முன்னோக்கு

காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், வாஷிங்டன் ஈரானுக்கு அணு ஆயுதப் போர் அச்சுறுத்தலை விடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஓஹியோ-வகுப்பு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் USS மேற்கு வர்ஜீனியா (SSBN 736) வழக்கமான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் தளமான கிங்ஸ் விரிகுடாவுக்குத் திரும்புகிறது. USS West Virginia என்பது மாநிலத்தின் பெயரைக் கொண்ட மூன்றாவது அமெரிக்க கடற்படைக் கப்பல் ஆகும்.

கடந்த வார இறுதியில், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கடந்த திங்களன்று பாக்தாத்துக்கு விஜயம் செய்தார். வாஷிங்டன் சட்டவிரோதமாக ஈராக்கை ஆக்கிரமித்து, அதன் அரசாங்கத்தை கவிழ்த்து, 2003 முதல் 2011 வரை ஆக்கிரமித்ததில் இருந்து, ஈராக்கில் செயல்பட்டு வரும் ஈரானிய சார்பு போராளிகளை அவர் ஈராக் தலைநகரில் இருந்து கண்டனம் செய்தார்.

காஸா போர் தொடங்கிய பின்னர் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது இந்த போராளிகள் தாக்குதலை நடத்தியதாக பிளிங்கன் குற்றம் சாட்டினார். “காஸாவில் உள்ள மோதலைப் பயன்படுத்தி இங்குள்ள அல்லது பிராந்தியத்தில் உள்ள எங்கள் பணியாளர்களை அச்சுறுத்தும் எவரும்: அதைச் செய்யாதீர்கள். …(டி) ஈரானுடன் இணைந்த போராளிகளின் அச்சுறுத்தல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை, மேலும் எங்கள் மக்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். நாங்கள் ஈரானுடன் மோதலை நாடவில்லை - நாங்கள் அதை மிகத் தெளிவாகக் கூறியுள்ளோம் – ஆனால், எங்கள் பணியாளர்களைப் பாதுகாக்க தேவையானதை நாங்கள் செய்வோம்” என்று அவர் கூறினார்.

பிளிங்கனின் வாதம் ஒரு அரசியல் பொய்யாகும்: ஈரான் அமெரிக்காவுடன் போரை நாடவில்லை. ஆனால், வாஷிங்டன் ஈரானுடன் போரை நாடுகிறது. பிளிங்கன் சந்தேகத்திற்கு இடமின்றி ஈரான் அல்லது ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் ஈரானிய சார்பு படைகளை அச்சுறுத்துகிறார்.

காஸா மீதான இஸ்ரேலின் சட்டவிரோத முற்றுகைக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் எழுச்சி ஒரு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. அப்போதிருந்து, 10,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் உள்ள அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசித் தாக்குகிறது. அதன் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை துண்டித்து, மேலும் அதன் பாதிக் கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கியுள்ளது.

நெருக்கடியை அமைதிப்படுத்த வாஷிங்டன் அவசரமாக கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை, ஆனால் போருக்கான பாதைக்கு வழி அமைத்துள்ளது. இஸ்ரேல் காஸா மீது ஆக்கிரமிப்பை நடத்தினால், பாலஸ்தீனியர்களை இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க இராணுவ ரீதியாக தலையிடும் என்று ஈரானிய ஆட்சி எச்சரித்துள்ள நிலையில், வாஷிங்டன் இஸ்ரேலின் இனப்படுகொலைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, இஸ்ரேலுக்கு “தன்னைத் தற்காத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது” என்று கூறி, உலகளாவிய போர்-எதிர்ப்பு போராட்டங்களை அவமதிப்புடன் நடத்தியது. இது மத்திய கிழக்கு நாடுகளுக்கு இரண்டு விமானம் தாங்கி கப்பல்கள், போர் அணிகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு பேட்டரிகள், ஈரான் போன்ற மற்ற பெரிய சக்திகளுக்கு எதிராக மட்டுமே பயன்படும் ஆயுதங்களை அனுப்பியது.

மத்திய கிழக்கை மேற்பார்வையிடும் மத்திய கட்டளையகத்துக்கு, அமெரிக்கா அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை அனுப்புவது பற்றிய அசாதாரண பொது அறிவிப்புடன், ஈரானுக்கான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இந்த வாரம் தெளிவாக வெளிப்பட்டன. இத்தகைய கப்பலில் 154 அணுசக்தி முனையுடைய Tomahawk க்ரூஸ் ஏவுகணைகள் அல்லது 20 அணுவாயுதங்களைக் கொண்ட கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும். இத்தகைய கப்பலின் மொத்த அழிவு சக்தி 23 அல்லது 28 மில்லியன் டன் டிஎன்டி-1945 இல் ஹிரோஷிமாவை அழித்த அணுகுண்டின் சக்தியை விட சுமார் 1,900 அல்லது 2,300 மடங்கு அதிகமாகும்.

அமெரிக்க செய்தி சேனலான CNN கருத்து தெரிவிக்கையில், இந்த அறிவிப்பு ஈரான் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அதன் பினாமிகளுக்கு எதிரான ஒரு தெளிவான செய்தியாகும்.

தெளிவாகப் பேசுவோம்: வாஷிங்டன் ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் அணு ஆயுதப் போருக்கு அச்சுறுத்துகிறது. காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போருக்கு வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளின் ஆதரவு, மனிதகுலத்திற்கு எதிரான இஸ்ரேலிய குற்றங்களில் அவர்களை மட்டும் உட்படுத்தவில்லை என்பதுடன், இது ஒரு எச்சரிக்கையாகவும் இருக்கிறது. ஏகாதிபத்திய சக்திகள் ஈரான் அல்லது பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த சக்திக்கும் எதிராக இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கத் தயங்காது.

இந்தப் போரை பூகோள மேலாதிக்கத்திற்கான உலகளாவிய மோதலின் ஒரு பகுதியாகக் கருதுகின்ற அமெரிக்க அதிகாரிகள், மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்துவதை நிறுத்த மாட்டார்கள்.

ஏகாதிபத்திய ஆளும் வட்டங்களைத் தாக்கும் குற்றவியல் போர் வெறிக்கு ஒரு எடுத்துக்காட்டு, “சீனா-ரஷ்யா-ஈரான் அச்சு அமெரிக்காவிற்கு ஒரு தெளிவான அச்சுறுத்தல்” என்ற தலைப்பில், செல்வாக்குமிக்க அட்லாண்டிக் கவுன்சிலின் ஏரியல் கோஹன் எழுதிய கட்டுரையாகும். ரஷ்யா மற்றும் சீனாவின் ஈரானுடனான உறவுகளை கண்டித்து, ரஷ்யாவையும் சீனாவையும் மிரட்டும் வகையில், ஈரானை அழிக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக காஸா மீதான இஸ்ரேலின் போரை கோஹன் பார்க்கிறார்: “தற்போதைய நெருக்கடி மொஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வாஷிங்டனுக்கு தனித்துவமான ஒரு வாய்ப்பை வழங்குகிறது: பின்வாங்கவும் . … அல்லது ஈரானை இழக்கவும்”.

ஈரானின் நடவடிக்கை, அதன் ஆயுதப் படைகள், அதன் முக்கிய தொழில்கள் மற்றும் அதன் அரசாங்கத்தை அழிக்க வழிவகுக்கும் என்று கோஹன் வலியுறுத்துகிறார். “ஈரான் வாஷிங்டனின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, இஸ்ரேலிய குடிமக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத தீங்கு விளைவித்தால், அது கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் அதன் அணுசக்தி திட்டம், இராணுவ நிலைகள் மற்றும் எண்ணெய் முனையங்கள் அழிக்கப்பட வேண்டும். கிளெப்டோகிரடிக் (மக்களிடமிருந்து திருடுவதன் மூலம், தலைவர்கள் தங்களை பணக்காரர்களாகவும் சக்திவாய்ந்தவர்களாகவும் ஆக்கும் ஜனநாயகம் அற்ற சமூகம்) ஷியா ஜிகாதி சர்வாதிகாரம் இதைத் தக்கவைக்க வாய்ப்பில்லை. இது, மொஸ்கோவுக்கும் பெய்ஜிங்குக்கும் புறக்கணிக்க முடியாத செய்தியாக இருக்கும்” என்று கோஹன் குறிப்பிடுகின்றார்.

இந்தக் கொள்கையானது, பைத்தியக்காரத்தனமானது மற்றும் குற்றகரமானது என்றாலும், வாஷிங்டனும் அதன் ஐரோப்பிய ஏகாதிபத்திய கூட்டாளிகளும் எடுத்துக்கொண்டிருக்கும் போக்கையும், அணு ஆயுதங்கள் மீதான அவர்களின் ஈர்ப்பையும் விவரிக்கிறது. இது, 1991 ஸ்ராலினிசம் சோவியத் ஒன்றியத்தினை கலைத்த காலத்திலிருந்து, பல தசாப்தங்களாக அபிவிருத்தியடைந்த அமெரிக்க மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் ஆழமான நெருக்கடியில் வேரூன்றி உள்ளது.

ஈரானை அச்சுறுத்துவதற்காக பாக்தாத்துக்குச் சென்றதன் மூலம், அமெரிக்க ஏகாதிபத்திய இராஜதந்திரத்தின் நன்கு அறியப்பட்ட பாதையை பிளிங்கன் எடுத்துள்ளார். 1979 ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானுக்கு எதிராகப் போரை நடத்துவதற்கு, ஈராக் ஜனாதிபதி சதாம் ஹுசைனை ஊக்குவிப்பதற்காக அமெரிக்க அதிகாரிகள் பலமுறை ஈராக்கிற்கு விஜயம் செய்தனர். 2003 ஈராக் படையெடுப்பின் போது, அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இருந்த டொனால்ட் ரம்ஸ்பீல்ட், 1980-88 ஈரான்-ஈராக் போரில் ஈரானுடன் கூட்டுச் சேர்ந்த குர்திஷ் துருப்புக்களுக்கு எதிராக விஷ வாயுவைப் பயன்படுத்த ஹூசைனை ஊக்குவிப்பதற்காக 1983-84 இல் ஈராக் சென்றார்.

இருப்பினும், இன்று அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் அந்தப் போர் அல்லது 1991ல் ஈராக்கில் அமெரிக்கா தலைமையிலான வளைகுடாப் போர் போன்றவற்றின் நிலைமைகளை விட மிகவும் மாறுபட்ட நிலைமைகளை எதிர்கொள்கின்றன. அதற்குப் பிறகு பல தசாப்தங்களில், சோவியத் யூனியனின் இருப்பு ஏற்படுத்திய இராணுவ மற்றும் அரசியல் தடையிலிருந்து விடுபட்டு, ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா, உக்ரேன் மற்றும் இந்த வளங்கள் நிறைந்த பிராந்தியத்தில் ஆட்சி மாற்றத்திற்கான போர்களை அவர்கள் தொடங்கினர். ஆனால், மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகள் மற்றும் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவழிக்கப்பட்ட போதிலும், இந்த மதிப்பிழந்த போர்கள் இறுதியில் வாஷிங்டனின் நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளன.

முதலாவதாக, வாஷிங்டன் இன்று ஒரு அவநம்பிக்கையான இராணுவ நெருக்கடியில் உள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் அதன் உக்ரேனிய நட்பு நாடுகள் தோல்வியை சந்தித்துள்ளன. 2011 இல் சிரியாவில் நேட்டோவால் தொடங்கப்பட்ட ஆட்சி மாற்றப் போருக்கு எதிராக மொஸ்கோவும் தெஹ்ரானும் தலையிட்டதால், மத்திய கிழக்கில் உள்ள ஈரான், ரஷ்யா அல்லது அவர்களது நட்பு நாடுகள் சிரியாவிலும், இப்பிராந்தியத்திலும் கட்டியெழுப்பிய நூற்றுக்கணக்கான தளங்களின் வலையமைப்பை அமெரிக்கப் படைகள் எதிர்கொள்கின்றன. மேலும், 2021 இல் ஈரானுடனான சீனாவின் 25 ஆண்டு 400 பில்லியன் டொலர் ஒப்பந்தம் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டமும், ஈரானுக்கு இராணுவக் கூட்டணியை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இராணுவ நெருக்கடியானது வாஷிங்டனில் அதிக இரக்கமற்ற தன்மையை மட்டுமே தூண்டுகிறது. 2003 இல் ஈராக்கை ஆக்கிரமித்த 200,000ம் துருப்புக்களில் இருந்து வெகு தொலைவில், மத்திய கிழக்கில் 40,000ம் துருப்புக்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. வாஷிங்டனால் இப்போதைக்கு, ஈராக்கை விட நான்கு மடங்கு பெரிய நாடான ஈரான் மீது படையெடுத்து ஆக்கிரமிக்க முடியாது அல்லது வழக்கமான போர்களில் ஈரான், ரஷ்ய மற்றும் சீனப் படைகளை எதிர்த்துப் போரிட முடியாது. இது, உலக வல்லரசுகளுக்கு இடையே ஒரு மோதலைத் தூண்டும் அபாயம் இருந்தாலும் கூட, வாஷிங்டனின் அரசியல்ரீதியாக குற்றவியல் அணு ஆயுதப் போர் அச்சுறுத்தல்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

தீர்க்கமான கேள்வி என்னவென்றால், காஸா மீதான போர் மற்றும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக வேகமாக வளர்ந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் உலகளாவிய இயக்கத்தை ஏகாதிபத்தியம் எதிர்கொள்கிறது என்பதாகும். இஸ்ரேலிய தாக்குதல் தொடங்கிய சில வாரங்களில், ஒவ்வொரு கண்டத்திலும் மில்லியன் கணக்கான மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பரந்த இயக்கத்தை, எந்த முன்னோக்கில் ஒன்றிணைத்து, இனப்படுகொலையை நிறுத்தவும், மூன்றாம் உலகப் போர் அணுவாயுத பிரளயமாக விரிவடைவதற்கு முன்பும், அரசியல் ரீதியாக ஆயுதபாணியாவதற்கு தயார்படுத்த முடியும் என்பதுதான் தீர்க்கமான கேள்வியாகும்.

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள், காஸா மீதான குண்டுவீச்சுக்கள் என்பன, உலகின் இலாபங்களையும் சந்தைகளையும் மீண்டும் பிரித்து சூறையாட ஏகாதிபத்திய சக்திகளால் நடத்தப்படும் ஒரு உலகளாவிய போரின் ஒரு பகுதி என்பதை வெளிப்படுத்துகிறது. எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கத்திடமும் அல்லது அதன் அரசியல்வாதிகளிடமும் முறையீடு செய்வதன் மூலம் இந்தப் போர்களை நிறுத்த முடியாது.

உலக முதலாளித்துவ அமைப்பிலேயே பிரச்சனை வேரூன்றியுள்ளது. காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த முடியும், அதே போல் உலகளவில் எரியும் அச்சுறுத்தலையும் நிறுத்த முடியும். ஆனால், இதற்கான அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்கும், முதலாளித்துவத்தை பூண்டோடு ஒழிப்பதற்கும், அதற்கு பதிலீடாக சோசலிசத்தை கொண்டு வருவதற்கும், ஒரு நனவான ஐக்கியப்பட்ட சர்வதேச இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது.

Loading