லெபனானில் ஹிஸ்புல்லாவுடன் முழு அளவிலான போருக்கு தயாராகும் இஸ்ரேலிய ஆட்சி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

இஸ்ரேலுக்கும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே கடந்த வாரம் கடுமையான அழுத்தங்கள் பெருகியிருப்பது மத்திய கிழக்கு முழுவதும் போர் விரிவடைவதற்கான சாத்தியக்கூற்றை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. ஒரு மூத்த ஹிஸ்புல்லா தளபதியை இஸ்ரேல் படுகொலை செய்தபின், வடக்கு இஸ்ரேல் மீது பதிலடி ராக்கெட் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) செவ்வாயன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு, லெபனானில் ஒரு போருக்கான செயற்பாட்டுத் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது.

ஜூன் 12, 2024 புதன்கிழமையன்று, லெபனானின் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் இஸ்ரேலிய தாக்குதலில் செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் கொல்லப்பட்ட ஹஜ் அபு தாலிப் என்று அழைக்கப்படும் 55 வயதான ஹிஸ்புல்லா தளபதி தலேப் சமி அப்துல்லாவின் இறுதி ஊர்வலத்தின் போது துக்கம் அனுசரிப்பவர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர். [AP Photo/Bilal Hussein]

காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, இஸ்ரேல் கிட்டத்தட்ட அன்றாடம் எல்லைக்கு அப்பால் ஹிஸ்புல்லாவுடன் துப்பாக்கிச் சூடுகளைப் பரிமாறிக் கொண்டுள்ளது. இன்றுவரை இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களும் குண்டுத் தாக்குதல்களும் 340 ஹிஸ்புல்லா உறுப்பினர்களையும் டசின் கணக்கான குடிமக்களையும் தெற்கு லெபனானில் கொன்றுள்ளன. ஹிஸ்புல்லா ஏவிய ராக்கெட்டுக்கள் 10 இஸ்ரேலிய குடிமக்களையும் 15 இஸ்ரேலிய படையினரையும்தான் கொன்றுள்ளன. ஆனால் அக்டோபருக்கு பின்பு மிக மூத்த ஹிஸ்புல்லா தளபதியான தலேப் அப்துல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்த பின்னர் கடந்த வாரம் தாக்குதல் பரிமாற்றங்கள் குறிப்பிடத்தக்க வகையில் தீவிரமடைந்தன. இதற்கு விடையிறுக்கும் வகையில் ஹிஸ்புல்லா சனிக்கிழமை வடக்கு இஸ்ரேலில் உள்ள மவுண்ட் மெரோன் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் தளத்தைத் தாக்கியது. இந்த தாக்குதலால் “படைப்பிரிவின் திறன்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை” என்று இஸ்ரேலிய பாதுகாப்புப் படை வலியுறுத்திக் கூறத் தள்ளப்பட்டது.

செவ்வாய்க்கிழமை, ஹிஸ்புல்லா ஹைஃபாவில் உள்ள இராணுவத் தளங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பின் ட்ரோன் காட்சிகளை வெளியிட்டது, இது வடக்கில் இஸ்ரேலின் வான் பாதுகாப்பின் வரம்புகளை அம்பலப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலின் வெளியுறவு மந்திரி இஸ்ரேல் காட்ஸ் ஒரு அறிக்கையில் பின்வருமாறு பதிலளித்தார், “ஹிஸ்புல்லா மற்றும் லெபனானுக்கு எதிரான விளையாட்டின் விதிகளை மாற்றுவது குறித்து முடிவெடுக்கும் தருணத்திற்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம். ஒரு முழு அளவிலான போரில், ஹிஸ்புல்லா அழிக்கப்படும், லெபனான் கடுமையாக தாக்கப்படும்.”

இதற்குப் பின்னர் இஸ்ரேலிய இராணுவ அறிக்கை ஒன்றை வெளியிட்டு லெபனான் மீதான தாக்குதல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று குறிப்பைக் காட்டியது. “நிலைமையை மதிப்பீடு செய்வதன் ஒரு பகுதியாக, லெபனான் மீதான தாக்குதலுக்கான செயற்பாட்டுத் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளன, களத்தில் படைகளின் தயார்நிலையை தொடர்ந்தும் விரைவுபடுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று அது அறிவித்தது.

பைடென் நிர்வாகம் மத்திய கிழக்கிற்கான அதன் சிறப்புத் தூதர் அமோஸ் ஹோச்ஸ்டீனை அப்பகுதிக்கு அனுப்பியது. அங்கு அவர் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட் மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோருடன் திங்களன்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஹெர்சாக், “வடக்கு எல்லையில் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்கான அவசரத் தேவையை” ஹோச்ஸ்டீனுடன் விவாதித்ததாகக் கூறப்படுகிறது, இது ஹிஸ்புல்லாவை அழிப்பதற்கான ஒரு சொற்றொடராகும்.

ஊடக செய்திகள் ஹோச்ஸ்டீனுடன் பயணத்தை, மோதலைத் “தீவிரப்படுத்தும்” ஒரு முயற்சியாக சித்தரித்த அதேவேளையில், யதார்த்தம் என்னவென்றால், மத்திய கிழக்கை ஒரு பேரழிவுகரமான பிராந்தியம் தழுவிய போரை நோக்கி உந்தித் தள்ளுவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மிகவும் ஆத்திரமூட்டும் பாத்திரம் வகித்து வருகிறது என்பதாகும். அனைத்திற்கும் மேலாக வாஷிங்டன் அதன் இஸ்ரேலிய கூட்டாளி மீது தற்காலிகமாக தடைகளை பிரயோகித்து வருவதாக தோன்றுகிறது. ஏனென்றால், தெஹ்ரானுக்கு எதிரான போருக்காக அரபு வளைகுடா நாடுகளை உள்ளடக்கிய ஒரு ஈரானிய-விரோத கூட்டணியை ஒன்றிணைக்க அது அதிக நேரம் ஒதுக்க விரும்புகிறது. ஆனால், அதன் தாக்குதல் நாயான இஸ்ரேல் லெபனானில் ஒரு போரைத் தொடுத்தால், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐயத்திற்கு இடமின்றி அதற்கு முழு ஆதரவையும் கொடுக்கும்.

முழு இஸ்ரேலிய அரசியல் நடைமுறையும் லெபனானில் போரை விரும்புகிறது. அகன்ற இஸ்ரேல் என்ற சியோனிச செயற்பட்டியல், காஸாவில் இனப்படுகொலை மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களை மேலும் விரிவுபடுத்துதல் ஆகியவற்றின் மூலம் அடையப்பட வேண்டும். இது லெபனானில் ஹிஸ்புல்லாவை நசுக்குவதையும் அவசியமாக்குகிறது. நெதன்யாகுவும் அவரது அதிவலது அரசாங்கமும் காஸாவில் இனப்படுகொலையைத் தொடரவும், அதேநேரத்தில் வடக்கு முனையில் ஒரு போரைக் கட்டவிழ்த்து விடவும் தீர்மானகரமாக உள்ளனர். தன்னுடைய பாசிச கூட்டாளிகளான பெசலில் ஸ்மோட்ரிச் (Bezalil Smotrich) மற்றும் இட்டாமர் பென் குவிர் (Itamar Ben Gvir) ஆகியோருக்கு சுதந்திரமாக ஆட்சி செய்யக் கொடுத்த நெதன்யாகு, மேற்குக் கரையில் குடியேற்றவாசிகளின் வன்முறை வெடிப்பையும், அங்கு 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களின் உயிரைப் பறித்த மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்படுவதற்கு இட்டுச் சென்ற இராணுவ சோதனைகள் மற்றும் கைதுகளின் வலையமைப்பையும் மேற்பார்வையிட்டுள்ளார்.

ஜூன் 9 அன்று நெதன்யாகுவின் போர் மந்திரிசபையில் இருந்து விலகிய தேசிய ஒற்றுமைக் கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ், லெபனானில் போர் தொடுப்பதற்கு வசதியாக ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை முடிக்க விரும்புகிறார். கான்ட்ஸ் உடன் போர் அமைச்சரவையில் இருந்து விலகிய மற்றொரு தேசிய ஐக்கிய அங்கத்தவரான சில்லி ட்ரோப்பர், சமீபத்தில் நியூ யோர்க்கர் பத்திரிகைக்கு கூறுகையில், “யூதேயா மற்றும் சமாரியாவில் [மேற்குக் கரையில்] பாலஸ்தீனிய அதிகாரத்தை நாங்கள் பலப்படுத்த விரும்புகிறோம், அரசாங்கம் செய்வதைப் போல அதை அழிக்கக் கூடாது. காஸாவில் உள்ளூர் காஸா படைகளுடன் இணைந்து செயல்பட நாங்கள் முன்மொழிகிறோம். பிணைக்கைதிகளை தாயகத்திற்குக் கொண்டுவருவதற்கான மிக நீண்டகால உடன்பாட்டை நாங்கள் முன்மொழிந்துள்ளோம், ஏனென்றால் அது சரியான விடயம் என்பதால் மட்டுமல்ல, மாறாக அதன்பின் போரின் ஒருங்குவிப்பை காஸாவில் இருந்து வடக்கிற்கு மாற்ற முடியும்,” என்றார்.

அதிகாரத்தில் நீடிக்கவும், குற்றவியல் விசாரணையைத் தவிர்க்கவும் அவரது பாசிச கூட்டாளிகளின் தொடர்ந்த ஆதரவு தேவைப்படும் நெதன்யாகு, போரை விரிவுபடுத்துவதன் மூலமாக அவரது போட்டியாளர்களின் அடியில் இருந்து அடித்தளத்தை துண்டிக்க நோக்கம் கொண்டுள்ளார். “கள உண்மைகளை” உருவாக்குவதன் மூலம், அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்த நம்புகிறார்.

கடந்த அக்டோபரில் நெதன்யாகுவின் இனப்படுகொலை கொலைகார கும்பலில் இணைவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே ஒரு போர் குற்றவாளியாக இருந்த கான்ட்ஸ், காஸா மீதான இனச் சுத்திகரிப்பை முழுமையாக ஆதரிக்கிறார். சென்ற மாதம் ரஃபா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலை தேசிய ஐக்கிய மந்திரிசபை உறுப்பினர்கள் ஆதரித்தனர், அது 700,000 மக்களை இடம்பெயரச் செய்தது. பாலஸ்தீனியர்கள் மத்தியில் கொடூரமான இறப்பு எண்ணிக்கையை அவரது கன்னை ஒருபோதும் விமர்சித்ததில்லை. அவர்களில் 37,000 க்கும் அதிகமானவர்கள் IDF ஆல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். டிராப்பரின் கருத்துக்கள் தெளிவாக்குவது போல், லெபனான் போர் பற்றி அவர்கள் காட்டும் ஆர்வத்தில் சற்றும் குறைந்தவர்கள் அல்ல.

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆரம்பத்தில் இருந்தே இந்த இனப்படுகொலையை முழுமையாக ஆமோதித்து உடந்தையாக இருந்து வந்துள்ளது. பாலஸ்தீனிய பிரச்சினைக்கு இஸ்ரேலின் “இறுதி தீர்வை” ஈரானை இலக்கு கொண்ட பிராந்திய அளவிலான போருக்கான தயாரிப்பின் முக்கிய கூறுபாடாக அது காண்கிறது. இதனால் தான் பைடென் நிர்வாகம் ஏப்ரல் தொடக்கத்தில் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகம் மீதான இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தது. இது, மூத்த ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை அங்கத்தவர்களின் உயிர்களைப் பறித்ததுடன், கட்டுப்பாடற்ற தீவிரப்பாட்டைத் தவிர்ப்பதற்காக தெஹ்ரான் தந்தி அனுப்பியதன் மூலம் இஸ்ரேலிய தளங்கள் மீது ஒரு டிரோன் தாக்குதலைக் கொண்டு பதிலடி கொடுக்க இஸ்லாமிய குடியரசை நிர்பந்தித்தது. இந்தப் போரின் மூலமாக எரிசக்தி வளம் மிக்க மத்திய கிழக்கில் அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாக்க முடியும் என்றும், ரஷ்யா உட்பட அதன் புவிசார் மூலோபாய போட்டியாளர்களுக்கு எதிராக, எல்லாவற்றிற்கும் மேலாக சீனாவுக்கு எதிராக ஒரு அடி கொடுக்க முடியும் என்றும் வாஷிங்டன் நம்புகிறது.

ட்ரம்ப் மற்றும் பைடென் இருவரின் கீழும், இஸ்ரேல், சவூதி அரேபியா, ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) உட்பட பிராந்தியத்தில் உள்ள தெஹ்ரான் எதிர்ப்பு அச்சை ஒன்றிணைக்க வாஷிங்டன் வேலை செய்துள்ளது. இந்த பரந்த மூலோபாயம் நெதன்யாகு மற்றும் அவரது பாசிசவாத கூட்டாளிகளால் சிக்கலாக்கப்படுகிறது. மேற்குக் கரையில் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு ஒரு அடையாள பாத்திரத்தைக் கூட ஏற்க மறுத்து, பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் ஒரு உடன்பாட்டை எட்டாமல் இருப்பது என்பது, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பிற வளைகுடா ஷேக் ஆட்சிகளை அதன் ஈரான்-விரோத கூட்டணியில் சேர இணங்க வைப்பதுக்கு வாஷிங்டனுக்கு மிகவும் கடினமாக்குகிறது.

எனவே பைடென் நிர்வாகம் அதன் விருப்பங்களைத் திறந்து வைத்துள்ளது. இஸ்ரேலுக்கு விஜயம் செய்தபோது, ஹோச்ஸ்டீன் நெதன்யாகு மற்றும் பிற அரசாங்க அதிகாரிகளை மட்டும் சந்திக்கவில்லை, மாறாக கான்ட்ஸ் மற்றும் போர் அமைச்சரவைக்கு வெளியில் இருந்து வருகின்ற ஆனால் இனப்படுகொலையை ஆதரிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் ஆகியோரையும் சந்தித்தார்.

மத்திய கிழக்கில் போர் தொடுப்பதற்கான சிறந்த தந்திரோபாயங்கள் மீதான கன்னை மோதல்கள் எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு பிராந்தியந்தழுவிய மோதலை நோக்கி உந்துதல் கொடுப்பது குறித்து அங்கே எந்த சந்தேகமும் இல்லை —அதன் இஸ்ரேலிய தாக்குதல் நாய் லெபனான் மீது படையெடுத்தால் வெகு விரைவில் மோதல் வெடிக்கக்கூடும். இஸ்ரேல் அதன் வடக்கு எல்லையில் எவ்வாறு “பாதுகாப்பை மீட்சி” செய்ய உத்தேசித்துள்ளது என்பது குறித்து ஹோச்ஸ்டீனுக்கு அப்பிராந்தியத்தில் விளக்கமளிக்கப்பட்ட அதேவேளையில், காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் சியோனிச ஆட்சிக்கு 18 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவ தளவாடங்களை அனுப்புவதற்கு அவர்களின் ஒப்புதலை வழங்கினர். இந்த தொகுப்பில் 50 எஃப் -15 போர் விமானங்களும் அடங்கும்.

பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சி உறுப்பினரான பிரதிநிதி கிரிகோரி மீக்ஸ், “ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவால் முன்வைக்கப்படும் உண்மையான அச்சுறுத்தல்களுக்கு எதிராக தன்னைக் காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கு ஆதரவு” என்று கூறி தான் முன்பு நிறுத்தி வைத்திருந்த உடன்பாட்டிற்கு தன் ஆதரவை விளக்கினார்.

லெபனானுக்கும் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் போர் அபாயம், பிராந்தியம் முழுவதும், அனைத்து மத, இன, தேசிய வேறுபாடுகளைக் கடந்து, வட அமெரிக்கா, ஐரோப்பிய ஏகாதிபத்திய மையங்களில் இருக்கும் தொழிலாளர்களுடன் போர் வெறியர்களை நிறுத்துவதற்கான போராட்டத்தின் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. காஸாவில் இஸ்ரேலும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் காட்டும் காட்டுமிராண்டித்தனமும், லெபனானிலும் ஈரானுக்கு எதிராகவும் பொறுப்பற்ற முறையில் போருக்கு எரியூட்டுவதும் நெருக்கடி நிறைந்த சமூக ஒழுங்கின் வெளிப்பாடுகள் ஆகும். உலக முதலாளித்துவம் முக்கிய வளங்கள் மற்றும் புவிசார் மூலோபாய செல்வாக்கின் மீதான கட்டுப்பாட்டிற்காக உலகை மறுபங்கீடு செய்வதில் ஈடுபட பெரும் சக்திகளை உந்தித் தள்ளுகிறது. முதலாளித்துவவாதிகள், போர் மற்றும் பாசிசவாதத்தில் தஞ்சமடைவதற்கு எதிராக உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தின் தலைமையிலான ஓர் உலகளாவிய போர்-எதிர்ப்பு இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.

Loading