்டு வந்தது, அத்துடன் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய அச்சுறுத்தும் கடிதங்களை அனுப்பவும் தொடங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை, நிறுவன சார்பு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஐக்கிய வாகனத்துறை தொழிற்சங்கத்தின் (United Auto Workers-UAW) இரண்டாம் கட்ட முயற்சியை 90 சதவீத வொல்வோ தொழிலாளர்கள் நிராகரித்தனர். மேலும், முதல் முறை காட்டிக்கொடுப்பு ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு முன்னரே ஏப்ரல் 30 அன்று இரண்டு வார கால வேலைநிறுத்தத்தை UAW தடுத்து நிறுத்தியது, இதுவும் 90 சதவீத தொழிலாளர்களின் வாக்களிப்புடன் நிராகரிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தத்தின் இரண்டாவது தோல்வியைத் தொடர்ந்து, திங்கட்கிழமை நண்பகல் தொடங்கிய வேலைநிறுத்தத்தை புதுப்பிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று UAW உணர்ந்தது.

ஏப்ரலில் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வொல்வோ தொழிலாளர்கள் (UAW Local 2069/Facebook)

UAW ஆல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தசாப்தத்திற்கும் மேலான ஊதியம் மற்றும் ஆதாய சலுகைகளை மீட்டெடுக்க தீவிர போராட்டத்தில் இறங்க தீர்மானிக்கப்பட்ட மறியல் போராட்டங்களுக்கு தொழிலாளர்கள் திரும்பியுள்ளனர், அதிலும் குறிப்பாக, சுவீடனைத் தளமாகக் கொண்ட பெருநிறுவனம் பில்லியன்களில் இலாபங்களை ஈட்டும் மற்றும் அதன் முதலீட்டளார்களுக்கு சாதனை மட்டத்திலான இலாபப்பங்கீட்டை வாரி வழங்கும் இந்த நேரத்தில். எவ்வாறாயினும், UAW, ஒரு உண்மையான போராட்டத்தை முன்னெடுக்கும் நோக்கம் தனக்கில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

UAW அதிகாரிகள் நிறுவனத்திடம் எந்தவித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை. இதற்கு மாறாக, பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் UAW செயலாளர் பொருளாளர் ரே கரி (Ray Curry) வொல்வோ நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தில், “நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இருவருக்குமே பயனுள்ள” ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதே தனது குறிக்கோள் எனக் கூறியுள்ளார். அதாவது, கணிசமான முன்னேற்றங்களை வெல்லக்கூடிய, பல அடுக்கு ஊதிய மற்றும் சலுகை முறை போன்ற முன்னைய ஒப்பந்தங்களில் தொழிற்சங்கத்தால் முன்வைக்கப்பட்ட கணிசமான சலுகைகளுக்குத் திரும்பக் கோரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக போராட UAW வுக்கு எந்த நோக்கமும் இல்லை என்பதையே இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்தகைய ஆதாயங்கள் நிச்சயமாக வொல்வோவின் அடிமட்டத்தை பாதிக்கும், அதனால்தான் UAW நிர்வாகிகள் இவற்றை கடுமையாக எதிர்க்கின்றனர்.

பெருநிறுவன முதலாளிகளுடன் இணங்கிப் போக UAW போதிக்கும் அதேவேளை, வொல்வோ நிர்வாகம் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு சவால் விடுத்துள்ளது. UAW லோக்கலின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஒரு சுருக்கச் செய்தியில், தொழிற்சங்க அதிகாரிகள், “ஆகவே நிறுவனம் நேற்று நள்ளிரவு நிலவரப்படி நமது காப்பீட்டை இரத்து செய்தது. நீங்கள் இப்போது UAW மூலம் COBRA வுக்கு கட்டுப்படுகிறீர்கள், கடைசியாக நீங்கள் பதிவு செய்திருந்தால், மீண்டும் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை” என்று கூறியுள்ளனர்.

1985 Consolidated Omnibus Budget Reconciliation Act, COBRA என்பது ஒரு அமெரிக்கச் சட்டமாகும், இது தொழிலாளர்களுக்கு அவர்களது முதலாளிகள் வழங்கிய மருத்துவ காப்பீட்டை தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அவர்கள் அதனை நீட்டிக்க அனுமதிக்கிறது. வேலைநிறுத்த நிதி கோப்ராவின் கீழ் காப்பீட்டு கட்டணங்களையும் செலுத்தும் என்று அதன் வலைத் தளத்தில் UAW சுட்டிக்காட்டுகின்ற போதிலும், அவர்கள் இதை “மருத்துவம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் போன்ற சில நன்மைகளுக்கு” மட்டுமே கட்டுப்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள். மேலும் அவர்கள், “காப்பீட்டில், பல், பார்வை, கேட்டல் மற்றும், நோய்வாய்ப்படுதல் மற்றும் விபத்து தொடர்புபட்ட நன்மைகள் உள்ளடங்காது” என்றும் கூறுகின்றனர்.

UAW காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்களுக்கான எதிர்ப்பை வழிநடத்திய வொல்வோ சாமானிய தொழிலாளர்கள் குழு (Volvo Workers Rank-and-File Committee-VWRFC), “உடல்நலத்திற்கு பாதுகாப்பு இல்லையா? அப்படியானால் பேச்சுவார்த்தைகளுக்கும் இடமில்லை!” என்ற தலைப்பில் செவ்வாயன்று ஒரு அறிக்கை வெளியிட்டது.

வொல்வோவின் ஆத்திரமூட்டலைக் கண்டித்து, இந்த அறிக்கை, “இது போதாது என்பது போல, பெருநிறுவன கொடுமைப்படுத்துதலை எதிர்கொள்ளும் எந்தவித நோக்கமும் இல்லாமல், UAW இந்த உண்மையை விமர்சனமின்றி அறிக்கை செய்தது. புதன்கிழமை மீண்டும் பேரம் பேசுவதற்கு தயாராக இருக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எவ்வாறாயினும், இந்த சூழ்நிலைகளில் பேரம் பேசுவதற்கு எதுவுமில்லை!” என்று கூறுகிறது.

மேலும் இது இவ்வாறு தொடர்கிறது: “சக தொழிலாளர்களே, உடல்நல பாதுகாப்பு மீதான இந்த தாக்குதல் நம் அனைவரையும் மற்றும் நமது குடும்பங்களையும் நேரடியாக அச்சுறுத்துகிறது. இந்த கொடிய தொற்றுநோய் சூழலில், இது அனைத்து உழைக்கும் மக்களின் இதயத்தையும் கிழிக்கும் குத்துவாளாக உள்ளது.”

“உடல்நல பாதுகாப்புக்கு முடிவு கட்டும் இந்த நடவடிக்கை, வொல்வொ போராட தயாராவதை தெளிவுபடுத்துகிறது. நிறுவனம், மறியல் வரம்புகளைக் கடந்து வர தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்தும், மற்றும் மாற்று தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி எங்கள் வேலைநிறுத்தத்தை முறித்துக்கொள்வதாக அச்சுறுத்தியும் உள்ள நிலையில், இது நடக்கிறது. ஆலையின் நுழைவாயிலை முற்றுகையிட வேண்டாமென காவல்துறை எங்களை அறிவுறுத்தியுள்ளது, இந்த உத்தரவுக்கு நாங்கள் கீழ்ப்படிய வேண்டுமென UAW தெளிவுபடுத்தியுள்ளது, அதாவது வேலைநிறுத்தத்தை முறித்துக்கொள்ள வேண்டும் என்பதாகும்.”

மேலும் இந்த அறிக்கை, நிறுவனம் “போராட உறுதியாக உள்ளது என்ற நிலையில், நாமும் அதிக உறுதியைக் காட்ட வேண்டும். ஒவ்வொரு சண்டைக்கும் நாம் சலுகையளித்தால், போரை வெல்வது சாத்தியமல்ல” என்றும் கூறுகிறது.

VWRFC அதன் கோரிக்கைகளை இவ்வாறு பட்டியலிடுகிறது: “முதலில், வொல்வோ முழு மருத்துவ காப்பீட்டை மீண்டும் வழங்கும் வரை, UAW அனைத்து பேச்சுவார்த்தைகளையும் உடனடியாக இரத்து செய்ய வேண்டும். இரண்டாவதாக, உடல்நல பாதுகாப்புறுதி மீளப்பெறப்படும் வரை, அனைத்து தொழிலாளர்களுக்கான முழுமையான உடல்நல பாதுகாப்புக்கான முழு செலவுகளையும் UAW தான் செலுத்த வேண்டும். 790 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியை அதிகாரத்துவ ஊழல்வாதிகளுக்கான உல்லாச விடுமுறை செலவுகள், ஆடம்பர உணவு செலவுகள் அல்லது பாரிய சட்ட கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்த பயன்படுத்தக்கூடாது. வேலைநிறுத்த நிதி என்பது எங்கள் பணம், எங்களது நலனுக்காக, எங்களது போராட்டத்திற்காக மட்டுமே அது பயன்படுத்தப்பட வேண்டும்.”

மேலும், “வேலைநிறுத்த ஊதியத்தை உடனடியாக வழங்கத் தொடங்கி, தொழிலாளர்களின் தற்போதைய ஊதிய மட்டங்களை ஈடுசெய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பட்டனியில் வீழ்த்தும் உணவு பங்கீடுகள் வேண்டாம்! மருத்துவ ரீதியாக தூண்டப்பட்ட நிதி அழிவு வேண்டாம்!” என்று கூறி இது முடிக்கிறது.

ஏப்ரல் மாத இரண்டு வார கால வேலைநிறுத்தத்தின் போது நிறுவனம் நன்மைகளை குறைக்கவில்லை, “ஏனென்றால் அந்த வேலைநிறுத்தம் UAW உடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டது” என்று ஒரு வொல்வோ தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். இருப்பினும், வொல்வோ இப்போது நன்மைகளை வெட்டுகின்றது, அதாவது, UAW ஆல் தனிமைப்படுத்தப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு போராட்டமான, பல அடுக்கு ஊதிய முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு எதிராக 2008 இல் நடந்த கடுமையான இரண்டு மாத கால வேலைநிறுத்தத்தின் போது நிறுவனம் செய்தது போல இது உள்ளது. மேலும் அவர், “மொத்த நன்மைகளுக்கான கொடுப்பனவுகளை UAW கணக்கிட்டு, அதன் அண்ணளவான 800 மில்லியன் டாலர் வேலைநிறுத்த நிதியிலிருந்து செலுத்த வேண்டும்” என்றும் கூறினார்.

மற்றொரு தொழிலாளி, “தொழிற்சங்கம் எங்களுக்கு முழு நன்மைகளையும் வழங்க வேண்டும். ஏனென்றால், இதுபோன்ற நேரங்களில் எங்களை பாதுகாக்க UAW வுக்கு பல ஆண்டுகளாக நாங்கள் சந்தா செலுத்தி வந்துள்ளோம். இது வாகன காப்பீடு செலுத்துவது போல உள்ளது, அதாவது நீங்கள் ஏதேனும் சிக்கலில் மாட்டும் போது, ‘சரி, உங்களது நான்கு டயர்களும் வெடித்துவிட்டது, இருந்தாலும் இரண்டிற்கு மட்டுமே நாங்கள் பணம் செலுத்துவோம்’ என்று அவர்கள் கூறுவது போன்றது. வாகனத்தை செலுத்துவதற்கு நான்கு டயர்கள் தேவை என்று நீங்கள் அவர்களிடம் சொல்கிறீர்கள், என்றாலும் அவர்கள், ‘மன்னிக்கவும், அது எங்கள் பிரச்சினை இல்லை’ என்று கூறுகிறார்கள்” என்று கூறினார்.

செவ்வாய்க்கிழமை காலை வொல்வோ ஒரு “டன்” அளவு வேலைநிறுத்த உடைப்பாளர்களைக் கொண்டு வந்ததாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர், அதிலும், மறியல் வரிசையில் நின்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை UAW மட்டுப்படுத்தியிருந்தும் கூட. வேலைநிறுத்த உடைப்பை நிறுத்த பெரும் மறியல் போராட்டத்தை முன்னெடுக்க, வொல்வோ மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரட்டப்படுவதை UAW மற்றும் AFL-CIO இரண்டுமே எதிர்க்கின்றன, ஏனென்றால் இது விரைவில் அவர்களது கூட்டாளியான வேர்ஜீனியாவின் ஜனநாயக ஆளுநர் ரால்ப் நோர்த்தம் (Ralph Northam) உடனான மோதலாக விரிவடையக்கூடும், இவர் மறியல் எல்லைகள் ஊடாக கருங்காலிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல மாநில பொலிஸை அனுப்பியிருந்தார்.

லோக்கல் 2069 பேஸ்புக் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு பதிவில், UAW அதிகாரிகள், வேலைநிறுத்த உடைப்பாளர்கள் மறியல் எல்லைகளை கடந்து செல்வதை தொழிலாளர்கள் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று அவர்களிடம் தெரிவித்ததுடன், “ஆலையின் நுழைவாயில்களை முற்றுகையிட வேண்டாமென மாநில காவல்துறை எங்களுக்குத் தெரிவித்துள்ளது. எவரும் சிக்கலில் மாட்டிக்கொள்வதைக் காண நாங்கள் விரும்பவில்லை, இந்த செயல்பாட்டில் சட்ட நடைமுறை நடுநிலையானதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் நிறுவனத்தின் கருங்காலிகள் நியமன நடவடிக்கையை ஏற்கனவே செயல்படுத்திய நோர்த்தம் துருப்புக்கள் “நடுநிலையானவர்கள்” அல்ல. ஒவ்வொரு வேலைநிறுத்தத்திலும் நடப்பது போல, நிறுவனங்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்கும், நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள நீதிபதிகள் பிறப்பிக்கும் தடை உத்தரவுகளை அமல்படுத்துவதற்கும் இப்போதும் காவல்துறை நிறுத்தப்படுகிறது. 1989-90 பிட்ஸ்டன் வேலைநிறுத்தத்தின் போது, வேர்ஜீனியாவின் ஜனநாயகக் கட்சி ஆளுநர் டவுக் வைல்டர் (Doug Wilder), கருங்காலிகளுக்கு பாதுகாப்பளிக்கவும், வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்களை கைதுசெய்யவும் நிலக்கரி சுரங்கப் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான மாநில காவல்படையை நிறுத்தினார்.

“எங்களது பேரம் பேசும் குழு வரம்பை தக்க வைத்துக் கொண்டு, நாங்கள் பெறத் தகுதியான ஒப்பந்தத்தை மீண்டும் கொண்டு வரவில்லை என்றாலும், 90-91 சதவீத உறுப்பினர்கள் அதைச் செய்வார்கள் என்பதை இரண்டு முறை காட்டியுள்ளனர்” என்று ஒரு இளம் வொல்வோ தொழிலாளி உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார். மேலும் “மாகாணம் முழுவதும் பூட்டப்படாமலும் மோசமான நிலையிலும் கிடக்கும் 2,000 கனரக வாகனங்களை சீர்செய்ய கருங்காலிகள் மறியல் வரம்பைக் கடந்து வேலை செய்வார்கள் என்று நிறுவனம் இப்போது நம்புகிறது. எங்களிடம் தீவிர முனைப்பு உள்ள நிலையில், அதனை முழுமையாக பயன்படுத்தக் கூடாது என்பது மிகுந்த முட்டாள்தனமான செயலாகும்” என்றும் அவர் கூறினார்.

இந்த போராட்டத்தை வெல்ல முடியும் என்பதுடன், வெல்லப்பட வேண்டும். செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட முன்னைய அறிக்கையில், VWRFC, சாமானிய தொழிலாளர்கள் வெற்றி பெற அவர்களுக்கென சொந்த மூலோபாயம் தேவை என்று விளக்கியுள்ளது. போராட்டத்தை வளர்ப்பதில், தொழிலாளர்கள் ஒரு “இரு-முன்னணி போராட்டத்தை” எதிர்கொள்வதை புரிந்துகொள்ள வேண்டும் என்று குழு கூறியது. ஒரு முன்னணி பெரும் நிறுவனத்தையும், மற்றும் நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறை ஆகிய இரு பெருவணிக ஆதரவாளர்களையும் உள்ளடக்கியது. மற்றொன்று UAW ஆகும், இது வேலைநிறுத்தத்தை வெற்றி பெற செய்வதற்கு அல்லாமல், தோற்கடிப்பதற்கான மூலோபாயத்தையே கொண்டுள்ளது.

VWRFC, வேலைநிறுத்தத்தை தீவிர முனைப்பிற்கு இட்டுச் செல்ல தேவையான தொடர்ச்சியான நடவடிக்கைகள் பற்றி சுருக்கமாக கூறியுள்ளது, இதில் UAW பேரம் பேசும் குழுவை திரும்பப் பெறுவது, பேச்சுவார்த்தைகளை சாமானிய தொழிலாளர்கள் மேற்பார்வையிடுவது, மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு UAW முழு ஊதியத்தை வழங்குவது ஆகியவை அடங்கும். மாற்றுத் தொழிலாளர்கள் நியமனத்தைத் தடுக்க பாரிய மறியல் போராட்டத்திற்கு கூட குழு அழைப்பு விடுத்துள்ளது.

அதே நேரத்தில், வொல்வோ தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் தனித்து நின்று போராட முடியாது. இதற்கு, பென்சில்வேனியா, மேரிலாந்த் மற்றும் வேர்ஜீனியாவில் உள்ள மாக் கனரக வாகனத் தொழிலாளர்கள் முதல், சுவீடன், பிரான்ஸ், பெல்ஜியம், ரஷ்யா, பிரேசில், இந்தியா மற்றும் தாய்லாந்தில் உள்ள நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய நிறுவனத்தின் பரந்த இராஜ்ஜியம் முழுவதிலிருந்தும் வொல்வோ தொழிலாளர்களை அணிதிரட்டுவது அவசியமாகும். மற்ற வொல்வோ தொழிலாளர்களை அணிதிரட்டுவது மட்டுமல்லாமல், வேலைநிறுத்தத்தின் வெற்றிக்கு அலபாமாவில் உள்ள வாரியர் மெட் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வேல் இன்கோ நிக்கல் சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் பென்சில்வேனியா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள Allegheny Technologies எஃகுத் தொழிலாளர்கள் ஆகியோரது தற்போதைய போராட்டங்களுடன் இணைந்து கொள்வது அவசியமாகும்.

இதே UAW நிர்வாகிகளுக்கு எதிராக பலமுறை கிளர்ச்சி செய்த, டெட்ராய்ட் மற்றும் பிற நகரங்களில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ், ஃபோர்ட் மற்றும் ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர்கள், வொல்வோ தொழிலாளர்களுக்கு உதவ முன்வந்து கூட்டு நடவடிக்கைகளுக்குத் தயார் செய்ய அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கடமை உள்ளது.

25 சதவீத ஊதிய உயர்வு, பல அடுக்கு முறைக்கு முடிவு கட்டுதல், மாற்று வேலை அட்டவணை கூடாது, அனைவருக்கும் ஐந்து தனிப்பட்ட வேலை நாட்கள், 4,000 டாலர் கையெழுத்திடும் மேலதிக கொடுப்பனவு, சுகாதாரப் பாதுகாப்பு செலவினங்களில் அதிகரிப்பின்மை, மற்றும் காப்பீட்டு கட்டணங்கள் அல்லது இணை ஊதியங்கள் இல்லாமல் ஓய்வு பெற்றோர் சுகாதாரப் பாதுகாப்புக்கான முழு நிதி வழங்கல் ஆகியவை உட்பட, தொழிலாளர்கள் தங்களது குறைந்தபட்ச கோரிக்கைகளை வென்றெடுக்காமல் வேலைக்கு திரும்ப மாட்டார்கள் என்று VWRFC வலியுறுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை குழுவின் அறிக்கை, “UAW வுக்கு நாங்கள் கூறிக் கொள்கிறோம்: ஒப்பந்தத்தை நாங்கள் பார்க்காமல், அதனை படிப்பதற்கு ஒரு வாரம் அவகாசம் தராமல், மற்றும் அதற்கு நாங்கள் வாக்களிக்காமல் வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர அதே வேகத்தை பின்பற்ற நீங்கள் நினைக்க வேண்டாம். ஒப்பந்தம் இல்லை என்றால், வேலை இல்லை!” என்று நிறைவு செய்தது.

வொல்வோ மற்றும் மாக் தொழிலாளர்கள், volvowrfc@gmail.comஎன்ற மின்னஞ்சல் மூலம் அல்லது (540) 307-0509 என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் VWRFC ஐ தொடர்புகொள்ளலாம்.

Loading