ரஷ்ய மொழியில், கட்சி வரலாற்றுக் குழுவினால் 1926ம் ஆண்டு உத்தியோகபூர்வ ஆண்டுவிழா நூல் தொகுப்பில் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது

ஐரோப்பாவும் அமெரிக்காவும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ட்ரொட்ஸ்கியின் முன்னுரை

“இத்துண்டுப் பிரசுரங்கள் இரண்டு ஆண்டுகள் தனித் தனியே ஆற்றிய உரைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த உரைகளை ஒன்றாக இணைப்பது பொருளுரையின் ஒற்றுமையாகும்: இரண்டுமே உலகப் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையின் தன்மையை பற்றிக் கூறுபவை. அடிப்படைக் கருத்தின் ஒற்றுமையை ஒட்டி இரண்டு உரைகளும் ஒன்றாகக் இணைக்கப்பட்டிருக்கின்றன: இரண்டுமே உலக நிலைமை பற்றி மதிப்பிடுவதற்கு தளமாக ஐரோப்பாவுடன் அமெரிக்கா கொண்ட உறவு என்பதில் இருந்து விளக்குகின்றன.

“உலக நிலைமையின் அடிப்படைத் தன்மை இந்த அறிக்கைகளினால் முழு விளக்கம் பெற்றுவிடவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை. காலனிகள் பற்றிய பிரச்சனை, கீழைத்தேச மக்களின் தேசிய-புரட்சிகரப் போராட்டங்கள் அவற்றில் தேவையான அளவிற்கு, அதாவது அடிப்படை கேள்விகளை தெளிவாக்குவதற்கு மட்டுமே. அதாவது முதலாளித்துவ உலகில் அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் அதில் இருந்து ஏற்படும் விளைவுகளை தெரிவிப்பதற்கு மட்டுமே ஆராயப்பட்டுள்ளன; அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அடிப்படையில் மாறிவிட்ட இடைத் தொடர்புகளை ஒட்டி கீழை நாடுகளின் நிலைமை, முன்னோக்குகள் ஆகியவற்றின் பிரச்சினை ஒரு தனி, சுயாதீன பகுப்பாய்வைக் கோருபவை. ஆனால், அத்தகைய பகுப்பாய்வு இந்தத் துண்டுப்பிரசுரத்தில் உள்ள பிரச்சினையின் அடிப்படைத் தன்மையை மாற்றாது. கீழை நாடுகள் பிரச்சினையை ஒரு விரிவான பகுப்பாய்விற்கு உட்படுத்தாமல், வரலாற்றளவில் பாரிய தன்மையைக் கொண்டுள்ள இப்பிரச்சினை இந்த உரைகளில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

“அமெரிக்காவின் மிதமிஞ்சிய சடத்துவ மேம்பாடு இயல்பாகவே முதலாளித்துவ ஐரோப்பாவின் பொருளாதார ஏற்றம், புத்துயிர்ப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிடுகிறது. கடந்த காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவம் உலகின் பின்தங்கிய பிரிவுகளில் பெரும் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் இன்று அமெரிக்க முதலாளித்துவம்தான் முதிர்ச்சியான ஐரோப்பாவின் புரட்சிகர மாற்றத்தை செய்கிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை அது சிக்கியுள்ள பொருளாதார முட்டுச் சந்தில் இருந்து மீள்வதற்கு ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சி, காப்புவரிகள், அரச தடைகள், ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் தோற்றுவிக்கப்படல் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனும் சுதந்திர ஆசிய நாடுகளுடன் கூட்டமைப்பு முறையில் ஒன்றுபடுதல் ஆகியவற்றைக் கையாண்டால் ஒழிய, தப்பிக்க வேறு வழியில்லை. இந்த பெரும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சி சிறிதும் தப்பிக்க முடியாமல் தற்போதைய முதலாளித்துவ மேலாதிக்க நாடான அமெரிக்காவிலும் ஒரு புரட்சிகர சகாப்தத்தை தொடக்கிவைக்கும்.”

15 February, 1926

ஐரோப்பாவும் அமெரிக்காவும், லியோன் ட்ரொட்ஸ்கி

தொழிலாளர் இயக்கத்தின் இரு துருவங்கள் - சமரசவாதத்தின் பூரணப்பட்ட வகை

தோழர்களே: தற்கால உலகத் தொழிலாளர் இயக்கம் இரு துருவங்களாகியுள்ளது. முன்னோடியில்லாத தெளிவான வகையில் உலகத் தொழிலாள வர்க்கத்திற்குள் உள்ள இரு அடிப்படைப் போக்குகளை இந்த இரு துருவங்கள் நிர்ணயிக்கின்றன. அவற்றுள் ஒன்றான புரட்சிகர துருவம் நம் நாட்டில், சோவியத் ஒன்றியத்தில் உள்ளது; மற்றது, சமரச துருவம், அமெரிக்காவில் உள்ளது. இதற்கு முன் ஒருபொழுதும் இத்தகைய முழுமையான வழிவகைகள் மற்றும் சீர்திருத்த வழிவகைகள், இருந்ததில்லை. அதாவது முதலாளித்துவத்துடன் சமரச அரசியல் என்று கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகத்தான் அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தில் இருக்கிறது.

வர்க்க சமரச அரசியல் கடந்த காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது; நாம் அதை வரலாற்றுப் பார்வையின் மூலமும் நேரடியாகவும் கண்டுள்ளோம். சந்தர்ப்பவாதம் அதன் முழுமையான வடிவமைப்பு இங்கிலாந்தினால் போருக்கு முந்தைய சகாப்தத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் முழுமையான பழைமைவாத வடிவத்திலான தொழிற்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது என்று நாம் மதிப்பிட்டோம் - இது கடந்த காலத்தைப் பொறுத்தவரையில் சரியே. ஆனால், இன்று இங்கிலாந்தின் தொல்சீர் சகாப்தத்தின் தொழிற்சங்கவாதம், அதாவது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி, ஒரு அமெரிக்க தொழிற்சாலைக்கு கைவினைஞர் உற்பத்தி கொண்டிருந்த அதே உறவைத்தான் தற்போதுள்ள அமெரிக்க சந்தர்ப்பவாதத்துக்கு காட்டுகிறது.

அமெரிக்காவில் இப்பொழுது நிறுவனத் தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படும் பரந்த இயக்கம் உள்ளது; அதாவது தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் மாறான வகையில் இவை தொழிலாளர்களை மட்டுமின்றி முதலாளிகளையும் அல்லது இருவரின் பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், உற்பத்தியில் கூட்டுறவுசங்க ஒழுங்கமைப்பு (guild organization) இருந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகள், பின்னர் நிலப்பிரபுத்துவ முறை மறைந்தபோது தானும் மறைந்த நிலை இப்பொழுது முன்னோடியில்லாத வகையில், முற்றிலும் புதிய வடிவமைப்புக்களை மிகச் சக்திவாய்ந்த முதலாளித்துவ நாட்டில் ஏற்பட்டுள்ளது.

நான் தவறாகக் கருதவில்லை என்றால், யுத்தத்திற்கு முன்னர் இந்த இயக்கத்தின் ஆரம்பகர்த்தாவாக ராக்பெல்லர் இருந்தார். ஆனால் இந்த இயக்கம் வட அமெரிக்காவின் மிகச் சக்திவாய்ந்த நிறுவனங்களில் சமீபத்தில்தான், 1923 முதல் பரவியுள்ளது. தொழிலாளர் பிரபுத்துவத்தின் (The labor aristocracy) உத்தியோகபூர்வ தொழிற்சங்க அமைப்பான அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (American Federation of Labour) சில தயக்கங்களுடன் இந்த இயக்கத்தை ஏற்றுள்ளது; உழைப்பிற்கும் மூலதனத்திற்குமிடையே உள்ள நலன்களின் அடயாளத்தை முற்றிலும், முழுமையாகவும் அங்கீகாரம் செய்வதை இது கருதுகிறது; இதையொட்டி உடனடி இலக்குகளுக்காக சுயாதீன தொழிலாள வர்க்க அமைப்புக்களுக்கான தேவை கூட நிராகரிக்கப்படுகிறது.

இதே நேரத்தில் அமெரிக்காவில் தொழிலாளர் சேமிப்பு வங்கிகள், காப்பீட்டுச் சங்கங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியையும் இத்துடன் காண்கிறோம்; அவற்றில் தொழிலாளர் மற்றும் முதலாளிகளின் பிரதிநிதிகள் அருகருகே அமர்கின்றனர். அமெரிக்க ஊதியத் தரங்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று பரந்த அளவில் கருதப்படும் எண்ணம் பெரிதும் மிகைப்படுத்துப்பட்டுள்ளது என்பதை கூறத் தேவையில்லை; ஆயினும் கூட, இந்த ஊதியத்தரங்கள் தொழிலாளர்களின் உயர்தட்டிற்கு சில “சேமிப்புக்களைச்” செய்வதற்கு அனுமதிக்கிறது. “அனைத்துச் சேமிப்புக்களையும் மூலதனம் நடுத்தர தொழிலாளர் வங்கிகள் மூலம் வடிகட்டி அவற்றை தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களில் இருந்து சேமிக்க இயலும் தொழில்துறை நிறுவனங்களுக்கு அளிக்கிறது. இவ்விதத்தில் முதலாளிகள் தங்கள் சுற்றோட்ட மூலதனத்தை பெருக்குகின்றனர்; மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழில் வளர்ச்சியில் தொழிலாளர்களின் நலன்களையும் உறுதிப்படுத்துகின்றனர்.

தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் மூலதனத்தின் நலன்களுக்கும் இடையே முழு ஒற்றுமை என்ற அடிப்படையில் ஊதியங்களின் சரிவை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையை அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) அங்கீகரித்திருந்தது: உழைப்பின் உற்பத்தித்திறன் மற்றும் இலாபங்களை ஒட்டி ஊதியங்கள் மாறுபட்டிருக்க வேண்டும். உழைப்பு மற்றும் மூலதனத்தின் நலன்களின் ஒற்றுமை என்னும் கோட்பாடு இவ்விதத்தில் நடைமுறையில் ஒற்றுமைப்படுத்தப்பட்டு, தேசிய வருமானத்தின் நலன்களில் “சமத்துவம்” இருப்பது போன்ற தோற்றத்தை பெறுகிறோம். இந்தப் புதிய இயக்கத்தின் முக்கிய பொருளாதார வடிவமைப்புக்களின் தன்மை இருக்கும் விதத்தை நன்கு கவனமாக முறையான விளக்கப்பாட்டுடன் ஆராயப்பட வேண்டும்.

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL - இதன் தலைவர் Gompres) கடந்த சில ஆண்டுகளில் அதன் உறுப்பினர்களில் பெரும்பகுதியை இழந்துவிட்டது. இப்பொழுது 2,800,000 உறுப்பினர்களுக்கு மேல் இல்லை; இது தொழில்துறை, வணிகம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 25,000,000 ஊதியம் ஈட்டுபவர்களைக் கொண்டுள்ளது என்பதை கருத்திற்கொள்ளும்போது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் குறைந்த பிரிவையே பிரதிபலிக்கிறது. இதன் சொந்த உத்தியோகபூர்வ கோட்பாட்டுப் பிரச்சினைகள் வெகுஜனப் போராட்டத்தின் மூலம் தீர்க்கப்படுவதில்லை, ஆனால் உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையே சமரசத்தின் மூலம் தீர்க்கப்படுகிறது என்பதுதான். நிறுவனத் தொழிற்சங்கங்களில் அதன் உயர்ந்த வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது இக்கருத்து என்ற நிலையில், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பிரபுத்துவ உயர்குழுக்களை அமைப்பதுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமானதும் அவற்றினால் இயலுமானதுமாகும். இவை முழு வர்க்கத்தின் பெயரில் செயல்படுகின்றன.

ஒத்துழைப்பு என்பது தொழில்துறை மற்றும் நிதியத் துறைகளுடன் (வங்கிகள், காப்பீட்டுச் சங்கங்கள்) மட்டுப்படுத்தப்படவில்லை. இடம்பெயர்க்கப்பட்ட சேமிப்பு வைப்பு, பங்குகள் மற்றும் பீப்பாய்களாக இது உள்நாட்டு, உலக அரசியலிலுக்குள் இருக்கிறது. புதிய நிறுவனத் தொழிற்சங்கங்களுடன் AFL நெருக்கமாகப் பிணைந்து, அவற்றின் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம்பியிருக்கும் நிலையில்-சோசலிசத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த போராட்டத்தை நடத்த இயலும், பொதுவாக ஐரோப்பிய புரட்சிக் கோட்பாடுகளுக்கு எதிராக; இவற்றுள் இரண்டாம் அகிலம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் அகிலம் ஆகியவையும் அடங்கும் [1]

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) மன்ரோ கோட்பாடான “அமெரிக்கர்களுக்காக அமெரிக்கா” என்பது ஒரு புதிய விதத்தில் ஏற்கின்ற வகையில் அதற்கு கீழக்கண்ட விளக்கத்தை கொடுக்கிறது: “ ஐரோப்பாவின் கலகக்கார்கள் எங்களால் பயிற்றுவிக்கப்பட வேண்டும் மற்றும் முடியும், ஆனால் அவர்கள் எங்கள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” இதில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) முதலாளித்துவத்தைத்தான் எதிரொலிக்கிறது. முன்பு முதலாளித்துவம் கூறியது: “அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான், ஐரோப்பா ஐரோப்பியர்களுக்குத்தான்”; இப்பொழுது மன்ரோ கோட்பாடு ஒரு தடையை பிறருக்கு அடையாளம் காட்டுகிறது. அதாவது அமெரிக்க விவகாரங்களில் தலையிடாதீர் என்பதாகும்; ஆனால் அமெரிக்காவை உலகின் பிற விவகாரங்களில் தலையிடுவதை அது தடுக்கவில்லை. அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான் மற்றும் ஐரோப்பாவும் கூட.

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) சமீபத்தில் ஒரு பரந்த அமெரிக்கர்களுக்கான கூட்டமைப்பை தோற்றுவித்தது; அதாவது இது, தென்னமெரிக்காவிற்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைப்பாகவும், அதையொட்டி இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பரவிச் செல்லும் தயாரிப்பாகவுமிருந்தது. வோல் ஸ்ட்ரீட் இதைவிடச் சிறந்த அரசியல் கருவியைக் கண்டுபிடித்திருக்க முடியாது. அதே நேரத்தில் இதன் பொருள் தென்னமெரிக்க மக்கள் அவர்களை நசுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தும் போராட்டம் என்பது அமெரிக்கவாதத்தினை சார்ந்த கூட்டமைப்பின் சீர்கெட்ட செல்வாக்கிற்கு எதிரான போராட்டமும் ஆகிறது என்பதுதான். Gomper ஏற்படுத்திய அமைப்பு. நீங்கள் அறிந்துள்ளதுபோல், ஆம்ஸ்டர்டாம் அகிலத்துக்கு வெளியே உள்ளது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் (AFL) பார்வையில் ஆம்ஸ்டர்டாம் அகிலமானது சீர்கெட்டுள்ள ஐரோப்பாவின் அமைப்பு ஆகும், அந்த அமைப்பு மிக அதிகம் புரட்சிகரக் கருத்துக்களால் நச்சுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) ஆம்ஸ்டர்டாமிற்கு வெளியே, தேசங்களின் கழகத்திற்கு (League of Nations) வெளியே அமெரிக்கா நிற்பது போல் நிற்கிறது. ஆனால் இது ஒன்றும் அமெரிக்க மூலதனத்தை தேசங்களின் கழகத்தை ஆட்டிப்படைக்க பயன்படுத்துவதை தடுத்துவிடவில்லை. இங்கும் அமெரிக்காவின் 30ஆவது ஜனாதிபதி கூலிட்ஜின் (Coolidge) செயல்களுக்கும் Gomper உடைய வாரிசுகளுக்கும் இடையே முழுமையான ஒற்றுமைத்தன்மையைக் காணலாம். அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) அமெரிக்க மூலதனம் Dawes Plan ஐ நிறுவியபோது அதற்கு ஆதரவு கொடுத்தது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உரிமைகள் மற்றும் போலித்தனங்களுக்காக போராடுகிறது; இதன் விளைவாக முதலிலும் முக்கியமானதுமாக சோவியத் குடியரசிற்கு எதிராக இருக்கிறது.

இப்புதிய சமரசவாதம் என்பது முன்பு காணப்பட்ட எதையும் விட மிக உயர்ந்த வடிவிலானதாகும்; இங்கு சமரசவாதம் என்பது அதன் இறுதித் தர்க்கபூர்வ முடிவிற்கு இழுத்துச் செல்லப்படுகிறது; இது இயல்பாக “வர்க்கங்களுக்கு இடையேயான” அமைப்புக்களான நிறுவனத் தொழிற்சங்கங்கள், கூட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றால் முழுமை பெறுகிறது; இந்த சமரசவாதம் அமெரிக்கர்களின் உயர்விகிதங்களை ஒரே கோட்டில் அடையச் செய்துள்ளது. மிகப் பெரிய மூலதனங்களை கொண்ட நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன; அவை முதலாளிகளுடன் சமமான நிலையில் ஆலைக் குழுக்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன, அல்லது ஒரு சட்ட சபையின் கீழ்மன்றம், மேல்மன்றங்களுக்கிடையே உள்ள உறவைப் போல் நிர்ணயித்துக் கொள்கின்றன. பெரும் முதலாளித்துவ நிறுவனங்களால் சமரசவாதம் தரப்படுத்தப்பட்டும் நிபுணத்துவப்படுத்தப்பட்டும் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இது ஒரு முழு அமெரிக்க நிகழ்வு ஆகும். சமரசவாதத்தின் பாரிய உற்பத்திக்கான ஒரு வகை சமூக நகர்தள வரிசை உற்பத்தி முறையானது (Social conveyor line) தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதை இயல்பாகவே பலப்படுத்திவிடுவதை கோருகின்றது.

சமரசவாதத்திற்கு அடிப்படையாக அமெரிக்காவின் பொருளாதாரப் பலம்

மூலதனத்திற்கு இதன் தேவை ஏன் என்ற கேள்வி எழலாம். அமெரிக்க மூலதனத்தின் உண்மையான திறனையும் அதன் வருங்காலத் திட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் விடை புலப்படும். அமெரிக்க மூலதனத்திற்கு அமெரிக்கா ஒரு மூடப்பட்டுள்ள செயல்பாடுகளைக் கொண்ட இடம் இல்லை, மாபெரும் அளவில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒரு பயிற்சிக் களம் ஆகும். அமெரிக்க முதலாளித்துவம் இப்பயிற்சி களத்தில் தன் பாதுகாப்பை மிக முறையான வடிவில், சமரசவாதம் மூலம் உறுதிப்படுத்தபட வேண்டும்; அப்பொழுதுதான் அது இன்னும் பாதுகாப்பான முறையில் வெளிநாடுகளில் செயல்பட முடியும்.

மற்றொரு வினாவும் எழுகிறது: அதுவும் ஒரு ஏகாதிபத்திய படுகொலையில் அமெரிக்க பங்கு பெற்ற பின், அதையொட்டிய அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் அனுபவங்களும் இருக்கும்போது இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில் இந்த தரப்படுத்தப்பட்ட சமரசவாதம் நடைமுறையில் அடைவது எப்படிச் சாத்தியமாயிற்று,? இக்கேள்விக்கு விடை பழைய நிகழ்வுகள் ஏதும் இதனுடன் ஒப்பிடப்பட முடியாதவகையில் அமெரிக்க மூலதனத்தின் சக்தியில் தங்கியிருக்கிறது.

ஐரோப்பாவிலும் உலகின் பல்வேறுபகுதிகளிலும் முதலாளித்துவ அமைப்புமுறை சில சோதனைகளை மட்டும் செய்யவில்லை. தந்தை ஆதிக்க முறையிலிருந்து அடிமைத்தனத்திலிருந்து பண்ணை அடிமைமுறையிலிருந்து இறுதியாக முதலாளித்துவம் என்று மனிதகுலத்தின் வரலாறே தொழிலாளர் சமூக அமைப்பை தோற்றுவிக்க, புதிய விதத்தில் அமைக்க, முன்னேற்ற, உயர்த்த மேற்கோள்ளப்பட்ட சங்கிலித் தொடர் போன்ற பிணைந்த முயற்சிகள் என்றே நோக்கப்படுகின்றது.

முதலாளித்துவத்துடன்தான் வரலாறு மிக அதிக அளவிலான பரிசோதனைகளை நடத்தியுள்ளது; முதலில் பல வகைப்பட்ட முறைகளில் இவை ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளன. ஆனால் மிகப் பெரியதும் “வெற்றிகரமான” முயற்சியும் வட அமெரிக்கக் கண்டத்தில் நடந்தது எனத் தோன்றுகிறது. இதைச் சற்றுச் சிந்தியுங்கள்: 15ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது; அதற்கு முன் ஐரோப்பா ஒரு வளம்நிறைந்த வரலாற்றைக் கடந்துள்ளது. 16, 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளிலும், மற்றும் 19ம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும் அமெரிக்கா என்பது தொலைவில் இருந்த ஒரு தன்னிறைவு பெற்ற உலகமாக, மகத்தான, கடவுளே கைவிட்ட காட்டுப்பகுதிகள் ஐரோப்பிய நாகரிகத்தின் மிச்சங்களைக் கொண்டு இருந்தது.

இதற்கிடையில், “எல்லையற்ற சாத்தியப்பாடுகள்” உடைய நாடு ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது, ஏனெனில் இங்கு இயற்கை ஒரு மகத்தான பொருளாதார விரிவாக்கத்திற்கு தேவையான நிலைமைகள் அனைத்தையும் தோற்றுவித்துள்ளது. பெருங்கடல் வழியே தன் மக்களிடம் இருந்து பெரும் விழிப்புற்ற, பெரும் பக்குவம் அடைந்த கூறுபாடுகளை, உற்பத்திச் சக்திகளை வளர்ப்பதற்கு சிறந்த தகுதி பெற்றவர்களை அங்கு அனுப்பி வைத்தது. அனைத்து ஐரோப்பிய மதப்-புரட்சிகர மற்றும் அரசியல்-புரட்சிகரத் தன்மைகள்-இவை அனைத்தும் எதைக் குறிக்கின்றன? அவைகள் முதலில் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினுடையதும் பின்னர் தொழிலாள வர்க்கத்தினுடையதுமான போராட்டங்கள் நிலபிரபுத்துவ முறை, மதகுருமார்களின் குப்பை கூளங்கள் என்று உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவற்றிற்கு எதிராக இருந்தன. இவைகள் மிக முன்னேற்றகரமான கூறுபாடுகளின் போராட்டங்களை குறிக்கின்றன.

ஐரோப்பா அனைத்து வேடத்தை அகற்றிப் பெருங்கடலைக் கடந்து சென்றது. ஐரோப்பிய அரசுகளின் மலர்கள், அதன் மிகத் தீவிரக் கூறுபாடுகள், தங்கள் வாழ்வைத் தாங்களேதான் எப்படியும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவர்கள் இந்த வரலாற்றுக் குப்பை இல்லாத ஒரு சூழ்நிலைக்கு, இயற்கையின் கன்னி இயல்பும் வற்றாத வளமும் நிறைந்த கண்டத்திற்குச் சென்றனர். அதுதான் அமெரிக்காவின் வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் அமெரிக்காவின் செல்வத்திற்குத் அடிப்படையாக அமைந்தது.

ஆனால் வற்றாத இயற்கையிடம் இல்லாதிருந்தது மனிதனாகும். அமெரிக்காவில் மிகக் கடினமாகக் கிடைப்பது உழைப்புச் சக்தி என்றுதான் இருந்தது. நகர்தள வரிசை முறை (conveyor line) மூலம் உற்பத்தியை பெருக்குவது என்ற கோட்பாடு ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. மனிதனுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்துவது, உழைப்புச் சக்தியை பெருக்குவது, பொருட்களை எடுத்து வருதல், எடுத்துச் செல்லுதல், மேலே கொண்டு செல்லுதல், கீழிறக்குதல் ஆகியவற்றை தானியங்கி இயந்திரத்தின் மூலம் செய்தல் என்பதன் வெளிப்பாடுதான் அது. இவை அனைத்தும் நகர்தள வரிசை முறை (conveyor line) வகையில் சாதிக்கப்பட்டனவே ஒழிய மனிதனின் முதுகுகள் மூலம் அல்ல. இதுதான் நகர்தள வரிசை முறை உற்பத்தி அமைப்பின் கோட்பாடாகும். மின்தூக்கி (lift or elevator) எங்கே கண்டுபிடிக்கப்பட்டது? மனிதன் ஒரு கோதுமைச் சாக்கை தன் முதுகில் சுமப்பதைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. குழாய்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? திரவங்களை நகர்த்தி செல்வதற்காக 100,000 கிலோ மீட்டர் குழாய் வரிசையை அமெரிக்காவில் கண்டுபிடித்தார்கள். இறுதியாக நகர்தள வரிசை முறை தொழிற்சாலைக்குள் போக்குவரத்துக்கு பணிகளுக்கு அளிக்கப்பட்டது. அதன் மிக உயர்ந்த மாதிரியாக போர்ட் (Ford) நிறுவனத்தில் அமைப்புமுறை உலகம் முழுவதும் அறியப்பட்டதாக இருக்கிறது.

அமெரிக்காவிற்கு பயிற்சித் தொழிலாளர் பற்றி குறைந்தளவே தெரிந்திருக்கிறது: அங்கு தொழிற்பயிற்சி கொடுப்பதற்கு நேரம் வீணடிக்கப்படுவது இல்லை; ஏனெனில் உழைப்புச் சக்திக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்; தொழிற்பயிற்சி முறைக்குப் பதிலாக தொழிலாளர் பகுப்பு முறை, தொழிலைப் பிரித்து மிக, மிகக் குறைந்த செயல்களின் தொகுப்பாகச் செய்வது என்பதற்கு அதிகப் பயிற்சி தேவையில்லை, அல்லது மிகக் குறைந்த பயிற்சி போதுமானது. இச்சிறுபாகங்கள் அனைத்தையும் தொழில் வழிவகையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது எது? படைப்பாற்றல் மிக்க முடிவில்லாத நாடாதான்; அதாவது நகர்தள வரிசை முறை நாடாதான் (conveyor line). அது கற்பிக்கும் பணியையும் கொண்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஒரு தெற்கு ஐரோப்பா அல்லது பால்கன் பகுதி அல்லது உக்ரேனில் இருந்து வந்துள்ள இளம் விவசாயி தொழில்துறைத் தொழிலாளராக மாற்றப்படுகிறார்.

வரிசையான உற்பத்தி மற்றும் தரம் பிரித்தல் என்பதும் அமெரிக்கத் தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது, அதாவது பெரும் அளவிலான உற்பத்தியுடன். உயர் தட்டுகளுக்கு தேவை எனக் கருதப்படும் பொருட்கள், பண்டங்கள் அனைத்தும் தனிநபர் விருப்பத்திற்கு ஏற்ப வித்தியாசமாக தயாரிக்கப்படுகின்றன; ஐரோப்பாவில் உள்ளதைவிட மிகச் சிறந்த முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிலாந்தினால் நயமான துணிகள் தயாரிக்கப்படுகின்றன. நகைகள், கையுறைகள், வாசனைப்பொருட்கள் ஆகியவை பிரான்சில் இருந்து வருகின்றன. ஆனால் ஒரு பரந்த சந்தைக்கு தேவையான பெருமளவு உற்பத்தி என்றால் ஐரோப்பாவைவிட மிக உயர்ந்த நிலையில்தான் அமெரிக்கா உள்ளது. எனவேதான் ஐரோப்பிய சோசலிசம் அமெரிக்கப் பள்ளியில் தொழில்நுட்பங்களை கற்க நேரிட்டுள்ளது.

பொருளாதாரத் துறையில் மிகத் தேர்ந்த வல்லுனரான ஹூவர், உற்பத்திப் பொருட்கள் தரம்பிரிக்கப்படுவதற்கான தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். ஏற்கனவே அவர் தரம் பிரிக்கப்பட்ட பொருட்கள் உற்பத்திக்காக பெரும் அறக்கட்டளைகளுடன் ஏராளாமான ஒப்பந்தங்களை செய்துள்ளார். ஒரு அமெரிக்கர் தரம்பிரிக்கப்பட்டு பிறக்கிறார், தரம் பிரிக்கப்பட்ட முறையில் இறக்கிறார் என்றுகூடச் சொல்ல முடியும். இது எவ்வளவு வசதியானது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் 40 சதவீதம் விலை குறைவாக இருக்கிறது.

மக்கள் குடியேறுவதால் அமெரிக்க மக்கட்தொகையின் எண்ணிக்கையில் அதிக கூறுபாடுகள் (45%) ஐரோப்பிய மக்களைவிட பணிபுரிவதற்கு உகந்தவர்களாக உள்ளனர். முதலில் வயதுக்குழுக்களுக்கு இடையே உள்ள உறவுநிலை மாறுபட்டதாகும். இதையொட்டி நாடு முழுவதும் கூடுதல் உற்பத்தித் திறனைக் உருவாக்கியுள்ளது. இத்தகைய உற்பத்தியின் கூட்டுத் திறன், தலா தனித் தொழிலாளியின் கூடுதல் உற்பத்தியினால் அதிகம் பெருக்கம் அடைகிறது. இயந்திரமயமாக்கல் மற்றும் உழைப்பு வழிவகையை கூடுதல் அறிவார்ந்த முறையில் செயல்படுத்துவதால், அமெரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத் தொழிலாளி ஜேர்மனியில் உள்ளவரை விட இரண்டரை மடங்கு அதிகம் தாதுப்பொருட்களை எடுக்கிறார். ஓர் அமெரிக்க விவசாயி ஐரோப்பிய விவசாயியை விட இருமடங்கு உற்பத்தியைக் காட்டுகிறார். இவற்றின் விளைவுகள் என்ன என்பதைத்தான் நாம் காண்கிறோம்.

பண்டைய ஏதென்ஸ் மக்கள் சுதந்திர மனிதர்கள், ஏனெனில் ஒவ்வொரு ஏதென்ஸ் குடிமகனிடமும் நான்கு அடிமைகள் இருந்தனர் என்று கூறப்படுவது வழக்கம். அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஐம்பது அடிமைகள் உள்ளனர், ஆனால் இவை இயந்திரங்கள். இயந்திரச் சக்தியை [2] கணக்கீட்டு, அதை குதிரை வலுவாக (horse power) மாற்றினால், பால்குடிக்கும் குழந்தைகள் உட்பட ஒவ்வொரு அமெரிக்கரும் ஐம்பது இயந்திர அடிமைகளைக் கொண்டுள்ளனர் என்பதைப் பார்க்கிறோம். ஆனால் இதையொட்டி அமெரிக்கப் பொருளாதாரம் உண்மையான அடிமைகளைக் கொண்டுள்ளன, கூலி கொடுக்கப்படும் தொழிலாளர்களை பயன்படுத்துவதை இது தடுக்கவில்லை என்பது வெளிப்படை.

அமெரிக்காவின் தேசிய வருமானம் ஆண்டு ஒன்றிற்கு 60 பில்லியன் டாலர்கள் என உள்ளது. அனைத்துச் செலவினங்களும் கொடுக்கப்பட்ட பின் மிச்சமுள்ள பணமான ஆண்டுச் சேமிப்பு என்பது ஆறு அல்லது ஏழு பில்லியன் டாலர்களாக இருக்கிறது. நான் அமெரிக்காவை பற்றி மட்டுமே பேசுகிறேன்; அதாவது பழைய பாட நூல்களில் அந்த இடம் குறிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அமெரிக்கா உயர்வானதாகவும் வளமுள்ளதாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் கிரீடத்திற்கு அவமதிப்பில்லாத வகையில் அமெரிக்காவின் ஒரு இணைந்த பகுதியாக கனடா இருக்கிறது. அமெரிக்க வணிகத்துறையின் ஆண்டு அறிக்கையைப் படித்தால், கனடாவுடனான வணிகம் உள்நாட்டு வணிகம் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்; கனடா மரியாதையுடனும் சற்றே தவிர்க்கும் வகையிலும் அமெரிக்காவின் வடப்புற நீட்டிப்பு என்று குறிக்கப்படுகிறது, தேசங்களின் கழகத்தின் ஆசிகள் இன்றி மேலும் பிந்தையதிடம் ஆலோசனைகூடக் கேட்கப்படவில்லை, அதுவும் தக்க காரணத்திற்காக. இந்த Zags களின் தேவையும் இல்லை [சோவியத் அரசின் சிவில் செயற்பாடுகள் சட்டம், குறிப்பாகத் திருமணங்களைப் பற்றி]. ஈர்ப்பு மற்றும் ஒதுக்கும் பொருளாதார சக்திகள் ஏற்கனவே இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில மூலதனம் கனடியத் தொழில்துறையில் 10 சதவிகிதம் கூட இல்லை. அமெரிக்க மூலதனம் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் கொண்டுள்ளது; இந்த விகிதம் உறுதியாக வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வருகிறது. கனடாவில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதிகள் 160 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிடம் இருந்து 600 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதிகள் அமெரிக்க இறக்குமதிகளைப் போல் 5 மடங்கு இருந்தன. பெரும்பாலான கனேடியர்கள் தங்களை அமெரிக்கர்கள் என்றுதான் கருதுகின்றனர்; விந்தையான முறையில் தன்னை ஆழ்ந்த முறையில் ஆங்கிலேய முறை எனக் கருதிக்கொள்ளும் பிரெஞ்சுப் பிரிவு இவ்வாறு நினைக்கிறது.

ஆஸ்திரேலியாவும் இதே கனேடிய வழிவகையைத்தான் கடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அது மெதுவான வேகத்தில்தான் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா தன்னுடைய நிலைப்பாட்டை எந்த நாட்டின் கடற்படை ஜப்பானுக்கு எதிராகக் பாதுகாக்குமோ, அப்பணியைக் குறைந்த செலவில் செய்யுமோ, அத்துடன் இணைந்து நிற்கும். வரும் குறைந்த எதிர் காலத்தில் அமெரிக்காவிற்கு இந்தப் போட்டியில் வெற்றி உறுதியாகிறது. எல்லாச் சம்பவங்களாலும் அமெரிக்காவிற்கும், கிரேட் பிரிட்டனுக்கும் இடையே ஒரு போர் மூண்டால், “பிரிட்டிஷ் டொமினியனான” கனடா அமெரிக்காவிற்கு ஆதரவாக இங்கிலாந்தை அது எதிர்த்து நிற்கையில் மனித சக்தி மற்றும் உணவுகளை வழங்கி பங்காற்றும் வகையில் பணிபுரியும்.

இவைகள் அமெரிக்காவின் பொருள்சார் சக்தியின் முக்கிய கூறுபாடுகளாகும். இச்சக்திதான் அமெரிக்க முதலாளித்துவத்தினரை பண்டைய பிரிட்டிஷ் பூர்ஷ்வாக்களின் பழைய நடைமுறையை பின்பற்ற அனுமதிக்கிறது. உயர்குடி தொழிலாளர் பிரபுத்துவத்தை கொழுக்கவைக்கிறது. இந்த வகையில் தொழிலாள வர்க்கத்தை விலங்கிட்டு வைத்திருக்கிறது. இந்த நடைமுறையில் அவர்கள் அடைந்துள்ள முழுமைத்தன்மை பிரிட்டிஷ் பூர்ஷ்வா ஒருபோதும் கற்பனைகூட செய்திருக்க முடியாத அளவிற்கு உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புதிய பாத்திரங்கள்

கடந்த சில ஆண்டுகளில் உலகத்தின் பொருளாதார அச்சு முற்றிலும் முன்னேற்றமான வகையில் மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள உறவு அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இது போரின் விளைவினால் ஏற்பட்டதாகும். இந்த மாற்றம் நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருந்துள்ளது என்பது இயல்புதான்: இதைப்பற்றிய அடையாள அறிகுறிகள் இருந்தன, ஆனால் இது அண்மையில்தான் நிறைவேற்றப்பட்ட உண்மையாக மாறியிருக்கிறது. இப்பொழுது நாம் மனிதகுலத்தின் பொருளாதார வாழ்வு, அதையொட்டி மனிதக் கலாச்சாரத்தில் நிகழ்ந்துள்ள இந்த மகத்தான மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முயல்வோம். இது தொடர்பாக ஒரு ஜேர்மனிய எழுத்தாளர் கோத்தேயின் சொற்களை கோப்பர்நீக்கஸின் கோட்பாடு சமகாலத்தியவர்களிடையே ஏற்படுத்திய அசாதாரண உணர்வைப் பற்றி எழுதிய சொற்களை நினைவு கூர்ந்துள்ளார்; அதில் சூரியன் ஒன்றும் பூமியைச் சுற்றிவரவில்லை, மாறாக ஒரு சாதாரண நடுத்தர அளவிலுள்ள கிரகம் சூரியனைச் சுற்றி வருகிறது என இருந்தது. பலர் இதை நம்ப மறுத்தனர். அவர்களுடைய பூமியைப் பற்றிய தேசபக்தி சீற்றத்தைத்தான் அளித்தது. இதேதான் இப்பொழுது அமெரிக்காவைப் பொறுத்தவரையிலும் உண்மையாகியுள்ளது. அதாவது அமெரிக்காதான் முதலாளித்துவ உலகை ஆள்கிறது என்பதால் ஐரோப்பிய முதலாளித்துவம் தான் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதை நம்புவதற்கே விரும்பவில்லை.

இந்தப் பொருளாதார சக்திகளின் மகத்தான உலகத் தன்மை நிறைந்த மாற்றத்தைத் தயாரித்த இயற்கையான மற்றும் வரலாற்றுக் காரணங்களை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனால் ஒரே அடியில் அமெரிக்காவை உயர்த்துவதற்கும், ஐரோப்பாவைத் தாழ்த்துவதற்கும், உலக அச்சில் திடீரென மாற்றத்தை எடுத்துக் காட்டுவதற்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஐரோப்பிய அழிவிற்கு ஒரு முயற்சி என்று இருந்த போர் அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் செலவைக் கொடுத்தது; அமெரிக்க வங்கிகள் இப்பொழுது 60 பில்லியன் டாலர்களை இருப்பாகக் கொண்டுள்ளன என்பதை நாம் நினைவுகூர்ந்தால், 25 பில்லியன் என்பது ஒப்புமையில் குறைவுதான். மேலும் 10 பில்லியன் ஐரோப்பாவிற்கு கடனாகச் சென்றது. கொடுக்கப்படாத வட்டியைக் கருத்திற் கொண்டால் இந்த 10 பில்லியன்கள் இப்பொழுது 12 பில்லியன் என்று ஆகியுள்ளன, ஐரோப்பா தன் அழிவிற்காக அமெரிக்காவிற்கு செலுத்தத் தொடங்கியுள்ளது.

இத்தகைய வழிமுறைதான் அமெரிக்கா உலகம் முழுவதிலும் அதன் விதிகளின் எஜமானராக உயர்வதற்கு ஏற்பட்டது. 115 மில்லியன் [3] மொத்த மக்கட் தொகையை கொண்ட இந்த நாடு, முற்றிலும் ஐரோப்பாவைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது; ஆனால் ஒரே விதிவிலக்கு சோவியத் ஒன்றியம்தான். நம் முறை இன்னும் வரவில்லை, அது வராது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நம் நாட்டை விட்டு நீக்கினால், இன்னும் 345 மில்லியன் ஐரோப்பியர்கள், அதாவது அமெரிக்காவைப் போல் மூன்று மடங்கு அதிகமாக மக்கள் அதில் உள்ளனர். நாடுகளுக்கு இடையேயான இந்தப் புதிய உறவுகளின் பங்கு அவற்றின் தனித்தனிச் செல்வங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. பல நாடுகள் தங்கள் தேசிய வருமானங்களைப்பற்றிக் குறித்துள்ள மதிப்பீடுகள் துல்லியமாக இல்லை; ஆனால் தோராயமாக இருக்கும் புள்ளிவிவரங்கள் போதுமானவை. ஐரோப்பாவும் மற்றும் அமெரிக்காவும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமையைப் பற்றிப் பார்ப்போம். அப்பொழுது பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்காவில் செல்வம் அப்பொழுது 30 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது, இங்கிலாந்தின் செல்வம் 40 பில்லியன்கள் என்று இருந்தது, பிரான்சின் செல்வம் 33 பில்லியன்கள், ஜேர்மனியுடையது 38 பில்லியன்கள் என இருந்தன. இந்நாடுகளுக்கு இடையேயான செல்வத்தின் தரங்கள் மிக அதிகம் இல்லை என்பது தெளிவாகிறது. ஒவ்வொன்றும் 30 முதல் 40 பில்லியன்களைக் கொண்டிருந்தது. உலகின் இந்த நான்கு செல்வம் கொழித்த நாடுகளில் அமெரிக்காவின் செல்வம்தான் குறைவாக இருந்தது. இது 1872ம் ஆண்டு நிலைமை ஆகும். ஆனால் இப்பொழுது அரை நூற்றாண்டிற்குப் பின்னர் நிலைமை என்ன? ஜேர்மனி 1872ல் இருந்ததைவிட வறிய நிலையில் உள்ளது (36 பில்லியன்கள்); பிரான்ஸ் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகச் செல்வத்தை (68 பில்லியன்களை) கொண்டுள்ளது; இதேபோல் இங்கிலாந்திடம் (89 பில்லியன்கள்) உள்ளது; ஆனால் அமெரிக்காவின் செல்வம் 320 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதத்தில் நான் மேற்கோளிட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அதன் பழைய நிலைமைக்குப் பின் வாங்கியுள்ளது, மற்ற இரண்டும் அவற்றின் செல்வத்தை இருமடங்காக ஆக்கியுள்ளன, அமெரிக்காவோ 11 மடங்கு அதிகமான செல்வக் கொழிப்பைக் கொண்டுள்ளது. எனவேதான் ஐரோப்பாவின் அழிவிற்கு 15 பில்லியன்களை செலவு செய்ததில் அமெரிக்கா அதன் நோக்கத்தை முற்றிலும் அடைந்துள்ளது.

போருக்கு முன்னால் அமெரிக்கா ஐரோப்பாவிடம் கடன் வாங்கிய நாடாக இருந்தது. உலகின் பொருட்களுக்கு ஐரோப்பாதான் முக்கிய ஆலை மற்றும் முக்கிய இருப்பாக இருந்தது. மேலும் ஐரோப்பா, அதுவும் எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலாந்து, உலகின் மத்திய வங்கியாளராக இருந்தது. இந்த மூன்று முக்கிய பங்குகளும் இப்பொழுது அமெரிக்காவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பா பின்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அமெரிக்காதான் முக்கிய ஆலை, முக்கிய இருப்பு மற்றும் உலகின் மத்திய வங்கி என்று எடுத்துக்கொண்டுள்ளது.

முதலாளித்துவ சமூகத்தில் தங்கம் ஒரு உறுதியான பங்கைக் கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். சோசலிச ஆட்சியில் தங்கம் சில பொது இடங்களை கட்டுவதற்கான தேவைப்பொருளாக பயன்படுத்தப்படும் என்று லெனின் எழுதினார். ஆனால் இது சோசலிசத்தின்கீழ்தான் நடக்கும். முதலாளித்துவத்தின் கீழ் வங்கியின் காப்புப் பெட்டகத்தில் தங்கம் இருப்பதைவிட வேறு எதுவும் முக்கியம் அல்ல. இந்தப்பிரிவில் அமெரிக்காவின் நிலை என்ன? போருக்கு முன்பு அமெரிக்காவின் தங்க இருப்பு, நான் தவறாகக் கணக்கிடவில்லை என்றால் 0.9 பில்லியன்கள் ஆகும். 1925 ஜனவரி முதல் தேதி அன்று இது நான்கரை பில்லியன்களாக உயர்ந்தது; இதுவே உலகின் மொத்த தங்க இருப்பில் பாதியைப் பிரதிபலிக்கிறது; இன்று இந்த விகிதம் 60 சதவிகிதத்திற்கும் குறைந்தது அல்ல.

இப்பொழுது அமெரிக்கா அதன் கரங்களில் உலகின் 60 சதவிகித தங்கத்தைக் குவித்து வைத்திருக்கும்போது, ஐரோப்பாவில் என்ன நடந்தது? ஐரோப்பா சரிவுற்று வந்தது. ஐரோப்பிய முதலாளித்துவம் குறுகிய தேசிய அரச வடிவமைப்பிற்குள் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்ததால் போரில் ஈடுபட நேர்ந்தது. முதலாளித்துவம் இந்த எல்லைகளை விரிவாக்க முயன்று, தனக்கென ஒரு பெரிய இடத்தைத் தோற்றுவிக்க முற்பட்டது. இதில் மிக அதிகமான அழுத்தம் மிகவும் வளர்ச்சியடைந்த ஜேர்மனிய முதலாளித்துவத்தால் செலுத்தப்பட்டது; அது “ஐரோப்பாவை ஒழுங்கமைப்பதை” தனது நோக்கமாக முன்வைத்துக் கொண்டது.

ஆனால் போரின் விளைவு என்ன? வெர்சாய் உடன்படிக்கை ஐரோப்பாவில் 17 கூடுதலான, சுதந்திரமான, புதிய அரசுகளையும் பகுதிகளையும் தோற்றுவித்தது. புதிய 7,000 கி.மீ. எல்லைகளையும், சுங்கவரித் தடைகளையும் ஐரோப்பா சேர்த்துக் கொண்டது; மேலும் இப்புதிய சுங்கத் தடைகளின் இருபுறத்திலும் ஏராளமான கோட்டைகளும் இராணுவங்களும் தோற்றுவிக்கப்பட்டன. இப்பொழுது ஐரோப்பாவில் போருக்கு முன்பு இருந்ததைவிட ஒரு மில்லியன் சிப்பாய்கள் அதிகமாக உள்ளனர். இத்தகைய சாதனைகளுக்காக ஐரோப்பா பெருமளவு பொருள்சார் மதிப்புக்களை அழித்து, தன்னையே பேரழிவிற்கு உட்படுத்திக் கொண்டு, வறிய நிலையிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டது.

ஆனால் இத்துடன் நின்றுவிடவில்லை. அதன் துரதிருஷ்டங்கள் அனைத்திற்கும், அதன் பொருளாதார அழிவிற்கு மற்றும் வணிகத்தை உருக்குலைத்த புதிய, பொருளற்ற சுங்கத் தடைகள், அதன் புதிய எல்லைகள், இராணுவங்களுக்காக தன்னையே சிதைத்து, அழித்துக் கொண்டு இழிசரிவிற்கு உட்படுத்திக் கொண்டதற்காகவும், போருக்காவும் வெர்சாய் ஒப்பந்தத்தையும் கொள்வதற்காகவும், ஐரோப்பா அமெரிக்காவிற்கு அதன் போர்க்கடன்களுக்காக வட்டியையும் அளிக்க வேண்டியதாயிற்று. ஐரோப்பா வறிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது. அதனால் சேர்க்கப்படக்கூடிய மூலப்பொருட்கள் போருக்கு முன்பு இருந்ததைவிட 10 சதவிகிதம் குறைவாகியது. ஐரோப்பா உலகப் பொருளாதாரத்தில் கொண்டுள்ள குறிப்பான கனம் என்பது பல மடங்கு குறைந்து விட்டது. தற்போதைய ஐரோப்பாவில் ஒரே உறுதியான தன்மையைக் கொண்டிருப்பது -வேலையின்மைதான். விந்தையான முறையில், தப்பிப்பதற்கு இடம் தேடும் முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் ஆதிகால திரட்சி சகாப்தத்தில் இருந்து மிகப் பிற்போக்குத்தனக் கோட்பாடுகளை ஆவணத்தில் இருந்து தோண்டி எடுக்கின்றனர். மால்தூசியக் கோட்பாடு மற்றும் நாடு விட்டுக் குடியேறுதலில் வேலையின்மைக்கு அவர்கள் தீர்வு காண முற்பட்டுகின்றனர். விரிவாக்க காலத்தில் வெற்றிகரமான முதலாளித்துவம் இத்தகைய கோட்பாடுகளுக்கான தேவைகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்பொழுது ஐரோப்பா வீழ்ச்சி அடைந்து, மூப்பின் இயலாமையும் முடக்கத் தன்மையும் கொண்டுள்ளதால், பழைய சூனிய வைத்தியரின் தீர்வுகளுக்கும் பழைய சிறுபிள்ளைத்தனமாக கருத்துக்களுக்கும் அது உறைவிடமாகியுள்ளது.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய விரிவாக்கம்

அமெரிக்காவின் சக்தி, ஐரோப்பாவின் வலிமை குன்றல் ஆகியவற்றில் இருந்து தவிர்க்க முடியாத வகையில் உலகச் சக்திகள் புதிய பிரிவினைக்கு, செல்வாக்கு மண்டலங்களுக்கு மற்றும் உலகச் சந்தைகளுக்கு என உட்படுகின்றன. அமெரிக்கா விரிவடைந்தே தீர வேண்டும், ஐரோப்பா சுருங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறது. இதில்தான் முதலாளித்துவ உலகில் நடைபெற்று வரும் அடிப்படைப் பொருளாதார வழிவகைகளின் விளைவுகள் துல்லியமாக அடங்கியுள்ளன. அமெரிக்கா அனைத்து உலக வழிவகைகளையும் நாடி அடைய வேண்டும், எல்லா இடங்களிலும் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும். மிகவும் கடுமையான “சமாதான” வகையில்தான் அமெரிக்கா செயல்படுகிறது; அதாவது இதுகாறும் ஆயுத வலிமையைப் பயன்படுத்தாமல், மத எதிர்ப்பாளர்களை புனித விசாரணையினர் “குருதி கொட்டாமல்” உயிரோடு எரித்தது போன்ற முறையில். அமெரிக்கா “சமாதான வகையில்தான்” விரிவாக்கம் அடைகிறது, ஏனெனில் அதன் எதிரிகள், தங்கள் பற்களைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு அடியடியாக இப்புதிய சக்திக்கு முன் பின்வாங்குகின்றனர்; வெளிப்படையான மோதல் என்ற ஆபத்தைத் தவிர்க்க விரும்புகின்றனர். அதுதான் அமெரிக்காவின் “அமைதிவாத” கொள்கையின் அடித்தளம் ஆகும். அமெரிக்காவின் தற்போதைய போர் ஆயுதம் இதுதான்: பில்லியன் கணக்கான தங்க இருப்புக்களின் ஆதரவைப் பெற்றுள்ள நிதிய மூலதனம். இது ஒரு கொடூரமான, மாபெரும் சக்தி, உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது மற்றும் குறிப்பாக பேரழிவிற்குட்பட்ட, வறிய நிலையில் தள்ளப்பட்டுள்ள ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது. எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் கடன்கள் கொடுப்பது அல்லது மறுப்பது, என்பது பல நேரமும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியின் விதியை மட்டும் இல்லாமல் பூர்ஷ்வா ஆட்சியின் விதியையே பொறுத்துத்தான் உள்ளது. இன்றைய காலம்வரை அமெரிக்கா மற்ற நாடுகளின் பொருளாதாரங்களில் 10 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இந்த பத்து பில்லியன்களில், இரண்டு ஐரோப்பாவிற்கு ஏற்கனவே அதன் பேரழிவிற்காக செலவழிக்கப்பட்ட 10 பில்லியன்களைவிட தனியானது ஆகும். நாம் அனைவரும் அறிந்துள்ளபடி இப்பொழுது கடன்கள் ஐரோப்பாவை “மீட்பதற்கு” வழங்கப்படுகின்றன. பேரழிவு, பின்னர் மீட்பு: இவை இரண்டும் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. அதே நேரத்தில் இரண்டிற்கும் ஒதுக்கப்பட்ட பணத்தின் மீதான வட்டி அதே இருப்புத் தொகுப்பில் தொடர்ந்து குவிகிறது. அமெரிக்கா ஒரு பொருளாதார நிலைப்பாட்டின் பார்வையில் அதிக மூலதனத்தை இலத்தீன் அமெரிக்காவிலும் செய்துள்ளது, இன்னும் கூடுதலான வகையில் வட அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்துகிறது. தென்னமெரிக்காவிற்குப்பின், கனடாதான் அதிக கடன்களைப் பெற்றுள்ள நாடு; அதன் பின் ஐரோப்பா வருகிறது. உலகின் மற்ற பகுதிகள் இதைவிடக் குறைவாகத்தான் பெற்றிருக்கும்.

10 பில்லியன் டாலர்கள் என்பது அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாட்டிற்கு ஒரு சிறிய தொகைதான்; ஆனால் இத்தொகை விரைவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; அந்த வழிவகையைப் புரிந்து கொள்ள, அதன் வேகத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். போரைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளில் அமெரிக்கா வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. அதில் கிட்டத்தட்ட பாதித் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டவை; 1925ல் முதலீடுகள் 1924ம் ஆண்டைவிட மிக அதிகமாக இருந்தன.

போருக்கு முன்பு அமெரிக்காவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவைப்பட்டிருந்தது இம் மூலதனத்தை ஐரோப்பாவில் இருந்து பெற்றுத் தன்னுடைய தொழில்துறையில் அவற்றை ஈடுபடுத்தியது.

அமெரிக்க தொழிற்துறை சக்தியின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நிதிய மூலதனம் விரைவாக அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இது தொடங்கியவுடன் இந்த வழிவகை இன்னும் விரைவான வகையில் பெருகியது. ஊகம் என்ற நிலை மட்டுமே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தன்மை இப்பொழுது நம் கண்கள் முன்னாலேயே நடைபெறுகிறது. ஆனால் இதுவும் ஒரு தொடக்கம்தான். அமெரிக்க நிதிய மூலதனம் உலகை வெற்றிகொள்ளுவதற்கான செயற்பாடுகள் இனித்தான் உண்மையில் தொடங்கும்.

ஒரு மிகத் தீவிர முக்கியத்துவம் வாய்ந்த உண்மையாதெனில் அமெரிக்க மூலதனம் தொழிற்துறைக் கடன்களுக்கு சாதகமாக இருந்துகொண்டு அரசாங்க கடன்களை கைவிட்டிருந்தது. இது போதுமான தெளிவான பொருளைத் தருகிறது. “நாங்கள் ஜேர்மனியிலும் இங்கிலாந்திலும் மீண்டும் தேசிய நாணயத்தை உறுதிப்படுத்தும் வாய்ப்பைக் கொடுத்துள்ளோம்; பிரான்சிலும் இதேபோல் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஒட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளோம்; ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஒரு இலக்கிற்கு இது ஒரு வழிவகைதான். அத்துடன் எங்களுடைய இலக்கு உங்கள் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதான்.”

சமீபத்தில் நான் ஜேர்மனிய உலோகத் தொழிற்துறையின் குரலான Der Tag ல் Dawes or Dillon என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் படித்தேன். ஐரோப்பாவை வெற்றி கொள்வதற்காக அமெரிக்க நிதியம் அனுப்பி வைத்துள்ள condottieri (கடற்கொள்ளைக்காரர்கள் போன்ற நிறுவனம்) உடைய புதிய நிறுவனங்களில் ஒன்று டில்லன் ஆகும். இங்கிலாந்து Cecil Rhodes ஐ அதன் கடைசி காலனித்துவ தீரச் செயல்களுக்காக பெருமளவில் தோற்றுவித்தது; அவர் தென்னாபிரிக்காவில் ஒரு புதிய நாட்டை நிறுவினார். இத்தகைய நபர்கள் இப்பொழுது அமெரிக்காவில் பிறக்கின்றனர்; தென்னாபிரிக்காவை தோற்றுவிக்க அல்ல, மத்திய ஐரோப்பாவில் ஆதிக்கம் பெறுவதற்கு. டில்லனின் பணி ஜேர்மனிய உலோகத் தொழிலை மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதாகும். இந்த நோக்கத்திற்காக அவர் 50 மில்லியன் டாலர்களை மட்டுமே சேகரித்துள்ளார்; ஐரோப்பா இப்பொழுது தன்னை அதிக விலையில் விற்கவில்லை. இந்த 50 மில்லியன் டாலர்களை தன் பையில் கொண்டு அவர் ஜேர்மனி, பிரான்ஸ், லுக்சம்பேர்க் போன்ற எல்லைகளினால் ஏற்படும் ஐரோப்பிய தடைகளைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவர் நிலக்கரியையும், உலோகத்தையும் இணைக்க வேண்டும்; அவர் ஒரு மத்திய ஐரோப்பிய அறக்கட்டளையைத் (Trust) தோற்றுவிக்க விரும்புகிறார். அவர் ஒன்றும் அரசியல் புவியியல் பற்றி பொருட்படுத்துவதில்லை; அவர் அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்றுகூட நான் நம்புகிறேன். அது என்ன செய்துவிடும்? தற்பொழுது ஐரோப்பாவில் 50 மில்லியன் டாலர்கள் என்பது எவ்வித புவியியலுக்கும் கொடுக்கலாம். நான் கூறியதுபோல், அவருடைய நோக்கம் ஒற்றை அறக்கட்டளையின்கீழ் மத்திய ஐரோப்பாவில் உள்ள உலோகத் துறையைக் கொண்டுவந்து, பின் அதே அமெரிக்க எஃகு அறக்கட்டளைக்கு எதிராக நிறுத்த வேண்டும்; பிந்தையதின் தலைவரோ காரி ஆவார். இதில் ஐரோப்பா அமெரிக்க எஃகு அறக்கட்டளைக்கு எதிராகத் “தன்னைக் காத்துக் கொள்ளுவது” என்பது செயலுக்கு வரும்; அதாவது இரு அமெரிக்க நீராளிகள் (octopuses) ஒன்றோடு ஒன்று மோதி பின்னர் ஐரோப்பாவைத் திட்டமிட்டு சுரண்டுவதற்காக ஒன்றுபடும் என்பதைத்தான் குறிக்கும். எனவேதான் ஜேர்மனிய உலோகத்துறையின் செயற்கருவி துல்லியமாக “Dawes or Dillon” மாற்றீடுகள் பற்றி கவனம் எடுத்துள்ளது. விருப்புரிமை குறைந்ததுதான், இங்கு மூன்றாவது விருப்புரிமைக்கு இடம் இல்லை. டாஸ் என்பவர் முழு வலிமையும் கொண்டுள்ள கடன் கொடுப்பவர். பணிந்து போவதைத்தவிர, வேறு எதையும் அவரிடம் செய்வதற்கு இல்லை. ஒரு சிறப்பு வகைதான் அவர் என்பது உண்மைதான், ஆனால் ஒருவேளை அவர் நம்மை மூச்சுத் திணறடிக்க வைக்கமாட்டார். இக்கட்டுரை “டில்லனோ டாஸோ, (Dillon or Dawes) 1926ல் ஜேர்மனிக்கு இதுதான் மிக முக்கியமான பிரச்சினை.” என்ற வசனத்துடன் முடிவடைந்த்து.

பங்குகளை வாங்குவதின் மூலமாக “D வங்கிகள்” என்று அழைக்கப்படுவதின் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்கர்கள் ஏற்கனவே பெற்றுவிட்டனர்; இவை ஜேர்மனியில் நான்கு முக்கிய வங்கிகள் ஆகும். ஜேர்மனிய எண்ணெய் தொழிற்துறை அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தில் வால்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறது என்பது வெளிப்படை. முன்பு ஜேர்மனிய நிறுவனத்திற்கு உரிமையாக இருந்த துத்தநாகச் சுரங்கங்கள் ஹாரிமனுடைய கரங்களுக்குச் சென்றுவிட்டன; உலகச் சந்தையில் நயமற்ற துத்தநாகம் இதையொட்டி ஏகபோக உரிமையாக ஹாரிமன் கைகளில் உள்ளது.

அமெரிக்க மூலதனம் சில்லறை மற்றும் மொத்த வணிகத்தைச் செய்கிறது. போலந்தில் அமெரிக்க-சுவீடிஷ் இணைந்த அறக்கட்டளை அதன் முதல் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தாலியில் அமெரிக்கர்கள் ஒரு படி மேலே சென்றுள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் இத்தாலியில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மிகவும் படிப்பினை கொடுப்பவை. கிழக்கு நோக்கிய சந்தையை நிர்வகிக்கும் பொறுப்பு இத்தாலிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா பாதியளவு முடிந்த உற்பத்திப் பொருட்களை இத்தாலிக்கு கொடுத்து பிந்தையது கீழைத்தேச நுகர்வோருக்கு ஏற்றவாறு அவற்றை முழு உற்பத்திப் பொருட்களாக செய்து கொள்ள முடியும். முழு விவரங்களைப் பற்றியும் பொருட்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு நேரம் இல்லை. தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை அது வழங்கும். அனைத்துச் சக்தியையும் கொண்டுள்ள அட்லான்டிக்கை கடந்து அப்பென்னிஸ்க்கு (Appenines) வந்த வணிகர் அங்குள்ள கைவினைஞரை அணுகிக் கூறுகிறார்: “உங்களுக்குத் தேவையானதை நான் கொடுக்கிறேன்; இதை முழுமைப்படுத்தி ஆசிய மக்களின் தேவைக்கேற்ப வழங்கவும்.”

இந்த விவகாரங்களில் இன்னும் பிரான்ஸ் ஈடுபடவில்லை. அது பிடிவாதமாக இருப்பதுடன் எதிர்க்கவும் செய்கிறது. ஆனால் அதுவும் வளைந்து கொடுத்தே ஆக வேண்டும். தன்னுடைய நாணயத்தை அது உறுதிப்படுத்த வேண்டும்-அதாவது அமெரிக்காவின் சுருக்குக் கயிற்றுக்குள் தன் தலையைக் கொடுத்தாக வேண்டும். ஒவ்வொரு நாடும் சாம் மாமாவின் முன் தன் பங்கிற்காகக் காத்திருக்கின்றன.

இந்த நிலையை அடைந்து பாதுகாப்பதற்கு அமெரிக்கர்கள் எவ்வளவு செலவழித்துள்ளனர். ஒரு சிறிய தொகைதான். போர்க்கடன்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாடுகளில் முதலீடுகள் என்பது 10 பில்லியன்களுக்கு வருகிறது. மொத்தத்தில் இரண்டரை பில்லியன்களை ஐரோப்பா பெற்றுள்ளது; மேலும் அமெரிக்கா ஏற்கனவே அதை ஒரு வெற்றி பெற்ற நாட்டை நடத்துவது போல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய பொருளாதாரத்தில் அமெரிக்க முதலீடுகள் நூறில் ஒரு பங்கைத்தான் பிரதிபலிக்கின்றன, ஐரோப்பாவின் மொத்தச் செல்வத்தில் அதையும் விட குறைந்த பங்கைத்தான் கொண்டுள்ளன. ஆனால் நிலைமை ஊசலாடும்போது ஒரு புறத்திற்கு அதைத் தள்ளுவதற்கு ஒரு விரலசைப்பு போதுமானது. இந்தச் சுண்டு விரல் மூலம் அசைப்பை அமெரிக்கர்கள் செய்கின்றனர்; ஏற்கனவே அவர்கள் இதில் வல்லுனர்கள். ஏற்கனவே ஓரளவு மீட்கப்பட்டுவிட்ட சுற்றோட்ட மூலதனத்திற்குத் தேவையான முழு மீட்புப் பணிக்கு வேண்டிய போதுமான மூலதனத்தை ஐரோப்பா கொண்டிருக்கவில்லை. நூற்றுக்கணக்கான மில்லியன்கள் மதிப்புடைய கட்டிடங்கள் ஐரோப்பாவிடம் உள்ளன, ஆனால் கருவிகளைச் செயல்படுத்தத் தேவையான பத்து மில்லியன் ரொக்கம் இல்லை. அமெரிக்கர் வருகிறார், பத்து மில்லியன்களைக் கொடுக்கிறார், தன் நிபந்தனைகளை விதிக்கிறார். அவர்தான் எஜமானர், ஆணைகளைப் பிறப்பிக்கிறார்.

அமெரிக்கா இப்பொழுது தோற்றுவித்துள்ள புதிய சிசில் ரோட்ஸ்களில் ஒருவரைப் பற்றிய மிக நயமான கட்டுரை ஒன்றை நான் பெற்றுள்ளேன். இவர்களுடைய பெயர்களை நாம் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் களிப்புத் தருவதில்லை, ஆனால் வேறு வழியில்லை, அறிந்து கொள்ளப்பட வேண்டும். டாஸ் (Dawes) பெயரை நாம் நன்கு அறிந்துள்ளோம். டாஸின் மதிப்பு ஒரு குண்டூசியின் தலைகூடக் கிடையாது; ஆனால் அவருக்கு எதிராக ஐரோப்பா எதையும் செய்துவிட முடியாது. நாளை நாம் டில்லன் அல்லது மாக்ஸ் விண்டலர், என்னும் “நிதியப் பணிநிறுவனத்தின்” துணைத்தலைவர் பற்றி அறிவோம். உலகின் எப்பகுதியில் இருப்பதையும் விழுங்கிக் கொள்ளுதல், அதுதான் நிதியப் பணி என்று அழைக்கப்படுவது. மாக்ஸ் விண்ட்லர் கவிதை மொழியில் நிதியப் பணி பற்றி பேசுகிறார், ஏன் விவிலிய கவிதைகள் பாணியில் கூட.

அவர் சொல்கிறார் “நாம் அரசாங்கங்கள், உள்ளூர் மற்றும் நகராட்சி அதிகாரங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அமெரிக்கப் பணம் ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஜப்பானின் மறுசீரமைப்பிற்கு பயன்படுத்தபட்டது; அமெரிக்க நிதியிருப்புக்கள் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரியை தோற்கடிக்க அனுமதித்ததுடன், அந்நாடுகள் மீண்டும் எழுச்சி பெற ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளன.

முதலில் நீங்கள் அழிப்பீர்கள், பின்னர் நீங்கள் மறுசீரமைப்பீர்கள். இரண்டு செயற்பாடுகளுக்கும் நேர்மையான கட்டணத்தையும் வசூலிப்பீர்கள், அமெரிக்க மூலதனத்தின் குறுக்கிடு இல்லாமல் ஜப்பானில் ஒரு நிலநடுக்கம்தான் ஏற்பட்டது என்பது வெளிப்படை. ஆனால் கீழே கூறப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்:

“டச்சுக் குடியேற்றங்களுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நாங்கள் கடன்களை வழங்குகிறோம், ஆர்ஜென்டினாவில் அரசாங்கங்களுக்கும் நகரங்களுக்கும், தென்னாபிரிக்காவில் சுரங்கத் தொழில்துறைக்கு, சீலியின் நைட்ரேட் உற்பத்தி செய்பவர்களுக்கு, பிரேசிலில் கோப்பி தோட்ட உரிமையாளர்களுக்கு, கொலம்பியாவில் புகையிலை, பருத்தி உற்பத்தி செய்பவர்களுக்கும். சுகாதாரத் திட்டங்களை சாதிக்க பெருவிற்குப் பணம் கொடுக்கிறோம். டேனிஷ் வங்கிகளுக்குக் கொஞ்சம், ஸ்வீடனின் உற்பத்தியாளர்களுக்கும், நோர்வேயில் நீர்-மின்விசை நிலையங்களுக்கும், பின்னிஷ் வங்கிகளுக்கும், செக்கோஸ்லோவாக்கியாவில் ஆலைகளில் இயந்திரக் கட்டமைப்புக்களுக்காவும், யூகோஸ்லாவியாவில் இரும்புப்பாதைகளை கட்டவும், இத்தாலியில் பொதுநலப் பயன்பாடுகளுக்கும் ஸ்பெயினின் தொலைபேசி நிறுவனங்களுக்கும் கொடுக்கிறோம்.”

உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும், இதில் ஒரு உண்மையான கருத்து வட்டம் உண்டு. 60 பில்லியன் டாலர்கள் கொடுக்கும் ஒலி என்னும் அந்த வட்டம் இப்பொழுது அமெரிக்க வங்கிகளில் உள்ளது. இந்த ஓசையை நாம் மீண்டும் வரவிருக்கும் வரலாற்றுக் காலத்திலும் பழையபடி கேட்போம்.

போர் முடிந்து பின்னர் குறுகிய காலத்தில் தேசங்களின் கழகம் (League of Nations) தன்னை நிறுவிக்கொள்ளும் வழிவகையில் இருந்தபோது, அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்த சமாதானவாதிகள் அவரவர் மொழியில் பொய்களைக் கூறிக் கொண்டிருந்தபோது, நல்ல நோக்கத்தை கொண்டவர்தான் என்று கருதப்பட்ட ஆங்கிலேய பொருளாதார வல்லுனர் ஜோர்ஜ் பைஷ், தேசங்களின் கழகத்திற்கு மனிதகுலம் முழுவதும் சமாதானமாக இருக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடன் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இந்த சிறப்பான முயற்சிக்கு 35 பில்லியன் டாலர்கள் வேண்டும் என்று மதிப்பிட்ட அவர் அமெரிக்கா 15 பில்லியன்கள், இங்கிலாந்து 5 பில்லியன்கள் பிற நாடுகள் எஞ்சிய 15 பில்லியன்களை வழங்க வேண்டும் என்றும் கூறினார். இந்தச் சிறந்த திட்டத்தின்படி, பெரிய கடனில் அமெரிக்கா கிட்டத்தட்ட பாதி நிதியைக் கொடுக்க வேண்டும், மிச்ச பங்கு பல நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்; இதன்மூலம் அமெரிக்கா ஒரு கட்டுப்படுத்தும் பங்கைப் பெறும். இப்படி அனைத்தையும் காப்பாற்றும் கடன் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை ஆனால் மொத்தத்தில் இப்பொழுது நடப்பது இன்னும் திறமையான வகையில் இதே திட்டம் நடப்பதற்கு சாதிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா படிப்படியாக மனித இனத்தின் மீது கட்டுப்பாட்டை பெறக்கூடிய வகையில் பங்குகளை பற்றி எடுத்துக் கொண்டு வருகிறது. உறுதியாக இது பெரிய முயற்சிதான். ஆனால் ஆபத்தானது. இதை நம்புவதில் அமெரிக்கர்கள் அதிக நாள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அமைதிவாதமும், குழப்பவாதிகளும்

இன்னும் தொடருமுன், ஒரு குழப்பத்தை நான் தீர்க்க வேண்டும். நாம் ஆராயும் உலக நிகழ்ச்சிப்போக்கள் வெகுவிரைவாக அபிவிருத்தியடைந்து வருவதுடன் எமது சிந்தனையால் மிகச்சிக்கலுடன் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் உள்வாங்கிக் கொள்ளக்கூடியதாகவும் மிகப்பெரிய அளவானதாகவும், பரந்ததாகவும் இருக்கின்றது. இது குறித்து சர்வதேச ஊடகம், பாட்டாளி வர்க்கம் மற்றும் முதலாளித்துவத்தின் ஊடகங்களிடையே அருமையான விவாதம் ஏற்கனவே தோன்றியுள்ளது என்பது வியப்பளிக்கவில்லை. அமெரிக்கா பால்க்கன் மயப்படுத்தப்பட்டுள்ள (Balkanised) ஐரோப்பாவுடன் கொண்டுள்ள பங்கு பற்றி ஜேர்மனியில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இப்பிரச்சினை குறித்து எழுந்துள்ள சர்வதேச சர்ச்சையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரங்கில் இருந்து என்னால் கொடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றைப் பற்றிய குறிப்பு வெளிப்பட்டது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள உறவுகளைப்பற்றி விவரிக்கும் அதே பக்கத்தைத் துல்லியமாக நான் சமீபத்தில் American labor review என்னும் நூலினை பார்த்தேன்; என்னுடைய கண்களின் பார்வை தற்செயலாக “பகிர்வுகள்” பற்றிய ஒரு குறிப்பின்மீது விழுந்தன; தோழர்களே, எனக்குப் பெரும் வியப்பைத் தரும் விதத்தில் நான் அறிந்துகொண்டது இதுதான்: “ஒரு சமாதானமான ஆங்கில-அமெரிக்க உறவுகளின் காலத்தில் நாம் நுழைந்துள்ளோம் என்ற கருத்தை ட்ரொட்ஸ்கி கொண்டுள்ளார்; ஆங்கில-அமெரிக்க உறவுகளின் செல்வாக்கு (ட்ரொட்ஸ்கியின் கருத்துப்படி) உலக முதலாளித்துவத்தின் சிதைவிற்குப் பதிலாக ஒருங்கிணைப்பிற்கு கூடுதல் பங்கைக் கொடுக்கும்.’’

இது ஒன்றும் மோசமில்லை, சரிதானே? மக்டோனால்ட் கூட இதைவிடச் சிறப்பாகக் கூறியிருக்க முடியாது. மேலும்:

“ஐரோப்பா ஒரு பகிர்வில் வைக்கப்படுகிறது என்னும் ட்ரொட்ஸ்கியின் பழைய கோட்பாடு [ஏன் பழைய? இது இன்னும் இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை-L.T.] அதையொட்டி ஒரு அமெரிக்காவின் டொமினியனாக ஆனது என்பது ஆங்கிலோ-அமெரிக்க உறவுகளைப் பாரட்டுவதுடன் பிணைந்துள்ளது.” இன்னும் இதே போன்ற கருத்துக்கள். (J.Lovestone [4] Workers’ Monthly, Novemebr 1925.)

இந்த வரிகளைப் படித்த போது, என்னுடைய வியப்பின் அளவு மிகப் பெரிதாக இருந்ததால், நான் மூன்று நிமிடங்களுக்கு என் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டேன். எங்கு, எப்பொழுது நான் இங்கிலாந்தும் அமெரிக்காவும் சமாதான உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன, அதையொட்டி அவை ஐரோப்பிய முதலாளித்துவத்தை மீட்கும், சிதையச் செய்யாது என்று கூறினேன்? பொதுவாக வெற்றிவாகை காலத்திற்குப் பின்னர் ஒரு கம்யூனிஸ்ட் இதையோ அல்லது இதுபோன்றதையோ கூறியிருந்தால், அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட்டிருப்பார். ஆனால் இத்தகைய அபத்தங்கள் என்னிடம் இருந்து வந்தன என்பதை நான் படிக்கும்போது, அவற்றை மறுபடியும் படித்து இந்தப் பொருள் பற்றி இந்த அரங்கில் என்ன கூறினேன் என்பதை மீண்டும் படித்தேன். இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த உரையை இப்பொழுது மீண்டும் குறிப்பிடுகிறேன் என்றால், அது லவ்ஸ்டான் மற்றும் அவரைப் போன்றோருக்கு, எந்தப் பொருளைப் பற்றியும் ஒருவர் எழுதுவதற்கு விரும்பினால்-ஆங்கிலத்திலோ, பிரெஞ்சு மொழியிலோ, ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ-தான் என்ன எழுதுகிறோம் என்பதை ஒருவர் உணர்ந்து எழுத வேண்டும், வாசகரை எங்கு இட்டுச் செல்கிறோம் என்பதை அறிந்து எழுத வேண்டும். நான் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் அன்று நான் எழுப்பிய பிரச்சினை இன்றும்கூட பொருத்தமுடையதுதான் என்பதால். எனவேதான் என்னுடைய உரையில் இருந்து சில கருத்துக்களை நான் வாசித்துக் காட்ட வேண்டும்:

“அமெரிக்க மூலதனம் எதை விரும்புகிறது? எதை நாட அது முற்படுகிறது? இவ்வினாக்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்டேன்; பின் விடையிறுத்தேன்:

அது உறுதியை நாட முற்படுகிறது என்று நம்மிடம் கூறப்படுகிறது. ஐரோப்பிய சந்தையை மீண்டும் நிறுவ அது விரும்புகிறது. ஐரோப்பாவை திவால்தன்மைக்கு ஆளாகாமல் செய்ய அது விரும்புகிறது. எந்த அளவிற்கு, எப்படி? தன்னுடைய மேலாதிக்கித்தின்கீழ். இதன் பொருள் என்ன? ஐரோப்பா மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படும், ஆனால் நன்கு வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள்தான்; உலகச் சந்தையின் தடைக்குட்டபட்ட சில பிரிவுகள் அதற்கு ஒதுக்கப்படும். அமெரிக்க மூலதனம் இப்பொழுது ஆதிக்கம் செலுத்துகிறது; அது தூதர்களுக்கு ஆணையிடுகிறது. அதேபோல் இது ஐரோப்பிய வங்கிகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் ஆணைகளை கொடுக்கத் தயாரித்து வருகிறது; முழு ஐரோப்பிய முதலாளித்துவத்தினருக்கும்.”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன்: “இது இராஜதந்திரிகளுக்கு (வெர்சாய், வாஷிங்டனில்) உத்தரவிடுகிறது, வங்கிகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கத் தயார் செய்கிறது” என. இன்று நான் கூறுகிறேன்: “ஏற்கனவே அது பல ஐரோப்பிய நாடுகளின் வங்கிகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதுடன், ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வங்கிகள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவற்றிற்கு உத்தரவுகளை பிறப்பிக்கத் தயாரிப்பு செய்கின்றது.” மேற்கோளை நான் தொடர்கிறேன்: “இது சந்தையை இரு பிரிவுகளாக்கும், இது ஐரோப்பிய நிதி முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும். அமெரிக்க மூலதனம் என்ன விரும்புகிறது என்னும் வினாவிற்கு இன்னும் தெளிவான, துல்லியமான விடையிறுக்க, வேண்டுமென்றால் அது முதலாளித்துவ ஐரோப்பாவை பிரித்து வைத்திருக்க விரும்புகிறது.” ஐரோப்பாவை பிரித்து வைத்திருக்கிறதோ என்றோ இனி பிரித்து வைக்கும் என்றோ நான் கூறவில்லை, அது அவ்வாறு செய்ய விரும்புகிறது. இதைத்தான் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன்.

இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான “சமாதான ஒத்துழைப்பு” பற்றி நான் பேசியதாக லவ்ஸ்டோன் கூறுகிறார். இந்த உரை பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்புக்களை நாம் காண்போம்.

“ஜேர்மனி, பிரான்ஸ் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல; இது கிரேட் பிரிட்டன் பற்றிய பிரச்சினையும் ஆகும். அந்த நாடும் இதே விதிக்குத் தாழ்ந்து நிற்க தயாரிப்பை நடத்தத்தான் வேண்டும்…. அமெரிக்கா இப்பொழுது இங்கிலாந்துடன் இணைந்து நடக்கிறது, ஒரு ஆங்கிலோ-சாக்சன் முகாம் அமைக்கப்பட்டுள்ளது, ஆங்கிலோ-சாக்சன் (Anglo-Saxon) முதலாளித்துவம் மற்றும் ஆங்கிலோ-சாக்சன் அரசியல் பற்றியும் பேசப்படுகிறது என்பது உறுதியானதுதான்…. ஆனால் இவ்விதத்தில் பேசுவது என்பது நிலைமைப் புரிந்துகொள்ளாததான தன்மையைத்தான் காட்டும். முக்கிய உலக விரோதப்போக்கு அமெரிக்க, கிரேட் பிரட்டனின் நலன்களைத் தொடர்ந்து ஏற்படுகிறது. அதைத்தான் வருங்காலம் இன்னும் தெளிவாகக் காட்டும். - ஏன்? ஏனெனில் இங்கிலாந்து இன்னும்கூட, அமெரிக்காவை அடுத்து செல்வம் கொழித்த, சக்திவாய்ந்த நாடாகயிருக்கிறது. அதுதான் முக்கிய போட்டி நாடாகவும் முக்கிய தடையாகவுமிருக்கிறது.

இதே கருத்தைத்தான் இன்னும் வலுவான முறையில் கம்யூனிச அகிலத்தின் ஐந்தாம் உலகக் காங்கிரசில் நான் மேம்படுத்திக் கூறினேன். ஆனால் அந்த உரைகளைக் கூறி உங்களைக் களைப்படையச் செய்ய மாட்டேன். அமெரிக்கா நிறுவிய “சமாதான” உறவுகளைப் பற்றி என்னுடைய உரையில் இருந்து மீண்டும் மேற்கோளிடுகிறேன்:

“உலகம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருதல் என்னும் இந்த அமெரிக்க “சமாதானத்” திட்டம் ஒரு சமாதானத் திட்டமே அல்ல. மாறாக இது போர்கள் மற்றும் மிகப் பெரிய புரட்சிகர எழுச்சிகளை தன்னகத்தை பொதித்து வைத்துள்ளது. மற்ற நாடுகளின் முதலாளித்துவம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுவதற்கு உடன்படுவது அரிது; ஏனெனில் அமெரிக்காவுக்கு கப்பம் கட்டும் நாடுகளாக ஆவதற்கு சிறிதும் எதிர்ப்பின்றி உடன்படமாட்டா. இதில் உள்ள முரண்பாடுகள் மிகப்பெரியவை, இங்கிலாந்தில் உலக ஆதிக்கம் செலுத்துதல் என்னும் பழக்கம் மிகச் சக்தி வாய்ந்தது. இராணுவ மோதல்கள் தவிர்க்க முடியாதவை. “சமாதான” அமெரிக்க முறை சகாப்தம் என்பது இப்பொழுது ஒரு தயாரிப்பு நிலையில்தான் தொடங்கியுள்ளது; இது முன்னோப்போதும் இல்லாத அளவையும் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூரத்தையும் கொண்டு வர உள்ள புதிய போர்களுக்கான தயாரிப்புகள்தான்.”

இதைத்தான் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “சமாதான” உறவுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.

இறுதியாக இந்த அரங்கில் இருந்து அமெரிக்கச் செல்வாக்கையொட்டி ஐரோப்பிய முரண்பாடுகள் நின்றுவிடுவது பற்றி நான் கூறியது இதுதான்:

“ஏகாதிபத்திய போருக்கு தயார் செய்து ஐரோப்பாவில் அதை பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டவிழ்த்துவிட்ட மற்றும் அப்போரினால் தீவிரமடைந்து மற்றும் இராஜதந்திர முறையில் வேர்சாய் உடன்படிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட முரண்பாடுகள் ஒரு வெளிக்காயமாக இன்னும் தொடர்ச்சியாக இருப்பதுடன் ஐரோப்பாவில் அபிவிருத்தியடைந்துவரும் வர்க்கப் போராட்டத்தினால் இவை தீவிரமடைந்துள்ளன என்பதை சிறிதும் மறுக்க முடியாதுள்ளது. அமெரிக்கா அதன் முழுத் திறைமையையும் வெளிப்படுத்தி இந்த முரண்பாடுகளுக்கு எதிராக நிற்கும்.”

இரு ஆண்டுகள் கடந்து விட்டன. தோழர் லவ்ஸ்டோன் ஒருவேளை சிறந்த விமர்சகராக இருக்கலாம்; ரஷ்ய பழமொழி கூறுவது போல் அவர்கள் எப்பொழுதும் ஒரு விரலை ஆகாயத்தை நோக்கிச் சுட்டிக்காட்டி, எப்பொழுதும் சரியாகக் குறிவைப்பவர்களைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால் காலம் என்பது இவரைவிடப் பெரிய விமர்சனத்தன்மை கொண்டது.

ஒரு அமெரிக்கரான Stibelling க்கு ஒரு முறை ஏங்கல்ஸ் கொடுத்த ஆலோசனையுடன் என்னுடைய உரையை முடிக்கிறேன்: “விஞ்ஞானரீதியான பிரச்சினைகளை ஆராய ஒருவர் விரும்பினால், முதலில் அதைப்பற்றி ஒரு ஆசிரியர் எழுதியுள்ளபடி வாசிப்பது முக்கியம். மற்றும் அதில் என்ன கூறப்படவில்லை என்பது பற்றி வாசிக்க முனையக்கூடாது.” முதிய ஏங்கெல்ஸின் இச்சொற்கள் மிகச் சிறந்தவை, அமெரிக்காவிற்கு மட்டுமின்றி, ஐந்து முழுக் கண்டங்களுக்கும் சிறந்தவைதான்.

நடைமுறையில் அமெரிக்க அமைதிவாதம்

எல்லா பிரச்சினைகளுக்கும் காலம் தான் ஒரு சிறந்த விமர்சகராக உள்ளது. அவ்வாறிருக்கையில், கடந்த ஆண்டுகளின் போது, என்ன மாதிரியான அமெரிக்க அணுகுமுறைகள் சத்தமில்லாமல் ஊடுறுவின என்று பார்ப்போம். மிக முக்கியமான உண்மைகளைக் குறித்த ஒரு சாதாரண மதிப்பீடே போதுமானது, அமெரிக்க 'அமைதிவாதம்' மெதுமெதுவாக வெற்றி பெற்றுள்ளது என்பதை நமக்கு எடுத்துக்காட்டிவிடும்; ஆனால் அது சத்தமில்லாமல் ஏகாதிபத்தியத்தின் ஒரு சூறையாடும் அணுகுமுறையாகவும், மிகப்பெரும் மோதல்களுக்குப் பாதி-மறைமுகமான தயாரிப்புகளாகவும் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்க 'அமைதிவாதத்தின்' சிறந்த வடிவார்ந்த வெளிப்பாடும், அதன் சாரத்தின் வெளிப்பாடும், 1922 வாஷிங்டன் மாநாட்டில் வெளியிடப்பட்டது. 1919-20இல் பெரும்பாலான மக்கள், அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன், தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டது இதுதான்: அமெரிக்கா அதன் கப்பற்கட்டும் திட்டத்தின் மூலமாக, பிரிட்டனுடன் கடற்பிரதேச சமத்துவத்தை உறுதிப்படுத்திக் கொண்டால், 1922-23இல் என்ன நடக்கும்? ஒரு சிறிய தீவான இங்கிலாந்து, வேறெந்த இரண்டு நாடுகளின் கூட்டு-கடற்படைகளையும் விட, அதனுடைய சொந்த கடற்படையின் மேலாதிக்கத்தினால் அதன் செல்வாக்கை தக்க வைத்துக் கொண்டிருந்தது. எந்தவொரு போராட்டமும் இல்லாமல், அது இந்த மேலாதிக்கத்தைக் கைவிட்டுவிடுமா? ஜப்பானின் பங்களிப்புடன், அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே 1922-23இல் ஒரு யுத்தம் வருவதைத் தவிர்க்க முடியாது என்று என்னைப் போலவே, நிறைய நபர்கள் கருதினார்கள். ஆனால் அதற்கு மாறாக நடந்ததென்ன? யுத்தம் வரவேண்டிய இடத்தில், பட்டவர்த்தனமாக 'அமைதிவாதம்' வந்தது. இங்கிலாந்தை வாஷிங்டனுக்கு அழைத்த அமெரிக்கா, இதைத்தான் கூறியது: 'தயவுசெய்து பங்கீடுகளைப் பெற்று கொள்ளுங்கள். எனக்கு 5 யூனிட்கள், உங்களுக்கு 5 யூனிட்கள், ஜப்பானுக்கு 3, பிரான்சிற்கு 3.' அங்கே ஒரு கடற்படை திட்டம் இருக்கும்! இங்கிலாந்து இதை ஏற்றுக்கொண்டது.

இது என்ன? இது தான் 'அமைதிவாதம்'. ஆனால் இது, கொடூரமான பொருளாதார மேலாதிக்கதின் பலத்தைக் கொண்டு அதன் விருப்பத்தைத் திணிக்கின்ற மற்றும் அடுத்த வரலாற்று காலக்கட்டத்தில் 'அமைதியாக' இராணுவ மேலாதிக்கத்திற்குத் தயார் செய்கின்ற, ஒருவகையான அமைதிவாதமாகும்.

அடுத்து, டேவெஸ் திட்டம் என்ன ஆனது? ரூஹெர் பள்ளத்தாக்கினை கைப்பற்றிய பின்னர், புவான்கேர் (Poincare) மத்திய ஐரோப்பாவிற்குள் அவரின் மழலை திட்டங்களுடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த போதினும், அமெரிக்கர்கள் அவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளை உற்றுப்ப்பார்த்துக் கொண்டு, அந்த காட்சியில் தாக்குப்பிடித்து காத்திருந்தார்கள். பிரான்க் (Franc) வீழ்ச்சி மற்றும் ஏனைய ஆத்திரமூட்டிய சம்பவங்கள் ஓர் உடன்படிக்கையை உடைக்கும் நிலைக்கு புவான்கேரை நிர்பந்தப்படுத்திய போது, அமெரிக்கா ஓர் ஐரோப்பாவின் அமைதி திட்டத்துடன் உள்ளே நுழைந்தது. ஜேர்மனியை மேற்பார்வையிடும் உரிமையை அது, 800 மில்லியன் மார்க்குகளைக் கொண்டு வாங்கியது. இன்னும் கூற வேண்டுமானால், அதில் பாதி இங்கிலாந்தால் வினியோகிக்கப்பட்டது. இந்த ஒரு சில மில்லியன் டாலர் பேரவிலைக்காக, வோல்ஸ்ட்ரீட் அதன் கட்டுப்பாட்டு விரிவை (Controller astride) ஜேர்மன் மக்களின் கழுத்தில் வைத்தது. 'அமைதிவாதம்'? கழுத்தை நெரிக்கும் இந்த அமைதிவாதத்தின் மூக்கை உங்களால் உடைக்க முடியாது.

அடுத்து, செலாவணியை ஸ்திரப்படுத்தல் என்றால் என்ன? ஐரோப்பாவில் ஏற்படும் செலாவணி ஏற்ற இறக்கங்கள், அமெரிக்கரைப் பாதிக்கிறது. அமெரிக்கர் பாதிக்கப்படுகிறார், ஏனென்றால் இது மலிவாக ஏற்றுமதி செய்ய ஐரோப்பாவை அனுமதிக்கிறது. தாம் அளித்த கடன்களின் மீது வழக்கமான வட்டித்தொகைகளைச் சேகரிக்கவும், அத்துடன் பொதுவாக நிதியியல் ஒழுங்கமைப்பைப் பாதுகாக்கவும், இந்த இரண்டிற்காகவும் ஒரு ஸ்திரமான செலாவணி அமெரிக்கருக்குத் தேவைப்படுகிறது. அப்படியில்லையென்றால் ஒருவரால் அவருடைய மூலதனத்தை எவ்வாறு ஐரோப்பாவில் முதலீடு செய்ய முடியும்? ஆகவே அமெரிக்கா, ஒரு ஸ்திரமான செலாவணியை ஏற்படுத்த ஜேர்மனியர்களை நிர்பந்தித்தது. இந்த தேவைக்காக அவர் பிரித்தானியர்களுக்கு 300 மில்லியன் டாலர் கடனாக அளித்து, அவர்களையும் கட்டாயப்படுத்துகிறார்; இலாய்டு ஜோர்ஜ் சமீபத்தில் குறிப்பிட்டார்: “தற்போது பவுண்ட் ஸ்டேர்லிங், டாலரின் முகமதிப்பிற்கு பொருந்தி இருக்கிறது.” இலாய்டு ஜோர்ஜ், ஒரு வயதான திமிர்பிடித்த கிழவன். பவுண்டு ஸ்டெர்லிங் டாலரின் முகமதிப்பிற்கு பொருத்தமாக இருக்கிறது, ஏனென்றால் பெருமிதமான பவுண்டு ஸ்டேர்லிங்கின் முதுகெலும்பை அந்த 300 மில்லியன் டாலர் தூக்கி நிறுத்திக் கொண்டிருக்கிறது.

அடுத்து, பிரான்சின் நிலை என்ன? பிரெஞ்சு பூர்ஷூவா, ஒரு ஸ்திரமான செலாவணி மாற்றத்திற்காக ஏங்கிக் நிற்கிறது. இதுவொரு வலிமிக்க செயல்முறையாக இருக்குமென்று அமெரிக்கர் கூறுகிறார்: எந்தவித நிபந்தனைகளின் அடிப்படையிலும் உங்களுக்கு கடன் கிடையாது; உங்களால் செய்ய முடிந்ததை செய்யுங்கள். பிரான்ஸ் அதன் கடன்களைத் திருப்பி அளிப்பதற்காக நிராயுதபாணியாக வேண்டும் என்று அமெரிக்கர் வலியுறுத்துகிறார். இதுதான் பட்டவர்த்தனமான அமைதிவாதம், நிராயுதபாணியாக்குதல், செலாவணியை ஸ்திரப்படுத்துதல் - இதை யாராலும் மாற்ற முடியாது. பிரான்ஸைத் தனது காலடியில் கொண்டு வர அமெரிக்கா 'அமைதியாக' தயார் செய்கிறது.

தங்கத்தை சமச்சீராக்குதல் மற்றும் கடன்கள் குறித்த பிரச்சினைகள் ஏற்கனவே இங்கிலாந்துடன் தீர்க்கப்பட்டிருந்தன. சரியாக சொல்வதானால், பிரிட்டிஷ் இனிமுதல் ஆண்டுக்கு சுமார் 330 மில்லியன் ரூபிளை (ruble) அமெரிக்காவிற்குச் செலுத்த வேண்டும். இங்கிலாந்து, அதன் பங்கிற்கு, இத்தாலிய கடன் பிரச்சினையைத் தீர்த்துவிட்டது. ஆனால் இதிலிருந்து அது சொல்லும்படியாக ஒன்றையும் பெறப்போவதில்லை. பிரான்ஸ் தான் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் முதன்மை கடனாளியாக இருக்கிறது; இதுவரை அது ஒன்றையுமே செலுத்தவில்லை. இருந்தாலும், அந்த பழைய கடன்கள் அனைத்தும் இரத்து செய்யப்பட, ஒரு வித்தியாசமான அமைப்பு - நிதியியல் அல்லாத, மாறாக புரட்சிகரமான ஓர் அமைப்பு - நிகழ்வுகளில் முழுமையாக தலையீடு செய்யாத வரையில், அது அதன் கடன்களைச் செலுத்தித் தான் ஆகவேண்டும். பிரான்சிற்கும், இங்கிலாந்திற்கும் ஜேர்மனி கடன்களைக் கட்டி வருகிறது. அது நம்மிடமிருந்தும் கூட கடன்களைக் கோருகிறது. அப்படியென்றால், ஒட்டுமொத்தமாக ஐரோப்பாவின் நிலைமை என்ன?

பிரிட்டிஷ் முதலாளித்துவம் ஒட்டுமொத்த ஐரோப்பாவிடமிருந்தும் அதன் கடன்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வசூலிக்கிறது அல்லது வசூலிக்கத் தயாராகிறது. இது ஏனென்றால், இதன்பின்னர், இவ்வாறு வசூலிக்கப்பட்ட கூட்டுத்தொகையையும், அதனுடன் அதனின் சொந்த தொகையையும் சேர்த்து, அட்லாண்டிக் வழியாக அங்கிள் சாமிற்கு (அமெரிக்க அரசாங்கத்தின் தேசிய புனைப்பெயர்) அளிக்க வேண்டியதிருக்கிறது. திரு. பால்ட்வினோ அல்லது கிங் ஜோர்ஜோ இன்று என்ன மாதிரியான நிர்வாகத்தைக் கொண்டிருக்கிறார்கள்? ஐரோப்பா என்றழைக்கப்படும் ஒரு பிராந்தியத்தில், வெறுமனே அமெரிக்காவிற்கான தலைமை வரி-வசூலிப்பாளர்களாக இருக்கிறார்கள். ஐரோப்பிய மக்களிடமிருந்து நிலுவைகளைப் பறித்து, அமெரிக்காவிற்கு அனுப்புவது தான் இந்த முகவர்களின் வேலை. நீங்கள் கவனித்துப் பார்த்தால், இந்த நிர்வாகம் சத்தமில்லாமல், பட்டவர்த்தனமான அமைதிவாதியாக இருப்பதைப் பார்க்கலாம். அமெரிக்க அமைப்புமுறையின்கீழ், கடன்-வினியோகித்தலானது, மிகவும் நேர்மையான வரிசெலுத்துவோர்களின் மேற்பார்வையில், அதாவது பிரிட்டனின் மேற்பார்வையில் (இதற்காக இது தலைமை வரி-வசூலிப்பாளர் என்ற பெயரைப் பெறுகிறது) ஐரோப்பிய மக்களின் பரஸ்பர நிதியியல் உறவுகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அமெரிக்காவின் ஐரோப்பிய கொள்கை முற்றுமுதலாக இதில் தான் தங்கியுள்ளது: ஜேர்மனி பிரான்சிற்கு நிதியளிக்கும்; இத்தாலி இங்கிலாந்திற்கு அளிக்கும்; பிரான்ஸூம், இங்கிலாந்திற்கு அளிக்கும்; ரஷ்யா, ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, எனக்கு நிதியளிக்கும், அதாவது அமெரிக்காவிற்கு. கடன்சுமையின் இந்த அமைப்புநிலை அமெரிக்க அமைதிவாதத்தின் தூண்களில் ஒன்றை கட்டியமைக்கிறது.

இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையில் எண்ணெய் வளத்திற்காக நடக்கும் சர்வதேச போராட்டம், ஏற்கனவே புரட்சிகர அதிர்ச்சிகளுக்கும், மெக்சிக்கோ, துருக்கி, பேர்சியாவில் இராணுவ மோதல்களுக்கும் இட்டுச் சென்றுள்ளது. ஆனால் ஒருவேளை நாளைய செய்தியிதழ்கள், எண்ணெய் வளத்தின்மீது இங்கிலாந்தும், அமெரிக்காவும் ஓர் அமைதியான உடன்பாட்டிற்கு வந்துவிட்டதாக நமக்கு அறிவிக்கலாம். இது எதைக் குறிக்கும்? இது வாஷிங்டனில் நடைபெறும் ஒரு எண்ணெய்வள மாநாட்டைக் குறிக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இங்கிலாந்திற்குப் போதியளவிற்கு எண்ணெய் வினியோகிக்க உடன்பாடு செய்யப்படும். மீண்டும் விளைவு, 14-காரட் அமைதிவாதம் தான்.

மற்றொரு துறையில், அதாவது சந்தைகளுக்கான போட்டியில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு, ஓர் 'அமைதியான' நெறிமுறைகளை நோக்கி இம்மாதிரியே நடத்தப்படும். முன்னாள் மந்திரியும், ஒரு ஜேர்மன் எழுத்தாளருமான பாரோன் ரெப்னிட்ஜ், அவர் எந்த அரசாங்கத்தில் இருந்தார் என்று நினைவில்லை, (ஜேர்மனியில் முன்னாள் மந்திரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்) அவர் இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான சந்தை போட்டியைக் குறித்து பின்வருமாறு கூறியிருக்கிறார்: உங்களுக்கே தெரியும், அமெரிக்காவிற்கு ஆதரவாக, கனடாவிற்குள்ளோ, தெற்கு அமெரிக்காவிற்கு உள்ளோ, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் கிழக்குக்கடற்கரையிலும், பசிபிக் பிராந்தியத்திலும் இங்கிலாந்து விலகி இருக்கும் வரையில், அதனால் யுத்தத்தைத் தவிர்க்க முடியும்: “அப்படியிருந்தால், ஐரோப்பாவிற்கு வெளியே அதற்கு வேறு துறைகள் கிடைக்கும்.” அதற்குப் பின்னர், இங்கிலாந்திற்காக என்ன தங்கியிருக்கும் என்று வெறுமனே என்னால் கூற முடியாது. ஆனால் மாற்றீடு மிகத் துல்லியமாக முன்னால் நிற்கிறது: அதாவது, “ஒன்று யுத்தத்தை நாட வேண்டும் அல்லது ஒரு பகிர்வு பற்றாக்குறைக்காக 'அமைதிவாதத்திற்கு' சுருங்க வேண்டும்.

இங்கே சமீபத்திய அத்தியாயமாக, முற்றிலும் புதிய ஒன்றாக இருப்பது இது தான்: அதாவது, வெளிநாட்டு மூலப்பொருட்களின் மீது அக்கறை கொண்ட - உயர்ந்தமட்டத்தில் ஆர்வம் கொண்ட ஓர் அத்தியாயம். பாருங்கள், ஏனையவர்களிடம் உள்ள பல விஷயங்கள் அமெரிக்காவில் இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து, ஒட்டுமொத்தமாக உலகளவிலுள்ள மூலப்பொருட்களின் பகிர்வை எடுத்துக்காட்டும் ஒரு வரைபடத்தை அமெரிக்க இதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. இப்போது அவர்கள் ஒட்டுமொத்த கண்டத்தின் அடிப்படையில் பேசுகிறார்கள்; சிந்திக்கிறார்கள். ஏதோவொரு வகையில் அல்லது வேறுவிதத்தில் வடிகால்களாக இருந்த, அல்பேனியா, பல்கேரியா ஆகியவற்றின் மீது செல்வாக்கு செலுத்திய ஐரோப்பிய குறுநிலவாதிகள் (pygmies), அந்த நிலங்களின் பகுதிகளை அபகரித்தனர். அமெரிக்கர்கள் கண்டங்களின் அடிப்படையில் சிந்திக்கின்றனர்: இது புவியியலின் ஆய்வை எளிமைப்படுத்துகிறது என்றாலும், இதில் மிக முக்கியமானது என்னவென்றால், இது கொள்ளையடிப்பதற்கும் பெரும் நிலப்பகுதியை அளிக்கிறது. மேலும், பத்து கரும்புள்ளிகளுடன், அதாவது அமெரிக்க பொருளாதாரத்திற்குத் தேவையான பத்து மூலப்பொருட்களின் பெரும் பற்றாக்குறைகளைக் குறித்த, ஓர் உலக வரைபடத்தை அமெரிக்க இதழ்கள் பிரசுரித்திருக்கின்றன: இரப்பர், கோப்பி, நைட்ரேட்கள், தகரம், பொட்டாஷ், சீஷல் மற்றும் ஏனைய முக்கியத்துவம் குறைந்த மூலப்பொருட்கள். இந்த அனைத்து மூலப்பொருட்களும் அமெரிக்காவால் அல்லாமல், ஏனைய நாடுகளால் ஏகபோகமாக்கப்பட்டு இருப்பதாக தோன்றுகிறது (கொடுமையிலும் கொடுமை!). உலக உற்பத்தியில் சுமார் 70 சதவீதமாக இருக்கும் இரப்பர், வெப்ப மண்டல (tropical) தீவுகளில் இருந்து வருகிறது, இது இங்கிலாந்திற்குச் சொந்தமானது, இந்நிலையில் அமெரிக்கா அதன் வழியில், வாகனத்துறை டயர்களுக்காகவும், ஏனைய தேவைகளுக்காகவும் உலக உற்பத்தியில் 70 சதவீதத்தைப் பயன்படுத்துகிறது. கோப்பி, பிரேசிலில் இருந்து வருகிறது. ஆங்கிலேயரின் நிதியுதவியைப் பெறும் சிலி, நைட்ரேட்களை அளிக்கிறது. மேலும், உடனடியாகவும் இடைவெளி இல்லாமலும், முன்னோக்கித் தள்ளுவதில் இலாய்டு ஜோர்ஜை விட்டுவைக்காத திரு. சேர்ச்சில், இரப்பரின் விலை ஏறியதால் அமெரிக்காவிற்கு வரவேண்டிய கடன்தொகைகளை திரும்பப்பெற முடிவு செய்தார். ஒரே ஆண்டில் அதாவது 1925இல், ஒரு 'நேர்மையான' விலை மதிப்பிற்கும் மேலாக, இரப்பருக்காக மொத்தம் 600 முதல் 700 மில்லியன் டாலருக்கும் அதிகமாக அமெரிக்கா ஆங்கிலேயர்களுக்கு அளித்ததாக, அமெரிக்க வர்த்தகத்தின் இயக்குனரான ஹூவர், ஒரு கணக்கு இயந்திரத்தின் உதவியுடன் கணக்கிட்டு இருக்கிறார். அவர் அதைத் தான் கூறினார். நேர்மையான விலைக்கும், நேர்மையற்ற விலைகளுக்கும் இடையில் எவ்வாறு வேறுபடுத்துவது என்பது ஹூவருக்கு மிக நன்றாகவே தெரியும்: அவருடைய வேலையே அது தான். இது குறித்து அமெரிக்க இதழ்கள் புரிந்து கொண்ட உடனேயே, அவை ஒரு விசித்திரமான பிம்பத்தை எழுப்பி, கதறின. The Evening Post இதழின் ஒரேயொரு மேற்கோளை இங்கே நான் எடுத்துக்காட்டுகிறேன்:

“சக்திவாய்ந்த நாடுகளின் ஒரு கூட்டம், சர்வதேசரீதியில் அமெரிக்காவை ஒதுக்கி வைக்கின்றன என்றால், இத்தகைய அனைத்து லொகார்னோக்கள் மற்றும் ஜெனிவாக்களால், இத்தகைய உடன்படிக்கைகள் மற்றும் நெறிமுறைகளால், இத்தகைய நிராயுதபாணியாக்கும் மாநாடுகளினாலும் பொருளாதார மாநாடுகளினாலும், என்ன நன்மை இருக்கிறது?”

இவ்வாறு ஒதுக்கப்பட்டிருக்கும், எல்லாவிதத்திலும் சுரண்டப்பட்டிருக்கும் இந்த ஏழை அமெரிக்காவை நீங்கள் கட்டாயம் உங்களுக்குள்ளேயே கற்பனை செய்து பார்க்க வேண்டும். இரப்பர், கோப்பி, தகரம், நைட்ரேட்கள், கயிறுகளுக்கான சீஷல், பொட்டாஷ் - எல்லாமே பறிக்கப்பட்டு, ஒரு கௌரவமான அமெரிக்க கோடீஸ்வரர் அவருடய வாகனத்தை ஓட்ட முடியாமல், தேவைக்கு காப்பி குடிக்க முடியாமல், அல்லது தூக்கில் தொங்குவதற்கு ஒரு முழம் கயிறு கூட கிடைக்காமல், அல்லது அவருடைய மூளையைச் சிதறடிக்க ஒரு வெள்ளீய தோட்டாவைக் கூட பெற முடியாமல், அனைத்தும் ஏகபோகமாக்கப்பட்டிருக்கின்றன. இது உண்மையிலேயே சகிக்கமுடியாத பரிதாபமான நிலைமை தான்: அந்தோ! எல்லா திசைகளிலும் சுரண்டப்படுகிறார்களே! ஒரு 'தரமான' சவப்பெட்டியில் ஒரு மனிதனைப் படுக்க வைக்க இதுவே போதும் தான்! இது தொடர்பாக திரு. ஹூவர் சிறப்பாக ஒரு கட்டுரை எழுதினார் - என்னவொரு அற்புதமான கட்டுரை! அது பிரத்யேகமாக பிரச்சினைகளைக் கொண்டிருக்கிறது - எண்ணிக்கையில் கூறுவதானால் 29 - ஒவ்வொன்றும் இதற்கு முன்னர் அதுபோல் ஒன்று இல்லாத அளவிற்கு சிறப்பாக உள்ளன. இந்த அனைத்து பிரச்சினைகளின் கூர்முனைகளும் இங்கிலாந்தைக் குறிவைத்திருக்கின்றன என்பதை நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள். ஒரு நேர்மையான விலைக்கும் மேலாக மக்களை மூழ்கடிப்பது ஒரு நல்ல விஷயமா? இது ஒரு நல்ல விஷயமில்லை என்றால், இது ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையிலான உறவுகளில் எரிச்சலைக் கொண்டு வருவதோடு தொடர்புபட்டதில்லையா? அவ்வாறு எரிச்சலைக் கொண்டு வருவதோடு இணைந்த விஷயம் என்றால், இதில் அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டுமல்லவா? ஒரு சுய-கௌரவமுள்ள அரசாங்கம் தலையீடு செய்கிறதென்றால், நாசகரமான விளைவுகளைத் தடுக்க வேண்டுமல்லவா? ஓர் ஆங்கில இதழ், இதர பிற இதழ்களை இழிவாகவும், பெரும் சூழ்ச்சியுடனும் இந்த மதிப்பீட்டைக் குறித்து எழுதும் போது, ஒரு நூறு அறிவாளிகளால் பதிலளிக்க முடியாத பல கேள்விகளை ஒரு முட்டாளால் கேட்க முடியும் என்று எழுதியது. இதன் மூலம் அந்த தேசாபிமான செய்தியிதழ், அதன் சுமையைக் கீழிறக்கி வைத்தது. முதலாவதாக, ஒரு முட்டாள் அந்தளவிற்கு பொறுப்பான ஒரு பதவியைப் பெறுவாரா என்று கேட்க நான் தயாராக இல்லை. அது தான் நிலைமை என்றாலும் கூட… தோழர்களே, இது என் கருத்தல்ல, மாறாக இதை வெறுமனே ஒரு தர்க்க அனுமானத்திற்காக எடுத்துக் கொள்வோம். இது இவ்வாறு இருந்தது என்றாலும் கூட, அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரமாண்டமான இயந்திரங்களின் தலையில் ஹூவர் ஒன்றுமேயில்லை என்று தான் நான் கூறுகிறேன். மேலும் இதன் விளைவாக, ஒட்டுமொத்த பூர்ஷூவா 'எந்திரமும்' அவருக்காக அவருடைய சிந்தனையைச் சிந்திக்கின்ற நிலையில், உளவுப்பிரிவின் தேவையே இல்லை. மேலும் ஹூவரின் 29 கேள்விகளும், எல்லா நிகழ்வுகளிலும், திரு. பால்ட்வினின் காதுகளுக்குத் துப்பாக்கி வெடி சத்தத்தைப் போன்று வந்தன. அதற்குப்பின்னால் உடனடியாக இரப்பர் விலை குறைந்தது. இந்த உண்மையானது, உலக நிலைமைகளைப் புள்ளிவிபரங்கள் எடுத்துக்காட்டுவதை விட சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றன. தோழர்களே! அமெரிக்க அமைதிவாதம் நடைமுறையில் இப்படித் தான் இருக்கிறது.

ஐரோப்பிய முதலாளித்துவம் தப்பிப்பதற்கு வழியே இல்லை

தனது பாதையில் எவ்வித தடையும் இல்லாமல் ஓடிகொண்டிருக்கும், ஒட்டுமொத்த உலகத்தைச் சுரண்டுவதில் தனக்கென நீடித்த உரிமையைப் பெறுவதற்கு ஒரு வஞ்சகமான தாக்குதல் நடத்த முடியாமல், ஒவ்வொரு மூலப்பொருட்களின் விலையிலும் உயர்வைக் கண்டுவருவது இந்த அமெரிக்கா தான் - பெரிதும் புறக்கணிக்கப்பட்டும், அதை உறுப்பினராக சேர்த்துக்கொள்ளாமலும், பிரிந்துகிடக்கும் ஐரோப்பா அதனை அதன் எதிர்பலத்தில் காண்பதும் இந்த புதிய அமெரிக்காவைத் தான் - அதாவது, யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட வறுமையிலும், இன்னும் அதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட அதன் சந்தைகளின் கட்டமைப்புடன், கடன்சுமைகளால் நிறைக்கப்பட்டு, அராஜகவாதங்களால் சீரழிக்கப்பட்டு, முழுவீச்சிலான இராணுவவாதத்தால் நசுக்கப்பட்டு, யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட ஏழையாக இருக்கும் ஓர் ஐரோப்பா.

மறுகட்டுமான காலகட்டத்தின் போதும் கூட, ஐரோப்பாவின் மறுஉருவாக்கத்திற்கான சாத்தியக்கூறு குறித்த விஷயத்தில் சமூக ஜனநாயக பொருளாதாரவாதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பூர்ஷூவாக்களின் மத்தியில் போலி ஏமாற்றுத்தனங்கள் இல்லாமல் இல்லை. முதலில் பிரான்சிலும் பின்னர் ஜேர்மனியிலும், யுத்தத்திற்குப் பின்னர் ஐரோப்பிய தொழில்துறை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெரும் வேகமெடுத்தது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; முதலாவதாக பொதுவான தேவை முழு அளவில் இல்லை என்றாலும் கூட, முந்தைய அனைத்து கையிருப்புகளும் தீர்ந்து போனதால் மீண்டும் பொதுவான தேவை உருவாகி இருந்தது. அங்கே ஒன்றுமே இல்லை. அதற்கும் மேலாக, ஒரு துணை சந்தையாக அமைந்திருந்த பெரிதும் சூறையாடப்பட்ட பகுதிகள் பிரான்சில் இருந்தன. இத்தகைய யுத்த-வடுக்கள் மற்றும் சூறையாடப்பட்ட சந்தைகளின் மிக அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத வரையில், பெரும் நம்பிக்கைகள் மற்றும் பெரும் போலித்தனங்களை அதிகரிக்கும் வகையில் தொழில்துறையால் ஓர் ஆரோக்கியமான வேகத்தில் செயல்பட முடிந்தது. தற்போது, இந்த விஷயத்தின் சாரத்தைப் பொறுத்த வரையில், இந்த போலித்தனங்களைக் குறித்த இருப்புநிலை குறிப்பானது (balance sheet), மிகவும் எச்சரிக்கையான பூர்ஷூவா பொருளாதார நிபுணர்களாலும் கூட தருவிக்கப்படுகின்றன. ஐரோப்பிய முதலாளித்துவம் தப்பிப்பதற்கு வழியே இல்லை.

அமெரிக்க பூர்ஷூவாவின் பக்கத்தின் நனவுபூர்வமான கொள்கையை ஒருவர் கருத்தில் எடுக்காதுவிட்டாலும், முன்னுதாரணமற்ற அமெரிக்க பொருளாதார மேலாதிக்கம் ஐரோப்பிய முதலாளித்துவத்தின் எழுச்சியை ஒருபோதும் அனுமதிக்காது. ஐரோப்பாவை மேலும் மேலும் ஒரு முட்டுச்சந்திற்குத் தான் விரட்டிச் செல்லும். அவ்வாறே அமெரிக்க முதலாளித்துவம், அதனை தானாகவே ஒரு புரட்சிகரப் பாதைக்குள் விரட்டும். இது தான் உலக நிலைமைக்கு மிக முக்கிய திறவுகோலாக இருக்கிறது.

இது இங்கிலாந்து நிலைமையில் மிகவும் விளக்கத்தோடும், சந்தேகத்திற்கிடமில்லாமலும் வெளிப்படுகிறது. இங்கிலாந்தின் கடல்கடந்த-பன்னாட்டு ஏற்றுமதிகள் அமெரிக்காவினாலும், கனடாவினாலும், ஜப்பானினாலும், மற்றும் அதன் சொந்த காலனி நாடுகளில் ஏற்பட்ட தொழில்துறை அபிவிருத்தியினாலும் வெட்டப்படுகின்றன. ஒரு பிரிட்டிஷ் காலனி நாடான இந்தியாவின் ஜவுளித்துறை சந்தையைக் குறிப்பிட்டுக் காட்டுவதே போதுமானது. ஜப்பான் இங்கிலாந்தை ஓரங்கட்டுகிறது. மேலும் ஐரோப்பிய சந்தையில், ஆங்கிலேயர்களின் ஒவ்வொரு சரக்குகளின் விற்பனை உயரும் போதும், அது ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றின் விற்பனையை வெட்டுகிறது. இதேதான் தலைகீழாகவும் நடக்கிறது. பெரும்பாலும் இது தலைகீழாகத் தான் நடக்கிறது. ஜேர்மன் மற்றும் பிரான்சின் ஏற்றுமதிகள் பிரிட்டனின் அதே சரக்குகளைப் பாதிக்கிறது. ஐரோப்பிய சந்தை விரிவாகவில்லை. அதன் குறுகிய வரம்புகளுக்குள், தற்போது ஒருபக்கத்திலிருந்து, மற்றொரு பக்கத்திற்கு மாற்றம் நடக்கிறது. ஐரோப்பாவிற்குச் சாதகமாக விரைவில் சூழ்நிலை மாறும் என்று நம்புவது, அற்புதங்கள் ஏதேனும் நடக்க வேண்டும் என்று நம்புவது போலத்தான். ஜனநாயக சந்தை நிலைமைகளின்கீழ், சிறிய அல்லது பின்தங்கிய நிறுவனத்தை விட பெரிய மற்றும் மிக முன்னேறிய நிறுவனத்தின் வெற்றி உறுதியாக இருக்கிறது, ஆகவே, உலக சந்தையின் நிலைமைகளில், ஐரோப்பாவை விட குறிப்பாக முதலாவதும், முன்னோடியுமான இங்கிலாந்தைவிட அமெரிக்காவின் வெற்றி என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

1925இல் இங்கிலாந்தின் இறக்குமதிகளும், ஏற்றுமதிகளும் யுத்தத்திற்கு முந்தைய அதன் அளவுகளை விட முறையே 111 சதவீதம் மற்றும் 76 சதவீதத்தை எட்டியது. இது முன்னொருபோதும் நிகழ்ந்திராத விகிதங்களின் ஒரு மோசமான வர்த்தக சமநிலையைக் உட்கொண்டிருக்கிறது. ஏற்றுமதிகள் குறைவதென்பது, இரண்டாம்பட்சமாக வந்து மோதும் ஒரு தொழில்துறை நெருக்கடியை, ஆனால் தொழில்துறையின் அடிப்படை துறைகளில், அதாவது நிலக்கரி, எஃகு, கப்பல் கட்டுமானம், கம்பளி, இதரபிறவற்றில் ஏற்படக்கூடிய நெருக்கடியைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. தற்காலிகமான மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களும் கூட சாத்தியம் தான், அது தவிர்க்க முடியாததும் கூட, ஆனால் வீழ்ச்சியின் அடிப்படைப்போக்கு முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

புதிய நிலைமைகளோடு மிகவும் பொருந்தாமல் அவர்களின் அனைத்து பழைய அனுசரணைகளைத் தக்க வைத்திருப்பவர்களும், உலக நிலைமைகளின் மற்றும் அதற்குள்ளே தங்கியிருக்கும் தவிர்க்கமுடியாத விளைவுகள் குறித்து மிக அடிப்படையான புரிதல் கூட இல்லாதவர்களும் இங்கிலாந்தின் 'மக்கள் தொடர்பாளர்கள்' நியாயப்படுத்தும் புறக்கணிப்புகளில் தங்களை நிரப்பிக் கொள்கிறார்கள். பதவியிலிருக்கும் ஆங்கில அரசியல்வாதிகளான பால்ட்வினும், சேர்ச்சிலும் அவர்களின் நியாயங்களோடு, சமீபத்தில் நமக்கு மீண்டும் உதவி இருக்கிறார்கள். ஒரு நேர்மறையான மனோநிலையில் இருப்பதற்கு 12 காரணங்கள் இருப்பதாக கடந்த ஆண்டின் இறுதியில் சேர்ச்சில் அறிவித்தார் (ஆம், அதை அவர் குறிப்பிட்டார்). முதலாவதாக, ஒரு ஸ்திரமான தேசிய செலாவணி. ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகளின் விலைகளில் குறைந்தபட்சம் 10 சதவீத குறைப்பு மற்றும் அதன் விளைவாக மோசமான வர்த்தக சமநிலைமை என்பதையே இந்த ஸ்திரப்பாடு குறிக்கிறது என்ற உண்மையை ஆங்கில பொருளாதார நிபுணர் கெய்னெஸ், சேர்ச்சிலின் கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தார். நேர்மறையான சிந்தனையில் இருப்பதற்கான இரண்டாவது காரணம், சிறந்த இரப்பர் விலையாக இருந்தது. கூறுவதற்கே வருத்தமாக இருக்கிறது, திரு. ஹூவரின் 29 கேள்விகள், சேர்ச்சிலின் இரப்பர் குறித்த அனுகூலவாதம் கணிசமாக குறைத்திருந்தது. மூன்றாவது, போராட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. ஆனால் சுரங்கத்தொழிலாளர்களின் ஒப்பந்த தொகுப்பு ஏப்ரல் இறுதியில் கவனத்திற்கு வரும் வரையில் இந்த மதிப்பீட்டிற்காக காத்திருப்போம். அனுகூலவாதத்திற்கான நான்காவது காரணம் --- லொகர்னோ. ஒரு மணி நேரத்திலிருந்து அடுத்த ஒருமணி நேரத்திற்கு, அங்கே எந்த முன்னேற்றமும் இல்லை. லொகர்னோவிலிருந்தே, ஆங்கிலேய-பிரெஞ்சு மோதல் குறைவதற்கு பதிலாக தீவிரமடைந்துள்ளது. ஆகவே லொகர்னோவை எட்டும் வரையில், அதற்காகவும் நாம் காத்திருப்போம்; அவர்கள் அவரவர்களின் குஞ்சுகளை அடைகாத்து வரும் போதே, ஒருவர் மற்றொருவருடையதைப் பார்க்கிறார். அனுகூலவாதத்திற்கான மீத காரணங்களைக் கணக்கில் எடுக்காமல் விட்டுவைப்போம்; வோல்ஸ்ட்ரீட்டில் அவர்கள் வெளிக்கொணர முயலும் விலை, தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதே விஷயத்தைக் குறித்து இலண்டனின் The Times இதழ், நம்பிக்கையின் இரண்டு கதிர்கள் (Two Rays of Hope) என்ற தலைப்பில் ஒரு தலையங்கத்தை பதிப்பித்திருப்பதைக் குறிப்பிடுவது சுவாரசியமாக இருக்கும். The Times இதழ், சேர்ச்சிலை விட மிகவும் அடக்கஒடுக்கமாக இருந்தது (modest); அதனிடம் பன்னிரெண்டு இல்லை, இரண்டே இரண்டு நம்பிக்கை கதிர்கள் மட்டுமே இருக்கிறது, இவையும் ஊடுகதிர்களாக (x-rays) இருக்கின்றன, அதாவது, பிரச்சினைக்குரிய கதிர்களாக இல்லை.

தங்களின் சொந்த நிலைப்பாட்டில் இருந்தும், பிரிட்டிஷ் தொழில்துறையினரின் கருத்துக்களில் இருந்தும் கூட ஒரு மதிப்பீட்டைச் செய்யும் அமெரிக்கர்களின் மிக தீவிரமான கருத்துக்களை, சேர்ச்சிலின் தொழில்திறன் படைத்த மேம்போக்கான மனப்போக்கிற்கு எதிரிடையாக ஒருவரால் நிறுத்த முடியும். ஐரோப்பாவில் இருந்து திரும்பிய பின்னர் அமெரிக்க வர்த்தகத்துறை இயக்குனர் கிளெய்ன், தொழிலதிபர்களுக்கு ஓர் அறிக்கையை வெளியிட்டார். முற்றிலும் மரபார்ந்த அமைதிப்படுத்தும் தொனிக்கு மத்தியிலும் உண்மை உடைத்துக் கொண்டு வருகின்றது.

அவர் கூறினார், “பொருளாதார கண்ணோட்டத்திலிருந்து, ஒரேயொரு இருண்ட பிரதேசம், [பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் நிலைமைகளிலிருந்தும், அத்துடன் அதைச் சார்ந்து ஜேர்மனியின் படிப்படியான மீட்டமைப்பிலிருந்தும் வெளிப்படையாக வெளியில் கொண்டு வரப்பட்டது] --- என்னைப் பொறுத்தவரையில், ஒரேயொரு இருண்ட பிரதேசம் ஐக்கிய இங்கிலாந்து பேரரசு தான். இங்கிலாந்து ஒரு சந்தேகத்திற்கிடமான வர்த்தக நிலைப்பாட்டில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது. இங்கிலாந்து நம்முடைய சிறந்த வாடிக்கையாளர் என்பதால் நான் அதை மிகவும் எதிர்மறையாக பார்க்க விரும்பவில்லை. ஆனால் அந்நாட்டில் பல காரணிகள் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. அவற்றால், இன்னும் அதிகமாக உன்னிப்போடு கவனிப்பதை வேண்டியதிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. இங்கிலாந்தில் கொடுமையான வரிகள் நிலவுகின்றன, இதற்கு காரணம், சில குறிப்பிட்ட மக்களைப் பொறுத்த வரையில், நம்முடைய பணத்தாகத்தைக் காணலாம், இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இருந்தாலும் கூட இது முழுவதும் சரி என்பதல்ல … நிலக்கரி தொழில்துறை கருவிகளின் கையிருப்பு, முன்னர் இருந்த சில டஜன் கணக்கான ஆண்டுகளைப் போலவே, ஒரு டன்னுக்கான மனித உழைப்பின் விலை அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் நிலையில், இருக்கிறது.”

இதுவரையிலும் அவ்வாறு தான் இருந்தது; இனியும் கூட அவ்விதத்திலே தான் இருக்கும்.

இப்போது, இங்கே மற்றொரு கருத்து வைக்கப்படுகிறது. ஐரோப்பாவில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதராக இருந்தவரும், ஆங்கிலேயர்களின் 'நண்பராகவும், நலம்-விரும்பியாகவும்' கருதப்பட்ட ஜெ. ஹார்வே, இங்கிலாந்திற்கு உதவ முன்வரவேண்டியதன் தேவைக்குறித்து உணர்வுபூர்வமாக ஒரு விதியாக பேசுவதன் அடிப்படையில், இது உண்மையாகவும் இருக்கிறது. இதுவே சமீபத்தில் வெளியான, ''இங்கிலாந்தின் முடிவு'' ('The End of England” - தலைப்பு மட்டும் தான் விலைமதிப்பில்லாததாக இருக்கிறது!) என்று தலைப்பிட்ட அவருடைய ஒரு கட்டுரையில், “ஆங்கிலேயர்களின் உற்பத்தி அவற்றின் காலத்தைக் கடந்துவிட்டிருந்தன. இனிமேல் பெரும்பாலான ஆங்கிலேயர்கள் ஓர் இடைத்தரகராகத் தான் இருக்க முடியும்” என்ற முடிவுக்கு அவர் வருகிறார். அதை சுருக்கமாக கூற வேண்டுமானால் அவர்கள் அமெரிக்காவின், விற்பனை குமாஸ்தாக்களாகவும், வங்கி கணக்காளர்களாகவும் தான் இருக்க வேண்டும்: இது தான் ஒரு நண்பரின், நலம்-விரும்பியின் தீர்மானமாக இருக்கிறது.

அரசாங்கத்திற்கு எழுதிய ஒரு குறிப்பின் மூலம், மொத்த பிரிட்டிஷ் பத்திரிக்கையிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்திய கப்பல்கட்டும் தொழிலில் ஒரு பிரபல ஆங்கிலேயரான ஜோர்ஜ் ஹண்டர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்:

அவர் கூறுகிறார், “இங்கிலாந்து தொழில்துறையின் பேரழிவு நிலைமையைக் குறித்த ஒரு தெளிவான கருத்தை அரசாங்கம் [அடிப்படையில், அனுகூலவாதத்திற்கான 12 காரணங்களுடன் சேர்ச்சில் தான் அரசாங்கமாக இருக்கிறார்] கொண்டிருக்கிறதா? இந்த நிலைமை, முன்னேற்றமடைவதில் இருந்து விலகி, தொடர்ந்து மோசமடைந்து வருவதை அது அறியுமா? நம்மிடையே வேலையில்லாதோர் மற்றும் பகுதியாக வேலையற்றோர்களின் எண்ணிக்கை குறைந்தபட்சம் வேலையில் இருக்கும் தொழிலாளர்களில் 12.5 சதவீதத்தைக் குறிக்கிறது. நம்முடைய வர்த்தக கணக்கு திருப்திகரமாக இல்லை. நம்முடைய இரயில்பாதைகளும், நம்முடைய தொழில்துறை நிறுவனங்களின் பெரும்பகுதி அவற்றின் கையிருப்புகளில் இருந்து பங்குவருமானங்களை செலுத்துகின்றன அல்லது ஒன்றுமே செலுத்துவதில்லை. அதுவே தொடர்ந்தால், அது திவால்நிலையாக, அழிவாக இருக்கும். எதிர்கால வாய்ப்புவளங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை.”

நிலக்கரி தொழில்துறை தான் ஆங்கிலேய முதலாளித்துவத்தின் முக்கியபடிக்கல்லாக இருந்தது. தற்போது அது முழுவதுமாக அரசு மானியத்தைச் சார்ந்துள்ளது. “நாம் விரும்பும் அளவிற்கு நம்மால் நிலக்கரி தொழில்துறைக்கு மானியம் வழங்க முடியும்; அது நம்முடைய தொழில்துறையின் அதிகாரத்தைக் குறைப்பதை பொதுவாக தடுக்காது' என்று ஹண்ட்டர் தெரிவிக்கிறார். ஆனால் மானியங்கள் நிறுத்தப்பட்டால், ஆங்கிலேய தொழிலதிபர்கள் தற்போது அளித்து வரும் கூலிகளைத் தொடர முடியாது; அது அடுத்த மே தினத்தின் தொடக்கத்துடன், ஒரு பிரமாண்டமான பொருளாதார மோதலைத் தூண்டிவிடும். ஏறக்குறைய ஒரு மில்லியன் இரயில்வே தொழிலாளர்கள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களால் காட்டப்படும் அனைத்து அறிகுறிகளின்படி, அவர்களின் ஆதரவுடன், ஒரு மில்லியனுக்கும் குறைவில்லாத சுரங்கத் தொழிலாளர்கள் அரவணைக்கும் ஒரு வேலைநிறுத்தப் போராட்டத்தால் என்ன எடுத்துக்காட்டப்படும் என்பதை கற்பனை செய்து பார்ப்பது ஒன்றும் சிரமமில்லை. இங்கிலாந்து ஒரு மிகப்பெரிய பொருளாதார அதிர்ச்சிகளின் ஒரு காலக்கட்டத்திற்குள் நுழையும். ஒன்று ஒருவர் நாசகரமான மற்றும் நம்பிக்கையற்ற மானியங்கள் அளிப்பதைத் தொடர வேண்டும் அல்லது ஓர் ஆழ்ந்த சமூக மோதலுக்கு விட்டுவிட்டு அவர் தன்னைத்தானே பதவியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்.

அனுகூலவாதத்திற்கு சேர்ச்சிலிடம் பன்னிரெண்டு காரணங்கள் இருக்கின்றன, ஆனால் வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, சுரங்கத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, ஆனால் உல்லாச உணவகங்களின் தொழிலாளர்கள், கபரே நடனக்காரர்கள் மற்றும் உதிரி பாட்டாளி வர்க்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதைத் தான் இங்கிலாந்தின் சமூக புள்ளிவிபரங்கள் ஆதாரப்படுத்துகின்றன. உற்பத்தியாளர்களின் செலவில் முகஸ்துதி செய்பவர்களின் எண்ணிக்கை உயர்கிறது, ஆனால் அதேநேரத்தில், இந்த புள்ளிவிபரங்களில் அமெரிக்கர்களின் தாழ்மையான சேவையுடன் மன்றாடும் அரசியல் முகஸ்துதியானும் மற்றும் மந்திரிகளும் சேரவில்லை.

மீண்டும் ஒருமுறை அமெரிக்காவையும், இங்கிலாந்தையும் எதிர்நிறுத்திப் பார்ப்போம். அமெரிக்காவில் தொழிற்சங்க அதிகாரத்துவம் (aristocracy of labor) அதிகரித்து கொண்டிருக்கிறது. இது நிறுவன தொழிற்சங்கங்களின் ஸ்தாபகத்திற்கு உதவுகிறது; இதுவே நேற்றைய மேலாதிக்கத்திலிருந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் இங்கிலாந்தில், உதிரிப் பாட்டாளி வர்க்க அடுக்குகள் வளர்கின்றன. இந்த அடுத்தடுத்து மற்றும் எதிர்நிலைபாட்டில் எல்லாவற்றையும்விட சிறந்ததை வெளிப்படுத்துவதென்பது உலக பொருளாதார அச்சின் இடபெயர்ச்சியாக உள்ளது. மேலும் இந்த இடப்பெயர்வு, சமூகத்தின் வர்க்க அச்சே இடப்பெயர்வாகும் வரையில், அதாவது பாட்டாளி வர்க்கப் புரட்சி வரையில் தொடர்ந்து செயல்படும்.

திரு. பால்டுவின் இதற்கு விதிவிலக்காக இருக்கிறார் என்பது உண்மை தான். சேர்ச்சிலை விட திரு. பால்டுவின் அதிக பலத்தைக் கொண்டிருக்கிறார் என்றாலும், அவர் மிகக் குறைந்த அளவில் தான் புரிந்து கொண்டிருக்கிறார். தொழிலதிபர்களின் ஒரு கூட்டத்தில், இக்கட்டான நிலைமையிலிருந்து வெளியே வருவதற்கான கருவிகளை - ஒரு பழமைவாத பிரதம மந்திரி எப்போதுமே அனைத்து வியாதிகளுக்கான காப்புரிமை பரிகாரங்களைக் கொண்டிருக்கிறார் - அவர் விளக்கினார். “நம்மில் சிலர் குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு ஆண்டுகளுக்கு தூங்கி விட்டிருக்கிறோம் என்று சிலநேரங்களில் எனக்குத் தோன்றுகிறது.” இது வெகு நீண்டகாலம்! மற்றவர்கள் ஒருவகை நிலைப்பாட்டில் நின்றிருந்த நிலையில், திரு. பால்டுவினே கூட குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் தூங்கிவிட்டிருக்கிறார். அந்த பிரதம மந்திரி தொடர்ந்தார், “இந்த காலக்கட்டத்தின் போது அமெரிக்காவால் உணரப்பட்ட முன்னேற்றத்தால் வழிநடத்தப்பட்டால், நம்மால் சிறப்பாக செய்ய முடியும்.” உண்மையில் அமெரிக்காவின் 'முன்னேற்றத்தால்' வழிநடப்படுவதற்கு சிறிது முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அந்த நாட்டில் 320 பில்லியன் தேசிய செல்வவளத்தை, வங்கிகளில் 60 பில்லியனை, ஆண்டுதோறும் 7 பில்லியன் திரட்சியை அவர்கள் வெளியில் கொணர்கிறார்கள். ஆனால் இங்கிலாந்தில் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் கொஞ்சம் வழிநடத்தப்பட்டு தான் பார்ப்போமே! முயன்று பார்ப்போமே!

பால்டுவின் தொடர்கிறார், “மாஸ்வின் நிலைமையை ஆராய்வதிலிருந்து படிப்பதை விட, அந்த இரண்டு பிரிவினரும் [முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள்] அமெரிக்காவின் பள்ளியில் நிறைய படிக்க முடியும்.”

மாஸ்கோவை துவேசிப்பதை திரு. பால்டுவின் விலக்கிக் கொள்ள வேண்டும். அவருக்கு நாம் சில விஷயங்களைக் கற்றுத் தர முடியும். உண்மைகளினூடாக நம்மைநாமே எவ்வாறு நிலைநோக்கில் நிறுத்துவது, உலக பொருளாதாரத்தைப் பகுத்தாராய்வது, ஒரு விஷயத்தையோ அல்லது இரண்டையோ, குறிப்பாக முதலாளித்துவ இங்கிலாந்தின் வீழ்ச்சியை முன்கூட்டியே கணிப்பது போன்றவற்றை நாம் அறிவோம். ஆனால் திரு. பால்டுவினால் இதை செய்ய முடியாது.

நிதிமந்திரி சேர்ச்சிலும் மாஸ்கோவைக் குறிப்பிட்டார். அது இல்லாமல், இப்போதெல்லாம் ஒரு சிறந்த உரையை அளிக்க முடிவதில்லை. பாருங்கள், அன்று காலை பிரபுக்கள் சபை ஓர் உறுப்பினரான திரு. தோம்ஸ்கியின் ஓர் எழுச்சிகரமான உரையைப் படித்திருந்தார். சோவியத் ஒன்றியத்தில் மிகவும் முக்கியமான பதவியில் இருக்கும் ஒரு மனிதராக அவர் இருக்கிறார் என்று திரு. சேர்ச்சில் உண்மையிலேயே உறுதியளிக்கிறார். திரு. தோம்ஸ்கி அவருடைய இளமை காலத்தை திரு. சேர்ச்சிலுடன் ஆக்ஸ்போர்டிலோ அல்லது கேம்ப்ரிட்ஜிலோ கழிக்கவில்லை. மாறாக இங்கே மாஸ்கோவில் உள்ள, பௌடிர்கி சிறைச்சாலையில் கழித்தார். இருந்தபோதினும், திரு. சேர்ச்சில் திரு. தோம்ஸ்கியைக் குறித்து பேச வேண்டியதிருக்கிறது. மேலும், அவர் ஸ்கார்பொரோவில் (Scarborough) நடந்த தொழிற்சங்கங்கள் மாநாட்டில் திரு. தோம்ஸ்கியின் உரையைக் குறித்து மிகவும் மரியாதையோடு பேசவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். உண்மையில் திரு. தோம்ஸ்கி அங்கே ஓர் உரை நிகழ்த்தினார்; திரு. சேர்ச்சில் மீது ஏற்படுத்திய தோற்றத்திலிருந்து பார்த்தால், வெளிப்படையாக அது ஒன்றும் மோசமானதல்ல. பிந்தையவர் அந்த உரையிலிருந்து பிரித்தெடுத்தவைகளை மேற்கோளிட்டு காட்டினார், அவற்றை அவர் 'காட்டுமிராண்டியின் உளறல்கள்' என்று பாத்திரப்படுத்தினார்.

அவர், 'வெளியிலிருந்து சாமாதானப்படுத்தும் தலையீடுகள் எதுவுமில்லாமல், இந்நாட்டில் நம்முடைய சொந்த விவகாரங்களை நம்மால் சமாளிக்க முடியும் என்று நான் கருதுகிறேன்,” என்றார். திரு. சேர்ச்சில் மிகவும் பெருமிதமான மனிதர், ஆனால் அவர் கூறுவது தவறு. அவருடைய ஆதரவாளர் பால்டுவின், அமெரிக்க பள்ளியிலில் படிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

“காலை உணவிற்கு எங்களுக்கு புதிய முதலை முட்டைகள் தான் வேண்டுமென்பதில்லை,” திரு. சேர்ச்சில் இவ்வாறு தொடர்கிறார். தோம்ஸ்க்கி, இவர் தான் இங்கிலாந்தில் முதலை முட்டைகளைப் போட்டவர் என்று தெரிகிறது. திரு. சேர்ச்சில் இதை விரும்பவில்லை; அவர் நிலத்திற்குள் தலையைப் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழியின் அரசியலை விரும்புகிறார். மேலும் நெருப்புக்கோழியும் சரி, முதலையும் சரி இரண்டுமே இங்கிலாந்தின் ஒரேமாதிரியான சொந்த பிராந்திய காலனிகளில் அவற்றை அவையே பிரச்சாரம் செய்து கொள்கின்றன. இதனால் திரு. சேர்ச்சிலுக்கு உண்மையிலேயே திமிர்பிடித்து விடுகிறது: “இந்த நாட்டில் போல்ஷ்விக் புரட்சியைக் கண்டு நான் அஞ்சவில்லை. நான் அந்த தலைவர்களை விமர்சிக்கவில்லை.” ஆனால் இனியும், இதுவரையிலும், தோம்ஸ்கிக்கு எதிராக கடுமையான உரைகளை அளிப்பதிலிருந்து அது அவரை தடுத்துவிடவில்லை. ஆகவே அவர் ஒருவகையில் பயந்திருக்கிறார். அவர் தோம்ஸ்கியின் குணாதியசத்தை விமர்சிக்கவில்லை. அவரை அவர் வெறுமனே முதலை என்று கூறுவதிலிருந்து கடவுள் தான் தடுத்து நிறுத்த வேண்டும்.

“பிரிட்டன் ரஷ்யா இல்லை.' உண்மை தான். “கார்ல் மார்க்சின் மந்தமான மேதமையை ஆங்கில தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலும், சர்வதேசிய கீதத்தை அவர்கள் பாடும்படி செய்வதிலும் என்ன பயன் இருக்கிறது?” ஆங்கில தொழிலாளர்கள் சில நேரங்களில் மெக்டொனால் ஆல் அளிக்கப்பட்ட இசையோடு அரைகுறையாக பாடுவதும் உண்மை தான். ஆனால் அவர்கள் மாஸ்கோவின் எவ்வித தவறும் இல்லாத குறிப்புகளுடன் அதை பாட பயில்வார்கள். நம்மைப் பொறுத்தவரையில், அனுகூலவாதத்தின் அனைத்து 12 காரணங்களுக்கு இருந்தாலும் கூட, இங்கிலாந்தின் பொருளாதார சூழ்நிலையானது, ஆங்கிலேய தொழிலாள வர்க்கம் அவர்களில் உரத்த குரலில் சர்வதேசிய கீதத்தை பாடும் அந்த நேரத்தை நெருக்கமாக கொண்டு வருகிறது. ஆகவே உங்களுடைய செவிப்பறைகளை தயாராக வைத்திருங்கள், திரு. சேர்ச்சில்!

ஜேர்மனியையும், பிரான்ஸையும் பொறுத்த வரையில், என்னை நானே சுருக்கமான குறிப்புகளுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

நம்முடைய உற்பத்தி ஆணைகளை (Orders) நிறைவேற்றித் தரும் ஜேர்மனிய தொழிற்சாலைகளுக்கு சென்று வந்திருந்த நம்முடைய பொறியாளர்களில் ஒருவரிடம் இருந்து நேற்றைக்கு முன்தினம் நான் ஒரு கடிதத்தைப் பெற்றேன். அதில் அவர் பின்வரும் வரிகளில் சூழ்நிலையை பாத்திரப்படுத்தி இருந்தார்: “ஒரு பொறியாளராக நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். இங்கே தொழிற்துறை சந்தையில்லாமல் சரிவடைந்து வருகிறது, மேலும் இந்த சந்தைக்கு அமெரிக்க கடன்களும் அளிக்கப்படாது.” ஜேர்மனியில் வேலைவாய்ப்பின்றி இருப்போரின் எண்ணிக்கை இரண்டு மில்லியனையும் தாண்டிவிட்டிருக்கிறது. உற்பத்தியை பொருத்தமாக பகிர்மானம் செய்ததன் மூலமாக, மொத்த வேலைவாய்பற்றோரில் சுமார் நான்கில் மூன்று பங்கு தொழிலாளர்கள் தொழிற்திறன் படைத்த தொழிலாளர்களாக இருக்கின்றனர். ஜேர்மனி பணவீக்க நெருக்கடியில் சென்று கொண்டிருக்கிறது; தற்போது ஓர் உயர்வு ஏற்படலாம் ஆனால் அதற்கு மாறாக அங்கே ஒரு பயங்கர பொறிவு ஏற்படும் - இரண்டு மில்லியனுக்கும் மேலானவர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கிறார்கள். மேலும் ஜேர்மனிக்கு டேவ்ஸ் ஆட்சியின் மிக கடினமான விளைவுகள் இனிமேல் தான் வரவிருக்கின்றன.

பிரான்ஸில், யுத்தத்திற்குப் பின்னர் தொழிற்துறை கணிசமான அளவிற்கு ஒரு முன்னோக்கிய படியை எடுத்தது. இது பல மக்களை ஏமாற்றியதுடன், “மறுஸ்தாபகத்தின்' பிரமையையும் உருவாக்கியது. உண்மையில், பிரான்ஸ் அதன் தகுதிக்கு அப்பால் வாழ்ந்து கொண்டிருக்கிறது; தற்காலிக உள்நாட்டு சந்தையின் (பேரழிவுக்கு உள்ளான பிராந்தியங்கள்) அடிப்படையில், அத்துடன் ஒட்டுமொத்த நாட்டையும் (பிராங்கின் வீழ்ச்சியை) விலையாக அளித்து அதன் தொழிற்துறை வளர்ச்சி கண்டது. இப்போது அதைத் திருப்பி அளிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. அமெரிக்கா கூறுகிறது: “ஆயுதங்களைக் குறை, ஆட்களைக் குறை, உங்கள் இடுப்புபட்டையை இறுக்கு, ஒரு ஸ்திரமான செலாவணிக்குத் திரும்பு” என்கிறது. ஒரு ஸ்திரமான செலாவணி என்பது உற்பத்தி மற்றும் ஏற்றுமதி குறைப்பு என்பதாகும்; அதாவது வேலைவாய்ப்பின்மை, வெளிநாட்டு பாட்டாளி வர்க்கத்தை வெளியேற்றுதல், பிரெஞ்சு தொழிலாளர்களின் கூலிகளைக் குறைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பணவீக்க காலகட்டம் குட்டி முதலாளித்துவத்தை நாசமாக்கியது; பணச்சுருக்க (deflation) காலகட்டம் பாட்டாளிகளை நடவடிக்கைகளுக்குள் தூண்டிவிடும். பிரெஞ்சு அரசாங்கம் நிதியியல் பிரச்சினையை தீர்க்க முயல்வதற்கும்கூட அஞ்சுகிறது. ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு மாறிமாறி வந்து கொண்டிருக்கும் நிதியமைச்சர்கள், ஏமாற்றுவதற்காக தொடர்ந்து வங்கிநோட்டுகளை அச்சடித்து கொண்டிருக்கிறார்கள். இது நாட்டு பொருளாதார வாழ்வை நெறிப்படுத்துவதில் அவர்களின் முழு நிர்வாக திறமையையும் எடுத்துக்காட்டுகிறது. ஹங்கேரியில், அட்மிரல் ஹோர்தே, இந்த கலையில் எந்த சிக்கலும் இல்லை என்று நம்பிக்கொண்டு, முடியாட்சியை மீட்டமைப்பதற்காக அல்லாமல், குடியரசை தக்க வைப்பதில் கூட பார்வையைச் செலுத்தாமல், பிரெஞ்சு நோட்டுகளை நகலாக்க தொடங்கிவிட்டார். இந்த முடியாட்சியவாத போட்டியை சகித்துக் கொள்ள மறுத்த பிரான்ஸ் குடியரசு, ஹங்கேரியில் கைது நடவடிக்கைகளைச் செய்ய தொடங்கியது. ஆனால் இதை தவிர, அது பிரெஞ்சு செலாவணியை மீட்டெடுக்க ஒன்றுமே செய்யவில்லை. பிரான்ஸ் ஒரு பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலைமைகளில், அதாவது, பிரிந்துசெல்லும் ஐரோப்பாவின் பின்புலத்திற்கு எதிராக, தேசங்களின் கழகம் (League of Nations) இந்த ஆண்டு இரண்டு மாநாடுகளைக் கூட்ட விரும்புகிறது. ஒன்று ஆயுதக்குறைப்புக்காக; மற்றொன்று ஐரோப்பாவின் பொருளாதார மறு உருவாக்கத்திற்காக. ஆயினும், நம்முடைய இடத்திற்காக நாம் அவசரப்பட வேண்டாம். இந்த மாநாடுகளுக்கான தயாரிப்புகள் மிக மிக மெதுவாக நடந்து வருகின்றன என்பதுடன், ஒவ்வொரு படியிலும் நலன்களுக்கு இடையிலான முரண்பாடுகளையும் சந்தித்து வருகிறது.

ஆயுதக்குறைப்பு மாநாட்டிற்கான தயாரிப்புகள் நெருங்கி வருகின்ற நிலையில், “உளவுத்துறை” என்ற சொல் அலங்காரத்துடன் சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட, பாதியளவிற்கு உத்தியோகபூர்வமான ஓர் ஆங்கில மதிப்பாய்வு கட்டுரை ஒன்று, பிரத்தியேகமான நலன்களை தாங்கியுள்ளது. இது உளவுத்துறை அமைச்சகத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை ஒவ்வொன்றும் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் திரைக்கு மறைவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் சேர்த்து பொதுவாக மிக நன்றாக வெளிப்படுகிறது. ஆயுதக்குறைப்பு மாநாட்டிற்கான தயாரிப்பு என்ற போர்வையில் பிரிட்டிஷ் உளவுத்துறை, பசிபிக் முறைமைகள் அல்லாத முறைமைகளுடன், நம்மை அச்சுறுத்துகிறது.” இது நேரடியான யுத்த அச்சுறுத்தலைக் காட்டுகிறது. யார் அச்சுறுத்துகிறார்கள்? தனது வெளிநாட்டு சந்தைகளை இழந்துவரும் இங்கிலாந்து; வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவரும் இங்கிலாந்து; எந்தவிடத்தில் உதிரி பாட்டாளிவர்க்கம் அதிகரித்து வருகிறதோ அந்த இங்கிலாந்தில்; ஒரேயொரு அனுகூலவாத இடதை, வின்ஸ்டன் சேர்ச்சிலைக் கொண்டிருக்கும் அந்த இங்கிலாந்து தற்போதைய சூழ்நிலையில் யுத்தத்தைக் கொண்டு நம்மை மிரட்டுகிறது. ஏன்? என்ன காரணத்திற்காக? அமெரிக்காவால் அதன் அவமதிப்புகள் தொடர்புபட்டிருப்பதால் வேறு எவரிடமிருந்தும் எடுக்க வேண்டும் என்பதற்காகவா? நம்மைப் பொறுத்தவரையில், நாம் யுத்தத்தை விரும்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆளும் வர்க்கங்கள் பிரசவவலியைக் கிளறிவிட விரும்பினால், வரலாறு அவற்றை அதிகாரத்திலிருந்து கீழிறக்குவதற்கு முன்னால் அவர்களுக்காக அவற்றை கீழிறக்க விரும்பினால், அது துல்லியமாக இப்போது செய்ய வேண்டும், அவற்றை யுத்தத்தின் கூர்மையான பக்கம் தள்ளுகிறது. அங்கே கணக்கிடமுடியாத துயரங்கள் இருக்கும். ஆனால் அந்த முட்டாள் குற்றம்மிக்க மனிதர்கள் ஐரோப்பாவிடம் ஒரு புதிய யுத்தத்தை இழந்துவிடத் தான் வேண்டுமா, அதில் வெற்றி பெறுபவர்கள் பால்டுவினாகவோ அல்லது சேர்ச்சிலாகவோ அல்லது அவர்களின் அமெரிக்க தலைவர்களாகவோ இருக்க மாட்டார்கள், மாறாக ஐரோப்பாவின் புரட்சிகர பாட்டாளிகளாக இருப்பார்கள்.

முதலாளித்துவம் தனது வாழ்க்கை காலத்தை முடித்துவிட்டதா?

முடிவாக, என் அறிக்கையின் உள்ளார்ந்த சாரத்திலிருந்த பொங்கி வருவதாக, எனக்குத் தோன்றும், ஒரு கேள்வியை முன்னிறுத்துகிறேன். அந்த கேள்வி இதுதான்: முதலாளித்துவம் வாழ்க்கை காலத்தை முடித்துவிட்டதா? அல்லது வேறுவிதமாக கூறுவதானால்: உலகளவில் உற்பத்தி சக்திகளை அபிவிருத்தி செய்யவும், மனிதயினத்தை முன்னோக்கி எடுத்துச்செல்லவும் முதலாளித்துவத்திற்கு இன்னும் தகுதி இருக்கிறதா? இது ஓர் அடிப்படையான கேள்வி. இது ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்திற்கும், கீழைநாடுகளில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், ஒட்டுமொத்த உலகிற்கும், மற்றும் முதலாவதும் முக்கியமானதுமாக, சோவியத் ஒன்றிய மக்களுக்கும் அதி முக்கியமானதாகும். ஒரு முற்போக்கான வரலாற்று நோக்கத்தை நிறைவேற்றும், மக்களின் செல்வவளத்தை அதிகரிக்கும், அவர்களின் உழைப்பு சக்தியை இன்னும் ஆக்கப்பூர்வமாக ஆக்கும் தகுதி முதலாளித்துவத்திற்கு இன்னும் இருக்கிறது என்று காட்டப்பட்டால், நாங்கள், அதாவது சோவியத் ஒன்றியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி, அதன் முடிவினைப்பற்றி (De profundis) காலத்திற்கு முன்னரே பாடிவிட்டது என்பதையே அது குறிக்கும்; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சோசலிசத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் நாங்கள் மிக முன்னதாகவே அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டோம் என்பதையே அது குறிக்கும். ஏனென்றால், மார்க்ஸ் குறிப்பிட்டதைப் போல, எந்த சமூக அமைப்பும் உள்ளார்ந்திருக்கும் அதன் எல்லா சாத்தியத்திறன்களையும் வெளிப்படுத்தாமல் அகலாது. தற்போது நம்முன்னால் புதிய பொருளாதார சூழ்நிலை கட்டவிழ்ந்து வருவதை எதிர்கொண்ட நிலையில், ஒட்டுமொத்த முதலாளித்துவ மனிதயினத்தின்மீதும் அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் பொருளாதார சக்திகளின் பிணைப்பில் இருக்கும் தீவிர மாற்றங்களுடன், நாம் இந்த ஒரு புதிய கேள்வியை முன்னால் நிறுத்த வேண்டும். அதாவது: முதலாளித்துவம் வாழ்க்கை காலத்தை முடித்துவிட்டதா? அல்லது முற்போக்கு பணியின் ஒரு முன்னோக்கை அது இன்னும் அதன் முன்னால் கொண்டிருக்கிறதா?

ஐரோப்பாவை பொறுத்தவரையில், நான் காட்ட முயன்றிருப்பதைப் போல இந்த கேள்வி நிச்சயமாக எதிர்மறையாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. யுத்தத்திற்கு முன்னர் இருந்ததைவிட ஐரோப்பாவின் நிலைமை யுத்தத்திற்குப் பின்னர், இன்னும் மோசமடைந்தது. ஆனால் அந்த யுத்தம் தன்னிச்சையாக நடந்த ஒரு விபத்தல்ல. அது, தேசிய அரசுகள் உட்பட, முதலாளித்துவ வடிவங்களுக்கு எதிராக உற்பத்தி சக்திகளின் குருட்டுத்தனமான கிளர்ச்சியாக இருந்தது. முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட உற்பத்தி சக்திகளை, தேசிய அரசின் கட்டமைப்பு உட்பட, முதலாளித்துவ சமூக வடிவங்களின் கட்டமைப்பிற்குள் இனியும் கட்டுப்படுத்தி வைக்க முடியாது. இதன்விளைவு தான் யுத்தம். எது ஐரோப்பாவை யுத்தத்திற்கு இழுத்து வந்தது? நிலைமை முன்னர் இருந்ததைவிட பத்து மடங்கு மோசமாக உள்ளது: அதே முதலாளித்துவ சமூக வடிவங்கள் தாம், ஆனால் மிகவும் பிற்போக்குத்தனமாக; அதே வரிச்சுவர்கள் தாம், ஆனால் இன்னும் கடினமாக; அதே எல்லைக்கோடுகள் தாம், ஆனால் இன்னும் குறுகலாக; அதே இராணுவங்கள் தாம், ஆனால் எண்ணிக்கையில் அதிகமாக; அதிகரிக்கப்பட்ட கடன்சுமை; இன்னும் அதிகமாக கட்டுப்படுத்தப்பட்ட சந்தை. ஐரோப்பாவில் பொதுவான நிலைமை இப்படித்தான் உள்ளது. இன்று இங்கிலாந்து சிறிது மேலெழும்பினாலும், அதற்கு ஜேர்மனி விலைகொடுக்க வேண்டியதிருக்கும்; அதுவே நாளைக்கு இங்கிலாந்தை அதிகளவில் விலையாக கொடுத்தால், ஜேர்மனியின் பக்கம் திரும்பும். ஒரு நாட்டின் வர்த்தக சமநிலையில் நீங்கள் உபரியைக் கண்டால், நீங்கள் மற்றொரு நாட்டில் வர்த்தக சமநிலையில் அதேயளவிற்கு பற்றாக்குறையைப் பார்த்தே ஆக வேண்டும். உலக அபிவிருத்தியானது --- முக்கியமான அமெரிக்க அபிவிருத்தியானது, ஐரோப்பாவை இந்த முட்டுச்சந்திற்கு ஓட்டி வந்துள்ளது. அமெரிக்கா இன்று முதலாளித்துவ உலகின் ஆதார சக்தியாக உள்ளது. மேலும் அந்த சக்தியின் குணாம்சம் தானாகவே முதலாளித்துவ ஆட்சியின் கட்டமைப்பிற்குள் ஐரோப்பாவின் பிரித்தெடுக்கமுடியா நிலையை முன்நிபந்தனை ஆக்குகிறது. ஐரோப்பிய முதலாளித்துவம் முற்றிலுமாக ஒருவிதத்தில் பிற்போக்குத்தனமாக மாறியுள்ளது. அதாவது, நாடுகளை முன்னோக்கி இட்டுச்செல்ல அதனால் முடியவில்லை என்பதில் மட்டுமல்லாமல், முன்னர் பெறப்பட்ட அவற்றின் வாழ்க்கை தரங்களை தக்கவைக்கவும் கூட அவற்றால் முடியவில்லை. முக்கியமாக இது தற்போதைய புரட்சிகர சகாப்தத்தின் பொருளாதார அடித்தளத்தை உருவாக்குகிறது. இந்த அடித்தளத்தில் அரசியல் ஏற்றயிறக்கங்கள், எந்தவிதத்திலும் அதை மாற்றாமல் கட்டவிழ்கின்றன.

ஆனால் அமெரிக்காவின் நிலை என்ன? இதுவரை அமெரிக்காவை பொறுத்தவரையில், பிம்பம் முற்றிலும் வேறுவிதமாக தெரிகிறது. அடுத்து ஆசியா? ஆசியாவையும் இந்த கணக்கிலிருந்து விட்டுவிட முடியாது. ஆசியாவும், ஆபிரிக்காவும் பூமியின் மேற்பரப்பில் 55 சதவீதமும், உலக மக்கள்தொகையில் 60 சதவீதமும் கொண்டுள்ளன. நிச்சயமாக அவற்றிற்கு ஒரு பிரத்தியேக, விரிவான ஆய்வு தேவை; ஆனால் அது இந்த தற்போதைய அறிக்கையின் எல்லைக்கு வெளியில் உள்ளது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான போராட்டமென்பது எல்லாவற்றிற்கும் மேலாக ஆசியாவின் ஒரு போராட்டம் என்பது இதுவரை சொல்லப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் தெளிவாக உள்ளது. அப்படியானால் விஷயங்கள் எவ்வாறு நிற்கின்றன? அமெரிக்காவில் ஒரு முற்போக்கான திட்டத்தைப் பூர்த்தி செய்வதில் முதலாளித்துவத்திற்கு இன்னும் தகுதி உள்ளதா? அது ஆசியா மற்றும் ஆபிரிக்காவிற்கும் இத்தகையதொரு திட்டத்தைக் கொண்டுள்ளதா? ஆசியாவில், முதலாளித்துவ அபிவிருத்தி அதன் முக்கிய முதல்படிகளை மட்டும் தான் எடுத்துள்ளது; அதேவேளையில் ஆபிரிக்காவில் இந்த புதிய உறவுகள் விளிம்புகளில் இருந்து மட்டும்தான், அந்த கண்டத்தின் பாகத்தில் ஊடுருவுகின்றன. அப்படியானால் இங்கே என்ன முன்னோக்குகள் உள்ளன? பின்வருபவைகள் தான் முடிவுகளாக தெரிகின்றன: முதலாளித்துவம் ஐரோப்பாவில் வாழவில்லை என்றாகியுள்ளது; அமெரிக்காவில் அது உற்பத்தி சக்திகளை இன்னும் முன்னோக்கி நகர்த்தி வருகிறது; அதேநேரத்தில், ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் நூற்றாண்டுகள் இல்லையென்றாலும், பல தசாப்தங்களுக்காகவாவது கன்னித்தன்மை கலையாமல் ஒரு பெரும் செயல்களத்தை அது அதன் முன்னால் கொண்டிருக்கிறது. உண்மையில் அதுதான் நிலைமையா? இதுவரை அது எங்கேயிருந்ததோ, தோழர்களே, முதலாளித்துவத்தின் வேலைத்திட்டம் உலகளவில் இன்னும் சோர்ந்து போய்விடவில்லை என்பதையே இது குறிக்கிறது. ஆனால் நாம் உலக பொருளாதார நிலைமைகளின்கீழ் வாழ்கிறோம். ஆகவே இதுதான் எல்லா கண்டங்களிலும் - முதலாளித்துவத்தின் தலைவிதியை தீர்மானிக்கிறது. முதலாளித்துவம் ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் என்ன நடக்கிறதோ அதிலிருந்து விடுபட்டு சுயாதீனமாக, ஆசியாவில் ஒரு தனிப்பட்ட அபிவிருத்தியைக் கொண்டிருக்க முடியாது. பிராந்திய அளவிலான பொருளாதார செயல்முறைகளின் காலகட்டம் எல்லாம் மலையேறிவிட்டது. அமெரிக்க முதலாளித்துவம் ஐரோப்பிய முதலாளித்துவத்தை காட்டிலும் மிகவும் வலுவாகவும், ஸ்திரமாகவும் உள்ளது; அது இன்னும் அதிகமான உத்திரவாதத்தோடு எதிர்காலத்தைக் காண முடியும். ஆனால் அமெரிக்க முதலாளித்துவம் நீண்டகாலத்திற்கு தன்னிறைவு (self-sufficing) காண முடியாது. அது உள்நாட்டிற்குள்ளேயே சமநிலையில் நிறுத்திக்கொள்ள முடியாது. அதற்கு ஓர் உலக சமநிலைமை தேவை. ஐரோப்பா மேலும் மேலும் அமெரிக்காவைச் சார்ந்து வருகிறது என்பதையே இது குறிக்கிறது. ஆண்டுதோறும் அமெரிக்காவில் ஏழு பில்லியன் குவிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு என்ன செய்வது? வெறுமனே அவற்றை, ஒரு முடங்கிய மூலதனமாக (dead capital), கல்லாப்பெட்டியில் போட்டுவிட்டால், அது அந்நாட்டில் இலாப அளவுகளைக் கீழே இழுத்து வந்துவிடும். எல்லா மூலதனமும் வட்டியைக் கோருகின்றன. இருக்கும் நிதியை எதில் செலுத்துவது? நாட்டிற்குள்ளேயேவா? ஆனால் அங்கே அதற்கு தேவையில்லையே, அவை மிதமிஞ்சியுள்ளன, உள்நாட்டு சந்தை பெரிதும் மந்தப்பட்டுள்ளது. அதற்கு வடிகாலாக ஒரு வெளிநாடு கண்டறியப்பட வேண்டும். ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு கடனளிக்க, வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்ய தொடங்குகிறது. ஆனால் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்பவரும் வட்டியை என்ன செய்வது? அதை வெளிநாட்டிற்குச் செலுத்தியாக வேண்டும். அது தங்கமாகவோ அல்லது இதர ஐரோப்பிய பொருட்களாகவோ இறக்குமதி செய்தாகப்பட வேண்டும். ஆனால் இந்த பொருட்கள் அமெரிக்க தொழில்துறைக்கு குழிபறிக்கத் தொடங்கும். ஏற்கனவே அதன் பெரும் உற்பத்திக்கு வெளிநாட்டு வடிகால்கள் தேவைப்படுகின்றன. முரண்பாடு என்னவென்றால்: ஒன்று, ஏற்கனவே உபரியாய் இருக்கும் தங்கத்தை அவர்கள் இறக்குமதி செய்தாக வேண்டும் அல்லது ஒட்டுமொத்த தேசிய தொழில்துறையையும் சேதமாக்கும் வகையில் பொருட்களை இறக்குமதி செய்தாக வேண்டும். தங்கத்தின் 'பணவீக்கமும்' (தயவுசெய்து இவ்வாறு அழைக்க என்னை அனுமதியுங்கள்) அதன் வகையில் செலாவணி பணவீக்கத்தைப் போன்றே அதேயளவிற்கு ஆபத்தானதாகும். ஒருவர் இரத்தசோகையினால் (anemia) மட்டுமல்ல இரத்தபுஷ்டியினாலும் (plethora) கூட சாகலாம். பெருமளவிற்கு ஓரிடத்தில் தங்கம் இருக்கிறதென்றால், அதிலிருந்து புதிய வருவாய்கள் எதையும் பெற முடியாது. மூலதனத்தின் வட்டி குறைந்துவிடும். அவ்வகையில் மேற்படி உற்பத்தி விரிவாக்கம் சாத்தியப்படாது என்பதோடு, அது நியாயமாகவும் கூட இருக்காது. கருவூலங்களுக்குள் ஒருநாட்டின் தங்கத்தை வைப்பதற்காக உற்பத்தி செய்வது மற்றும் ஏற்றுமதி செய்வதென்பது ஒருநாட்டின் சரக்குகளைக் கடலுக்குள் வீசியெறிவதற்குச் சமமாகும். இதன் விளைவாக, காலப்போக்கில், அமெரிக்காவின் விரிவாக்குவதற்கான தேவை இன்னும் பெரியளவில் வளர்கிறது இதனால் இலத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்காவில் அதன் உபரி வளங்களை அது முதலீடு செய்தே ஆக வேண்டும். இது எந்தளவிற்கு அதிகமாக நடக்கிறதோ, அந்தளவிற்கு ஐரோப்பாவும், ஏனைய பகுதிகளின் பொருளாதாரமும் அமெரிக்காவுடன் பின்னிப்பிணைந்திருக்கும்.

இராணுவக் கலையில் ஒரு வாசகம் கூறப்படுவதுண்டு: அதாவது, வெட்டுவதற்காக யார் எதிரியின் பின்னால் செல்கிறோரோ அவரே பெரும்பாலும் வெட்டுப்படுவார் என்று. பொருளாதாரத்திலும் சிலநேரங்களில் இதேபோன்ற ஒப்புமை நேர்வதுண்டு: அமெரிக்கா எந்தளவிற்கு ஒட்டுமொத்த உலகமும் அதனைச் சார்ந்திருக்கும்படி செய்கிறதோ, அதேயளவிற்கு அது அதன் எல்லா முரண்பாடுகள் மற்றும் மேலெழும் எழுச்சிகளின் அச்சுறுத்தல்களுடன், ஒட்டுமொத்த உலகையும் சார்ந்திருக்கும். இன்று ஏற்கனவே, ஐரோப்பிய புரட்சி என்றால் வோல் ஸ்ட்ரீட் கொந்தளிக்கிறது; நாளையோ, ஐரோப்பிய பொருளாதாரத்தில் அமெரிக்க மூலதனத்தின் முதலீடுகள் அதிகரிக்கும் போது, அது மேலெழும் ஓர் ஆழமான எழுச்சியாகவே இருக்கும்.

ஆசியாவில் தேசிய-புரட்சிகர போராட்டம் என்னவாக உள்ளது? இங்கேயும் அதே பரஸ்பர ஒட்டுறவு தான் நிலவுகிறது. ஆசியாவில் முதலாளித்துவத்தின் அபிவிருத்தியென்பது, தேசிய-புரட்சிகர போராட்டத்தின் வளர்ச்சியில் உள்ளடங்கியுள்ளது. அது வெளிநாட்டு முதலீட்டுடன், ஏகாதிபத்தியத்தை எடுத்துவருவோருடன் முன்னில்லாத அளவிற்கு வெறுப்பான மோதலுக்கு வருகிறது. ஏகாதிபத்திய காலனித்துவவாதிகளின் உதவியுடனும், அவர்களின் அழுத்தத்தின்கீழ் நடந்துவரும் சீன முதலாளித்துவ அபிவிருத்தி எவ்வாறு புரட்சிகர போராட்டத்திற்கும், மேலெழுச்சிகளுக்கும் இட்டுச் செல்கிறது என்பதை நாம் கவனிக்கிறோம்.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் சக்தியையும், அதற்கேற்ப ஐரோப்பாவின் பலவீனத்தையும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய காலனித்துவ மக்களையும் குறித்து நான் பேசினேன். ஆனால் முக்கியமாக அமெரிக்காவின் இந்த சக்தியே அதன் மரண பலகீனமாக உள்ளது; இந்த சக்தியில் நாடுகள் மீதான அதன் அதிகரிக்கும் ஒட்டுறவு தங்கியுள்ளது என்பதுடன் அது பொருளாதாரரீதியிலும், அரசியல்ரீதியிலும் ஸ்திரமின்மையை ஏற்படுத்துகிறது. அமெரிக்கா, ஸ்திரமற்ற ஐரோப்பாவின் மீது, அதாவது நாளைய ஐரோப்பிய புரட்சிகளின் மீதும், ஆசியா மற்றும் ஆபிரிக்க தேசிய-புரட்சிகர போராட்டங்களின் மீதும் அதன் சக்தியை பிரயோகிக்க பலவந்தப்படுத்தப்படுகிறது. ஐரோப்பாவை ஒரு பிராந்தியமாக பார்ப்பது சாத்தியமேயில்லை. ஆனால் அமெரிக்காவும் கூட, நீண்டகாலத்திற்கு ஒட்டுமொத்தமாக தன்னிறைவு பெற்று இருக்க முடியாது. அதன் உள்-சமப்பாட்டை தக்க வைத்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு ஒரு பெரிய, மிகப்பெரிய அன்னிய வடிகால் தேவை; ஆனால் அதன் அன்னிய வடிகால் அதன் பொருளாதார அமைப்புமுறைக்குள் இன்னும் அதிகமாக ஐரோப்பிய மற்றும் ஆசிய பேரழிவைத் தான் தோற்றுவிக்கிறது. இந்த நிலைமைகளின்கீழ் ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் நடக்கும் ஒரு வெற்றிகரமான புரட்சி தவிர்க்கமுடியாமல் அமெரிக்காவிலும் ஒரு புரட்சிகர சகாப்தத்தை தொடங்கிவைக்கும். அமெரிக்காவில் ஒரேயொரு புரட்சி தொடங்கிவிட்டால், அது அமெரிக்காவின் ஓர் உண்மையான வேகத்தோடு அபிவிருத்தி அடையும் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதே இல்லை. அதுதான், ஒட்டுமொத்தமாக உலக நிலைமையின் ஒரு மதீப்பீட்டிலிருந்து தொடர்கிறது.

மேலே கூறப்பட்டவைகளிலிருந்து, புரட்சிகர அபிவிருத்தியின் வரிசையில் அமெரிக்கா இரண்டாவதாக நிற்கிறது என்பதும் தொடர்கிறது. வரிசையின் முதலில் ஐரோப்பாவும், கீழைநாடுகளும் உள்ளன. சோசலிசத்திற்கான ஐரோப்பாவின் மாற்றம் முக்கியமாக, அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான மற்றும் அதன் சக்திவாய்ந்த எதிர்ப்புகளுக்கு எதிரான ஒரு வாய்ப்புவளமாக கருதப்பட வேண்டும். நிச்சயமாக மிகப்பெரிய பணக்கார நாடான அமெரிக்காவின் உற்பத்திக் கருவிகளை சமூகமயமாக்கத் தொடங்குவதும், பின்னர் அதையே உலகின் மீத இடங்களுக்கு விரிவாக்குவது மிகவும் அனுகூலமானதாக இருக்கும். ஆனால் புரட்சிகள் ஏற்படக்கூடிய அமைப்புமுறையை சரிசெய்வதென்பது ஒருதலைபட்சமாக சாத்தியமில்லை என்பதை நம்முடைய சொந்த அனுபவங்களே நமக்கு காட்டியுள்ளது. பொருளாதாரரீதியில் பலவீனமாகவும், பின்தங்கிய நாடாகவும் உள்ள நாம் தான், பாட்டாளி வர்க்க புரட்சியைச் செய்ய முதலில் நிர்பந்திக்கப்பட்டு இருந்தோம். இந்தமுறை இது ஐரோப்பிய நாடுகளினுடையது. முதலாளித்துவ ஐரோப்பா மீண்டும் வளர்வதை அமெரிக்கா அனுமதிக்காது. அதில்தான் அமெரிக்க முதலாளித்துவ சக்தியின் புரட்சிகர அர்த்தம் உள்ளது. ஐரோப்பா எந்தமாதிரியான அரசியல் ஏற்றத்தாழ்வுகளில் புரண்டெழுந்தாலும், அதன் பொருளாதார முட்டுச்சந்து அடிப்படை காரணியைச் சுற்றித்தான் இருக்கும். ஆகவே இந்த காரணி, ஓர் ஆண்டு முன்னதாகவோ அல்லது அதன் பின்னரோ, பாட்டாளி வர்க்கத்தை புரட்சிகர பாதையினுள் தள்ளிவிடும்.

அமெரிக்கா இல்லாமலும், அமெரிக்காவிற்கு எதிராகவும் ஒரு சோசலிச பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும், அதிகாரத்தைத் தக்கவைக்கவும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தால் முடியுமா? இந்த கேள்வி காலனித்துவ கேள்விகளோடு மிகநெருக்கமாக பிணைந்துள்ளது. ஐரோப்பாவின் முதலாளித்துவ பொருளாதாரமும், குறிப்பாக இங்கிலாந்தும், தொழிற்துறைக்கு தேவையான இன்றியமையாத மூலப்பொருட்களையும், அத்துடன் உணவுப்பொருட்களின் வினியோகத்தையும் அளிக்கும், காலனித்துவ உடைமைகளோடு நெருக்கமாக தொடர்புபட்டுள்ளது. இடது அதன்வகையில், அதாவது, புற உலகத்திலிருந்து விடுவித்துக்கொள்ளும், ஒரு மிகக் குறைந்த காலகட்டத்திற்குள்ளாகவே பொருளாதார மற்றும் ஸ்தூல மரணங்களுக்கு இங்கிலாந்து மக்கள் நிந்திக்கப்படுவார்கள். ஐரோப்பாவின் அனைத்து தொழில்துறைகளும், பெருமளவிற்கு, அமெரிக்காவின் மற்றும் காலனித்துவ நாடுகளின் உறவுகளைச் சார்ந்துள்ளது. ஆனால் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம், முதலாளித்துவத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்துகொண்ட பின்னர், ஒடுக்கப்பட்ட காலனித்துவ மக்கள் அவர்களின் காலனித்துவ விலங்குகளிலிருந்து உடைத்துக்கொள்ள உதவுவதே அதன் முதல் வியாபாரமாக ஏற்படுத்தும். இந்த நிலைமைகளின்கீழ் ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, காப்பாற்றி வைக்க முடியுமா?

ஜாரிச ரஷ்ய மக்களாகிய நம்மால், உள்நாட்டு யுத்தம் மற்றும் முற்றுகை காலங்களில் அவ்வாறு காப்பாற்றி வைக்க முடிந்தது. வறுமை, பஞ்சம், கொள்ளைநோய்களையும் நாம் சகித்துகொண்டோம்-ஆனால் நாம் காப்பாற்றி வைத்திருந்தோம். நம்முடைய பின்தங்கியநிலைமையே தற்காலிகமாக நமக்கு ஆதாயமளித்தது. புரட்சி முக்கியமாக அதன் முதுகில், அதாவது பிரமாண்டமான விவசாயிகளின் முதுகில் நிறுத்தப்பட்டிருந்தது. கொள்ளைநோய்களால் ஏற்பட்ட பட்டினியிலும், அழிவுகளிலும் நிறுத்தப்பட்டிருந்தது. தொழில்மயமான ஐரோப்பா, குறிப்பாக இங்கிலாந்து-ஏதோவகையில் மீண்டும் இம்மாதிரியாக உள்ளது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அடித்தளத்திலும் கூட, அது துண்டுதுண்டாக இருக்கும்வரையில் பொருளாதாரரீதியில் நிறுத்திவைக்க அதன் பிரிவினை சாத்தியமா என்ற பேச்சும் கூட அங்கே இருக்கமுடியாது. பாட்டாளி வர்க்க புரட்சி ஐரோப்பாவின் ஐக்கியத்தை கோருகிறது. முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களுக்கும், யுத்த எதிர்ப்பாளர்களுக்கும், வியாபார தந்திரிகளுக்கும், பகல் கனவு காண்பவர்களுக்கும், முதலாளித்துவத்தின் வெறும் வாயாடிகளுக்கும், ஓர் ஐக்கிய ஐரோப்பிய அரசுகள் குறித்து பேச இன்றைய நாட்களில் இஷ்டமில்லாமல் இருக்கிறது. ஆனால் வேலையோ முரண்பாடுகளால் முற்றிலுமாக துருப்பிடித்துப் போயுள்ள ஐரோப்பிய முதலாளித்துவத்தின் பலத்திற்கும் அப்பாற்பட்டுள்ளது. வெற்றிபெற்ற ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்தால் மட்டும்தான் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முடியும். புரட்சி முதலில் எங்கே வெடிக்கும் என்பதோ, அதன் அபிவிருத்தி வேகம் எவ்வாறு இருக்கும் என்பதோ விஷயமல்ல, ஐரோப்பிய பொருளாதார ஐக்கியம்தான் அதன் சோசலிச மறுகட்டமைப்பிற்கான முதல் இன்றியமையாத நிலைமையாக உள்ளது. சோசலிச ஐக்கிய ஐரோப்பிய அரசுகளை ஸ்தாபிப்பதற்காக ஐரோப்பாவைப் பிரித்துள்ளவர்களை விரட்டுவதும், பிரிந்துகிடக்கும் ஐரோப்பாவை ஒருங்கிணைக்க அதன் அதிகாரத்தைப் பிடிப்பதும், அவசியமாகும் என்று 1923லேயே கம்யூனிச அகிலம் வலியுறுத்தியது.

புரட்சிகர ஐரோப்பா அதற்கு தேவையான மூலப்பொருட்களையும், உணவுப்பொருட்களையும் தானாகவே அதற்கான பாதையை ஏற்படுத்திக் கொள்ளும்; விவசாயிகளிடமிருந்து எவ்வாறு உதவி பெறுவது என்று அதற்கு தெரியும். பல சிக்கலான காலங்களில் புரட்சிகர ஐரோப்பாவிற்கு சில உதவி வழங்க நாமே நம்மளவிற்கு போதிய பலத்தைப் பெற்றிருக்கிறோம். இதுவும் இதற்கு மேலாகவும் கூட ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் ஓர் அருமையான பாலமாக நம்மால் இருக்க முடியும். இங்கிலாந்து பாட்டாளி வர்க்கம், இந்திய மக்களின் தோளோடுதோள் சேர்ந்து அந்நாட்டின் விடுதலைக்கு உத்தரவாதமளிப்பார்கள். ஆனால் இதனால் இந்தியாவுடன் ஒரு நெருக்கமான உறவின் சாத்தியக்கூறை இங்கிலாந்து இழந்துவிடும் என்று அர்த்தமல்ல. சுதந்திர இந்தியாவிற்கு ஐரோப்பிய தொழில்நுட்பமும், கலாச்சாரமும் தேவைப்படும்; ஐரோப்பாவிற்கு இந்தியாவின் பொருட்கள் தேவைப்படும். ஐரோப்பிய பாட்டாளி வர்க்கத்துடன் மிக நெருக்கமாக பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை ஸ்தாபிப்பதை நோக்கி ஆசிய மக்கள் ஈர்க்கப்படுவதற்கு சோவியத் ஒன்றியத்துடன் சேர்ந்து ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் சக்திவாய்ந்த காந்தங்களாக இருந்து உதவும். இங்கிலாந்து பாட்டாளி வர்க்கம் இந்தியாவை ஒரு காலனித்துவ நாடாக விட்டுவிடுமேயானால், பின் அது ஐரோப்பிய-ஆசிய கூட்டமைப்பு மக்களிடம் இருந்து அதன் கூட்டாளியைப் பெறும். ஐரோப்பா மற்றும் ஆசிய மக்களின் சக்திவாய்ந்த அணி அசைக்கமுடியாததாக இருக்கும் என்பதுடன், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க சக்தியால் பாதிப்படையாமலும் இருக்கும். இந்த சக்தியை நாம் கணநேரம் கூட குறைத்துவிட முடியாது. நம்முடைய புரட்சிகர முன்னோக்குகளில், அவர்கள் கொண்டிருப்பதைப் போலவே உண்மைகளின் ஒரு தெளிவான புரிதலுடன் நாம் முன்னேறுவோம். அதற்கும் மேலாக - இயங்கியலின்படி - அமெரிக்காவின் சக்தியே இப்போது ஐரோப்பிய புரட்சியின் சக்திவாய்ந்த நெம்புகோலாக இருப்பதை நாம் காண்கிறோம். அந்தசக்தி தகர்ந்து போகும்போது, ஐரோப்பிய புரட்சிக்கு எதிராகவே அந்த நெம்புகோல், அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் திரும்பும் என்ற உண்மையையும் நாம் கவனியாமல் இருக்கமுடியாது. அதன் சொந்த மேல்மடிப்பு பணயத்தில் இருக்கும்போது, அமெரிக்க முதலாளித்துவம் போராட்டத்திற்குள் மூர்க்கத்தனமான ஆற்றலைக் கட்டவிழ்த்துவிடும். தங்களின் செல்வாக்கிற்காக சலுகைபடைத்த வர்க்கங்கள் நடத்தும் போராட்டமானது, அமெரிக்க முதலாளித்துவம் புரட்சிகர ஐரோப்பாவின்மீது சுமத்த முயலும் வன்முறைக்கு முன்பே வெளிறிப்போகும் என்பதை எல்லா நூல்களும், மற்றும் நம்முடைய சொந்த அனுபவமும் நமக்கு கற்றுக்கொடுக்கும் சாத்தியக்கூறு பெரிதும் உள்ளது. ஆனால் ஆசிய மக்களின் புரட்சிகர கூட்டணியுடன் இருக்கும் ஐக்கிய ஐரோப்பா, அமெரிக்காவையும்விட எல்லையில்லா சக்தியுடன் இருப்பதை நிரூபிக்கும். சோவியத் ஒன்றியத்தின் மூலமாக, ஐரோப்பிய-ஆசிய உழைப்பாளர்கள் கலைக்கமுடியாதபடிக்கு இணைக்கப்பட்டிருப்பார்கள். போர்குணமிக்க கீழைநாட்டு கூட்டணியில், ஐரோப்பிய புரட்சிகர பாட்டாளி வர்க்கம் உலக பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை அமெரிக்க முதலாளித்துவத்திடமிருந்து பறித்து, ஒட்டுமொத்த உலகிலும் சோசலிச மக்கள் கூட்டமைப்பிற்கான அஸ்திவாரத்தை அமைக்கும்.

ஆசிரியரின் அடிக்குறிப்புக்கள்

1. சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

2. 1926 புள்ளிவிவரங்களின்படி

3. இது 1925க்கான மதிப்பீடாக இருக்க வேண்டும். 1930ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எண்ணிக்கை 122 மில்லியன் ஆகும்.

4. ரஷ்ய கட்சியின் வலது பிரிவான புக்காரினை பிற்பற்றும் லவ்ஸ்டோன் அப்பொழுது அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். வேண்டுமென்றே ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களை தவறாக அவர் கூறிவந்தது, ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சர்வதேச ஸ்ராலின்-புகாரின் தகர்ப்பு வேலையின் ஒரு பகுதியாகும். லவ்ஸ்டோன் இப்பொழுது போர் ஆதரவு கொண்ட ஜனநாயக நடவடிக்கைக்கான கூட்டமைப்பை (Union for Democratic Action) பின்பற்றுகிறார்.